விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மார்ச், 2019

கங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை






தமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்றிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். அவற்றை ஆவணப்படுத்தவும் செய்தனர். அதனாலேயே பிற்காலச்சோழர்களின் வரலாற்றை நம்மால் விரிவாக கட்டமைக்க முடிகிறது. சோழர்களின் வீரம்,அரசியல் இவை சார்ந்து பல புதினங்களும்  வெளிவந்து உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றோடு சுவாரஸ்யமான சம்பவங்களைப் புனைந்து வாசகரின் கவனத்தை ஈர்ப்பவை.
வரலாறு என்பதே சம்பவங்களின் தொகுப்பு தானே. ஆனால் நல்ல இலக்கியம் சம்பவங்களைப் பார்ப்பதில்லை. அவை நிகழ்ந்த அல்லது நிகழ்த்திய மனிதர்களைத் தான் தேடும். ஒரு பெருங்கோவிலைக் கட்டியவனின் பெயரை வரலாறு பதிவு செய்யும். ஆனால் இலக்கியமோ அப்பெருங்கோவிலை கட்டியவனின் மனதில் அன்று சுழித்தோடிய கவலைகள் ,உவகைகள், ஐயங்கள் இவற்றைப் பதிவு செய்யும்.
கோவிலைக் கட்டியவன் என்றால் மன்னனை மட்டுமல்ல, உளி தட்டிய சிற்பியையும்,சிற்பமாய் உறைந்த ஆடல் நங்கையையும் சேர்த்து தான்.
கங்காபுரம் புதினம் ,அவ்வாறே சோழமன்னன் ராஜேந்திரனின் அகவெளியை பதிவு செய்ய முயல்கிறது. தனிமையும், வெறுமையும்,கைவிடப்படலும் சாமானியனைப் போலவே மாமன்னனையும் அலைக்கழிக்கும் என அது நினைவுறுத்துகிறது.
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சில வருடங்கள் முன் நான் சென்ற போது எனக்கு முதலில் தோன்றியது இது தான்..”ஏன்?” தஞ்சையைப் போல ஏன்? சற்று சிறியதாய் ஏன்?   இன்னொரு தலைநகரம் ஏன்? தஞ்சை போல இங்கு பெருநகரம் இல்லையே ஏன்? தஞ்சைக்கு ஈடாயும் அதை விஞ்சும் சிற்பங்களையும் பாராட்ட மக்கள் இல்லையே ஏன்?

இது போல நூராயிரம் கேள்விகள் அந்த மாமன்னனின் மனதிலும் தனைமையில் ஓடியிருக்கும். ”தஞ்சையைப் போல” “தந்தையன்ன” என்று உவம உருபுகள் அவனைக் குத்திக் கிழித்திருக்கும். அந்தக் கேள்விகளையும், வலியையும் தான் ஆ.வெண்ணிலா தன் புதினத்தில் நம் முன் வைக்கிறார்.
நாம் மனதில் பெரும் பிம்பமாய் நினைக்கும் எவரையும் சராசரித் தளத்தில் வைத்து பொருத்திப் பார்ப்பதில்லை. பிம்பங்களை வழிபடுகிறோம், எதிர்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம்.  ஆனால் பிம்பங்களும் மனிதர்கள் என்பதை மறந்து விடுகிறோம். ஆயிரம் சிடுக்குகள் கொண்ட அவர்கள் மனத்தில் நுழைந்து அம்மனத்தை புரிந்து,அங்கீகரிக்க சராசரி மனம் அல்ல கவி மனம் வேண்டும். கங்காபுரத்தில், ஆயிரம் ஆண்டுகளாய் அலைக்கழியும் ஆற்றாமையை எழுத்தில் வடிக்கிறார் வெண்ணிலா. காலத்தின் துகள்களாய் அந்த அகத்தனிமை நம் மேல் மோதுகிறது.
இரு பெரும் சோழமன்னர்கள்,தந்தை மகனாய் எதிர் எதிரே நிற்கிறார்கள். ராஜராஜன் தன்னை ஒரு பீடத்தில் ஏற்றி கீழ்நோக்கிப் பார்க்கிறான். மதுராந்தகனோ பீடம் விட்டு இறங்கி பார்வையை சமமாக்குகிறான். மக்களின் மன்னனாக தன்னை அறிய விழைகிறான். விழைவதெல்லாம் அரசன் என்றாலும் கைக்கொண்டு விடுமா என்ன? தாமதமாய்  வந்த அரியணை யை  அவன் கடமையாய் ஏற்கிறான். கடமை மட்டுமே எஞ்சினால் உட்புகும் வெறுமை என்பது காதலும்,கலையும் வெற்றியும் போட்டுக் கொட்டினாலும் நிரம்பாத வெறுமை. “தந்தையைப் போல” என்ற அடைமொழி பெய்கீர்த்தியாய் அவன் சிதை வரை சுடுகிறது.

சதுரத்தடிகளாய்   நாவலின் இறுதியில் ஊழ் பேசுகிறது..

“தகுதி இருந்தாலும் சிலருக்கு புகழ் வளராது. அந்தப் புகழில் பங்கெடுக்க யார் யாரோ வருவார்கள். நீ அப்படியொரு துயரத்தின் அடையாளம்..
நீ தப்பித்துக் கொள்ள தலைநகர் மாற்றலாம்,கோயில் கட்டலாம், கங்கையைக் கொண்டு வந்து புனித ஏரி வெட்டலாம். ஆனால் எதுவும் உன் துயர் போக்காது” 

கங்காபுரத்தின் ஒவ்வொரு பக்கமும் இந்த இறுதி வார்த்தைகளை நோக்கித்தான் நகர்கின்றது. வரலாற்று புதினம், ஒரு ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவிதல் அத்தனை எளிதல்ல. 



விலகல்களும் உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. சில இடங்களில் வரலாற்றுத் தரவுகளை முன் வைப்பதற்காகவே உரையாடல்களும், சம்பவங்களும் நிகழ்வது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. அதே போல ஆசிரியர் சோழர்கள் மீது வழிபாட்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு பிரமிப்பு மனநிலையில் இருப்பதாய் உணர்ந்தேன். படைப்புக்கு வெளியே அந்த மனநிலை சரி. படைப்பினுள் அது சமநிலையில் விலகல் ஏற்படுத்தும்.  சதுரத்தடிகளின் கட்டுடைக்கும் வார்த்தைகள், வீரமாதேவி போன்றோர் அவ்வப்போது முன்வைக்கும் கூரான விமர்சனங்கள் இவையனைத்தையும் தாண்டி அந்த சமநிலை விலகலை உணர முடிகிறது.

 மற்றொன்று,நாவலில் பெண்களின் பங்கு,மன்னனின் பிம்பத்தை/மன அமைப்பை கட்டியெழுப்பதற்காகவே இருப்பதாய் தோன்றுகிறது. நாவலின் குவிமையம் வேறாய் இருக்கும் போது இதை குறையாய் முன் வைக்க இயலாது. வைக்கவும் முடியாது. என் தனிப்பட்ட ஆதங்கமாய் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

எது எப்படியென்றாலும், புறமல்ல வரலாற்றை செதுக்குவது,அகம் தான் அதை நெய்கிறது என அழுத்தமாய் பதிவு செய்யும் கங்காபுரம் தமிழின் முக்கியமான படைப்பு. 

செவ்வாய், 6 மார்ச், 2018

அருவி விமர்சனம்- ஆண்டவரே! தயை கூர்ந்து எம்மிடம் மன்னிப்பு கோருவீராக..!







பலரும் பாராட்டிக் கொண்டாடித்தீர்த்த நிலையில் அருவி திரைப்படம் பார்த்தேன்.  இருந்தது. ஏன் இப்படம் பாராட்டப்படுகிறது என்று நிஜமாகவே புரியவில்லை.. எல்லாத் தரப்பும் பாராட்டிய இப்படம் அதிக வணிக சமரசங்கள் இல்லாத கலைப்பட சட்டகத்துக்குள் பொருத்தக் கூடிய படம். ஆனாலும் பலரையும் சென்றடைந்து பரந்துபட்டு ரசிக்கப்பட்டது. கலைப்படங்கள் வணிக வெற்றி பெறுவதும் எல்லாரலும் பாராட்டப் பெறுவதும் ஏன்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்யும். காரணம் அது ஒரு வகையில் சமூக ரசனை மேம்பாடு, சிந்தனை வளர்ச்சி மட்டுமல்லாமல் கலையின் முதிர்ச்சிக்கும் வழி தரும்.

அத்தகைய கலை முயற்சி, கருத்தியல் ரீதியாக தன் சமூகத்தை ப்ரதிபலிக்க மட்டுமல்லாமல் மேம்படுத்தவும்  செய்யும் போது அதைப் பாராட்டலாம். தன் சமூகத்தின் மாறாத பிற்போக்குக்களை முன்வைப்பது மட்டுமில்லாமல் அதனை தன் கருத்தோட்டத்தைக் கடத்தும் ஊடகமாக பயன்படுத்துவது எனக்கு ஒரு வகையில் வருத்தமும் இன்னொரு வகையில் அதிர்ச்சியும் கொடுப்பதாய் இருந்தது.
அருவி , ஒரு பெண்னின் கதை. சமூகத்தாலும் , நோயாலும் சிதைக்கபட்டு,தனிமைப்படுத்தப்பட்ட பெண். சமூகத்திடம் அன்பு செலுத்துங்கள் என இரைஞ்சுகிறாள். அவளைக் குறீயீடாக எடுத்துக் கொண்டால் அவள் மானுடத்தை நோக்கி, ‘யோசிக்காமல் ஓடும் மனிதர்களே.. நில்லுங்கள், சிறிய விஷயங்களை ரசியுங்கள் , ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்,உங்கள் மனதின் மூலையில் எங்கேனும் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும், அதை தேடுங்கள்” என்கிறாள் அருவி.

ஆம். காலத்தின் தேவை தான் அருவி. ஆனால் அவள் உதடுகள் சொல்வதை மனம் சொல்கிறதா? அப்படி மனம் சொன்னால் அவள் மனம் யாருடைய மனம். தன்னை வன்புணர்ந்த ஆண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்< அன்பு செலுத்துங்கள் எனக் கேட்க்கும் பெண்ணின் மனம் யாருடைய மனம்?
சரி அவள் அன்பை எந்த பாரபட்சமும் இல்லாமல் வழங்குபவள் என்றும் வைத்துக் கொள்வோம், எல்லா ஆண்களாலும் உடலால் மனதால் சிதைக்கப்பட்டவள், அவை பற்றி எதுவும் பேசாமல் நுகர் கலாச்சாரம் குறித்தும், அதன் அர்த்தமின்மை குறித்தும் 15  நிமிடங்கள் நீளமாய்ப் பேசுகிறாள். தன்னை நுகர ஆசைப்படும்  தொலைக்காட்சி இயக்குனரிடம் அவள்  மனம் வெதும்பிக் கேட்கும் ஒரே கேள்வி ‘டி.ஆர்.பி க்காக எதுவும் செய்வீங்களா?” இவை எதுவும் தற்செயலானவயோ அல்லது கதைப்போக்கில் நிகழ்பவயோ அல்ல. அருவியின் சூழ்நிலைகள் மிக கவனத்துடன் கட்டமைக்கப்பட்டிருகின்றன. அவள் வாழ்வில் இருக்கும் ஆண்கள் யாரும் அவளுக்கு நியாயம் வழஙியவர்களில்லை. அவளது அப்பா ,தம்பி, முதலாளி,ஆன்மிக குரு.,தோழியின் அப்பா யாருமே அவளுக்கு நியாயம் வழங்கவில்லை. அதவது  பெண் வாழ்வின் பல நிலைகளில் வரும் எந்த ஆணும் அவளுக்கு துணையில்லை. அவர்களை அவள் வழிதவறிய குழந்தைகளைப் போல் பாவிக்கிறாள். தன் பங்கு நியாயத்தைக் கேட்கவும் தயாராக இல்லாத தன் தந்தையிடம் அவள் குழந்தையாய் அன்பிற்கு தவித்து அழுகிறாள். அப்போதும் அவள் தன் தாய் குறித்து எதுவும் யோசிப்பதில்லை.

இவை எல்லாமும் தற்செயல் என்று கொள்வோம்,மிக அப்பட்டமாய் நிகழும் சொல் வன்முறை ‘அதப் போய் எப்படி அண்ணே மூணு பேர்’ என ஒரு பதின்பருவ இளைஞன் மீண்டும் மீண்டும் கேட்பது. ஒரு முறை அல்ல பல முறை. அது நகைச்சுவையா? பகடியா? எப்படி அதை எடுப்பது. எதுவானாலும் அது வக்கிரம். சமீபத்தில் ஒரு வணிக திரைப்படத்தில் கூட இப்படி ஒரு முகம் சுளிக்கும் உரையாடலைக் கேட்கவில்லை. அருவிக்கு அது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லை.

இன்னொரு தற்செயல். அருவிக்கு நோய் வர சொல்லபட்ட காரணம். அபத்தம். ‘Butterfly effect’ ஐ காட்சிப்படுத்த வேண்டுமானால் அந்தக் காரணம் பயன்படலாம். அதன் மருத்துவ நம்பகத்தன்மை ஒரு புறம் இருக்கட்டும் .எதற்கு அப்படி ஒரு சுற்றி வளைக்கப்பட்ட காரணம்? அருவி “தவறு ”செய்யவில்லை என்று நிரூபிக்கவா? அவள் தன் அப்பாவிடம் தப்பு செய்யவில்லை எனக் கெஞ்சவா? நோயை ஒரு ஆயுதம் போல தன்னை நுகரும் ஆண்களுக்கு தண்டனையாக தருவதைப் போல் பயமுறுத்திப் பார்க்கிறாள். ஒரு நோய், அதன் காரணம், அதன் விளைவு, அதை சமூகத்திடம் சொல்ல வேண்டிய முறை என எந்த பொறுப்புமே இல்லாமல் செல்லும் கதை.

எத்தனை தற்செயல்கள்..திரைப்படத்திற்குள் மட்டுமல்ல..ிரைப்படத்தைத் தாண்டியும் பல தற்செயல்கள்…எந்த ஊடகமும் இந்த விமர்சனங்களை முன்வைக்கவில்லை. விகடன் எல்லாக் குறைகளையும் சொல்லிவிட்டு,இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல..அருவி நம்ம ராசாத்தி என்று கொண்டாடுகிறது..தி இந்து சொல்லும் ஒரே குறை பிராமண துவேஷம் (இது படத்தின் நோக்கதிற்கே எதிராய் இருக்கிறதாம்..இது மட்டும் தான் அவர்கள் கண்ணில் பட்டதா??)
எனக்கு தெரிந்த வரை  காலச்சுவடு மட்டுமே காட்டமான விமர்சனத்தை பதிவிட்டுள்ளது.


சரி விடுங்கள்..ஒரு வகையில் பெருமை தான்…தன் ஆண்டவனை மன்னிப்பு கேட்க சொல்லி உருகும் அருவி என்னும் ராசாத்தியால் நாம் எல்லோரும் தவறுகளை எத்தனை சுலபமாய் மன்னிக்கும் பெரிய மனதுக்காரர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ! அவ்ளோ நல்லவங்களா நாம?


திங்கள், 17 ஜனவரி, 2011

ஆடுகளம் விமர்சனம்



வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஜெயபாலன் கிஷோர் தபசி நடிப்பில் ஆடுகளம் வெளிவந்துள்ளது ஆடுகளம். நேற்று மாலை பெங்களூரில் குடும்பத்துடன் பார்த்தேன். தமிழ் சினிமா இப்போதெல்லாம் நிறைய நம்பிக்கை தருகிறது. மகிழ்ச்சி.


கதை :- ஒரு பர பர நாவல் போல பயணிக்கும் கதை. கருப்புக்கு (தனுஷ்) சேவல் சண்டை தான் உயிர். சேவல் சண்டையின் எல்லா நுணுக்கங்களும் தெரிந்தவர் பேட்டைகாரர் ( ஜெயபாலன்) . கருப்பு அவரை தன் குருவாக தந்தையாக நினைக்கிறார். கருப்பு தயார் செய்த சேவல்களில் ஒன்று சரியில்லை என அதை அறுத்து போட்டு விட சொல்கிறார் பேட்டைகாரர். ஆனால் கருப்பு மனமில்லாமல் அதை செய்வதில்லை. அதே சேவல் ஒரு சந்தர்பத்தில் போட்டியில் வென்றுவிட பேட்டைகாரருக்க்கு கருப்பின் மேல் பொறமை வளர்கிறது. பொறாமையின் உச்சத்தில் கருப்பை மொத்தமாய் அழிக்க துரோகத்தை ஆயுதமாக்குகிறார்..


ஆடுகளம் நிகழ்வது மதுரையில். மதுரையின் வட்டார தமிழ் மணக்கும் வசனங்கள். எல்லா நடிகர்களுமே வசனங்களை அதனை லாவகமாக பேசுகிறார்கள். இதனால் அவற்றை புரிந்துகொள்ள அவ்வபோது எனக்கு சிரமம் ஏற்பட்டது. ஒரு ஆங்கில படம் பார்ப்பது போல மிகுந்த குவிப்புடன் படம் பார்க்க வேண்டி இருந்தது.

சேவல் சண்டை படத்தின் கதையை முடுக்கி விடும் கருவி. கதாபத்திரங்களின் தொழில், உணர்வுகள், தன்முனைப்பு எல்லாம் சேவல் சண்டையின் வழியாகவே வெளிப்படுகிறது. காசு உணவு உறவு இவை எல்லாம் தாண்டி மனிதன் தனக்கான வட்டத்தை எதோ ஒன்றின் வழியில் உருவாக்கி கொள்கிறான். மதம் இனம் மொழி சாதி நாடு மட்டுமல்ல அது சேவல் சண்டையாக கூட இருக்கலாம். சேவல் சண்டை நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அது சற்று மிகையாகவும் சில இடங்களில் ஸ்பெஷல் எபக்ட்ஸ் துணையுடனும் எடுக்கப்படிருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆடுகளத்தை அதன் யதாரத்தம் அதிகம் கெடாமல் விறுவிறுப்புடன் காண்பித்து இருக்கிறார்கள். (கொஞ்சம் ameros perros இன் நாய் சண்டையை ஞாபகபடுத்தினாலும் கூட)

படத்தின் முதல் பாதி சேவல்கள் சண்டையிட இரண்டாம் பாதியில் அதே ஆக்ரோஷத்துடன் மனிதர்கள் வாழ்வெனும் ஆடுகளத்தில் சண்டையிடுகிறார்கள். பொறாமையும் துரோகமும் சந்தேகமும் முட்டி மோதிக் கொள்கின்றன. உணர்வுகள் சம்பவங்களோடு சிக்கலில்லாமல் பிண்ணி பிணைவதை திரைக்கதையக்குவது மிகவும் சிரமம் என்றே நினைக்கிறேன். ஆடுகளம் இதில் வெற்றியடைகிறது.



தனுஷ், ஜெயபாலன் இருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்கள். கேமராவும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மதுரையின் நிலவமைப்பை உயிர்ப்புடன் கண் முன் நிறுத்துகிறது கேமரா. பாடல்களில் சமாளித்தாலும் பின்னணி இசையில் மீண்டும் மீண்டும் இளையராஜாவின் வெற்றிடத்தை நினைத்து கொள்ள வைக்கிறது ஜி.வி. பிரகாஷின் இசை.


இனி பிரச்சனைகளுக்கு வருவோம், ஆடுகளத்தின் பிரச்னை சற்று வித்தியாசமானது. தங்குதடையில்லாமல் செல்லும் திரைக்கதையே அதன் பிரச்னையாகவும் அமைந்து விடுகிறது. 2.5 மணி நேரம் சமபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது அதிக குவிப்பை பார்வையாளனிடம் கோருகிறது. ஒரு சராசரி தமிழ் பார்வையாளன் இன்னும் அதற்க்கு பழகவில்லை என நினைக்கிறேன். இது ஒரு புறம் இருக்க சம்பவங்களின் தொடர் அரங்கேற்றம் பாத்திரங்களின் வார்ப்பை, தன்மைகளை முறையாக உள்வாங்க முடியாமல் செய்து விடுகின்றன. ஆடுகளத்தின் பிரச்னை இந்த அவசரம் தான்.



அதே போல , பேட்டைகாரர் தட்டையான கதாபத்திரம் இல்லையென்றாலும் அவருக்கு விழும் வில்லன் இமேஜ் நெருடுகிறது . கருப்பு அவர் மேல் இறுதியில் காட்டும் அளவுக்கு அதிகமான பிரியம் அல்லது நன்றியுணர்வு அதன் காரணமாய் அவருக்கு அவன் அளிக்கும் மன்னிப்பு இதெல்லாம் வணிக சினிமாவின் பார்முலா போலத்தான் உள்ளது. கருப்பு பேட்டைகாரரை மீறி கோழி சண்டை விடுவது, அவர் ஆத்திரப்படும் போது அவரிடம் இருந்து விலகி வாழ்வது என தன்னை இழக்காமல் பயணிக்கும் திரைக்கதை இறுதியில் மெல்ல வணிக சூத்திரங்களுக்குள் அடங்குகிறது. முதல் paathiyil கோழி சண்டையில் எதிராளியாய் வரும் போலீஸ் மற்றும் அவர் சார்ந்த பாத்திரங்கள் தேவைக்கும் அதிகமான அளவு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இதனால் படம் முன்பாதியில் ஒரு படம் போலவும் பின் பாதியில் மற்றொரு படம் போலவும் தோற்றமளிக்கிறது.

குறைகளை தாண்டி இது  மனித உறவுகளை ஆடுகளத்தில் விட்டு மோதி பார்க்க செய்யும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம். இந்த இரண்டாவது படம் முலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தரும் இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலைப்படுத்தி உள்ளார். வாழ்த்துக்கள்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

இரவுக்கு ஆயிரம் கண்கள்-- ( எஸ்.ராமகிருஷ்ணனின் - யாமம் )

”கிராமத்தில் உள்ள வீடுகளில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கின் சுடர்கள் இரவில் மக்கள் உறங்க துவங்கிய பிறகு யாவும் தனியே ஒரு இடத்தில் ஒன்று கூடுகின்றன ..அவை அந்தந்த வீட்டில் வாழும் மனிதர்களின் அன்றாட செயல்களை ,கோபதாபங்களை பகிர்ந்து கொண்டுவிட்டு இருட்டில் மறைந்துவிடுகின்றன ”எஸ்.ரா யாமம் முன்னுரையில்

எஸ். ராவின் யாமம் நாவல் குறித்து படித்தது முதலே எழுத வேண்டும் என்ற எண்ணம். இப்போது தான் எழுதுகிறேன்.

தமிழின் இந்த தலைமுறை முதன்மை படைப்பாளியாக நான் கருதும் எஸ்.ராவின் சமீபத்திய நாவல் யாமம் (2007).

யாமம் என்பது மிக ரகசியமான பொழுது. எஸ்.ரா கூறுவது போல மனிதன் தூங்கும் வேளையில் தான் அவனது கதைகள் வெளியே அலைகின்றன. மனிதர்கள் எல்லாருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். நறுமணம் போல காற்றில் கலைவது தான் மனிதர்கள் வாழ்க்கையும்.
 
இரவின் சுகந்தத்தை அத்தராக வடிக்க கற்ற ஒரு வம்சாவளி. ஒரு சுஃபி ஞானியின் அருளுடன் அவர்கள் வழி வழியாக இத்தொழிலை செய்து வருகிறார்கள். இந்த அத்தரின் பெயர் ‘யாமம்’.

மதராப்பட்டிணத்தின் சரித்திர பிண்ணனியுடன் ஆரம்பிக்கும் நாவல், அந்த நகரத்தின் சின்ன சின்ன சந்துகளான  கதைகளில் அலைகிறது. (நகரம் சுமக்கும் கதைகள் மீது எஸ்.ராவிற்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு) . பின்னிப் பிணையும் இந்த கதைகளில் மைய சரடு, எல்லா பேரிலக்கியங்களும் வியக்கும் பெரு மானுடத்தின் ஒட்டு மொத்த இயக்கம் குறித்த அளவிலா வியப்பும், அந்த சமுத்திரத்தின்  ஆர்பரிக்கும் அலைகள் மீண்டு சமுத்திரத்திற்க்கே சென்று விடுவதும் பின் மீண்டும்  வேறொரு நீர்த் தொகுப்பாகி பிரிதொரு அலையாகி விடுவதும் என முடிவில்லாமல் சுழலும் ஒரு அமைப்பை காட்சிப்படுத்த முயலுவதும் தான்.

அத்தர் தயாரிக்கும் கரீம் சூதில் நாட்டம் கொண்டு வீடு விட்டு வெளியேறுகிறான்.  அவனது மனைவிகள் அவனில்லாமல் வாழ்க்கையை தனித்து ஓட்ட, கடைசியில் வாழ்க்கையின் அழுத்தும் சுமையை இறக்க முடியாமல் அவர்கள் தத்தம் வழியில் பிரிந்து செல்கிறார்கள்.  கரீமின் மூன்றாம் மனைவி வெறுமனே காலத்தின் பழைய நினைவுகளுடன் அந்த இடிபாடான  அத்தர் தயாரிப்பு சாலையை பிரயோஜனமற்றுப் பார்க்கிறாள் . பரம்பரை பரம்பரையாக இரவின் சுகந்தத்தை வடித்தவர்கள் சுவடில்லாமல் காற்றில் கரைகிறார்கள்.

பத்ரகிரி-விசாலம் குடும்பம்; அவனது தம்பி திருச்சிற்றம்பலம்- மனைவி தையல். திருசிற்றம்பலம் படிப்பிற்க்காக லண்டன் செல்கிறான். தம்பிக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் பத்ரகிரி மெல்ல தையலிடம் விருப்பம் கொள்கிறான். இருவருக்கும் நிகழும் காமத்தின் பரிமளம் தையலின் நோயால் மெல்ல மறைகிறது.
லண்டன் செல்லும் சிற்றம்பலத்தின் தோழன் சற்குணம் லண்டனை போகத்த்டன் சுகிக்க வருகிறான். போகத்தை முழுமையாய் சுகிக்கும் அவன் லண்டனின் மற்றொரு பக்கம் தெரியும் போது அதை முழுமையாய் வெறுத்து அந்த மாநகரத்திற்க்கு எதிராய் ஒற்றையாய் சீறுகிறான்.

திருசிற்றம்பலம் தன் படிப்பை முடித்து கணித யந்திர கண்டுபிடிப்பிற்க்கான சாதனையின் பெருமையுடன் ஊர் திரும்பும் போது அவன் முகத்தில் அறைவது சிதறுண்ட அவன் குடும்ப நிலை.

தன்  பங்கு சொத்திற்க்காக  கோர்ட்டிற்க்கு அலையும் கிருஷ்ணப்பா , எலிசபெத் என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணின் மீது உள்ள காமத்தால் அவளை தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். ஒரு சுயநல ஒப்பந்தமாக ஆரம்பிக்கும் அவர்கள் உறவு அவர்கள் வாழும் மலையின் அமைதியில் மெல்ல ஆழம் கூடிக் கொள்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் அதன் எளிமையில் உள்ளது என ஏதோ ஒரு கணத்தில் உணரும் கிருஷ்ணப்பா தன் சொத்துக்களை புறந்தள்ளி மலையில் தன் பிரிய எலிசபெத்துடம் வாழ்கிறார். மலையின் தேயிலை தோடத்தில் வருமானம் வருகிறது. எலிசபெத் லண்டன் பார்த்து வர ஆசைப்படுகிறாள். திரும்பி வந்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை அனுப்பி வைக்கிறார். அவளும் அதற்க்கு உட்பட்டே செல்கிறாள். ஆனால் அவர்களது மலை விரைவில் தேயிலை வியாபரிகளின் விளைநிலமாகிவிடும் என குறிப்புடன் இந்த கதையும் முடிவுக்கு வருகிறது.

எல்லாக் கதைகளுமே கால நதி அடித்து செல்லும் திசையெல்லாம் முட்டி மோதி பின் எங்கோ யாரும் யூகிக்கா மூலையில் கரை ஒதுங்குகின்றன.
நாவல் முடியும் போது வாழ்க்கை குறித்த நம்பிக்கை தோன்றுவதில்லை. அதன் அர்த்தமின்மை குறித்த அபத்தமே தொங்கிக் கொண்டிருக்கிறது. அலையும் வாழ்க்கையின் அகத்தைஒன்றோடு ஒன்று முட்டி மோதும்  புறவயமான நிகழ்வுகள் கட்டமைக்கிறதா அல்லது புறத்தே நிகழும் சம்பவங்களும் சரித்திரமும் அகத்தின் எண்ணிலடங்கா உள்மடிப்புகளால் தீர்மானிக்கப்படுகிறதா  எனும் பதிலற்ற கேள்வியின் அனுபவத்தை தன் ஒவ்வொரு பக்கத்திலும் கொண்டிருக்கிறது யாமம் நாவல்.
ஆனாலும்  என் அனுபவத்தில் சில இடறுகளும் உண்டு. எஸ்.ராவின் நெடுங்குருதியில் வெயிலின் தகிப்பை உணர்ந்தது போல இன்நாவலில் இர்வின் ரகசியம் ஒரு படிமமாக என்னை எல்லாக் கணத்திலும் பின் தொடரவில்லை. எப்போது வேண்டுமானாலும் மாய யதார்த்ததிற்க்குள் (magical realism) புகுந்து விடக்கூடிய பரப்பு கொண்ட நாவல்.; ஆனாலும் சுஃபி ஞானியின் பகுதிகளில் மட்டுமே கொஞ்சமாய் சென்று விட்டு மீண்டுவிடுகிறது. இது படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும் இத்தனை விரிவான நாவலின் பரப்பு  மேலும் அகழப்பட்டிருக்கும் என்பது என் ஆதங்கம். பின் அந்த பண்டாரத்தின் கதை. சட்டென ஜெமோவின் நாவலுக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு. கதையின் மைய சரடு சராசரிகள் வாழ்க்கையின் கூட்டியக்கமாக இருக்கும் போது சதாசிவப் பண்டாரம் ஒரு விடுபடல் (exception)  போல வருகிறார். எஸ்.ரா ஆரம்பத்தில் ‘இந்தியாவில் சாமியாராகாமல் இருந்தால் தான் அதிசயம்’ என்று பண்டார வாழ்க்கையும் சம்சார வாழ்க்கை போல சமூகத்தின் ஒரு கூறே என குறிப்புணர்த்தினாலும் எனக்கு இக்கதை ஒட்டாமலே போகிறது கடைசிவரை.
மேலும் எஸ்.ராவின் படிமங்களும் உருவகங்களும் ஒரு வித மாதிரித்தன்மையை (template) பெற்றுவிட்டனவோ எனத் தோன்றியதை தவிர்க்க முடியவில்லை.
குறைகளாகத் தோன்றிய இவை எல்லாமே நாவல் தரும் ஒரு முழு அனுபவத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் போகின்றன. தமிழின் முக்கிய நாவல்களுல் ஒன்றாக சொல்லக்கூடிய யாமம் இலக்கியத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)


அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில்  இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தேன்.
எலிப்பத்தாயம் என்னை மிகவும் கவர்ந்தது.


படம் ஒரு அண்ணன் மூன்று தங்கைகளை பற்றியது. குறிப்பாக அண்ணன் - இரண்டாம் தங்கை (ராஜம்மை) உறவு கதையில் விஸ்தாரமாக நிகழ்கிறது.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் இவ்விருவரது குணங்களும் கட்டமைக்கப்படுகிறது. இந்த இருவரும் ஒரே வீட்டில் வாழும்  இரு வெவ்வேறு துருவங்கள் என நமக்கு புரிய தொடங்குகிறது. ஆணை மட்டுமே மையப்படுத்திய, அவனது பலவீனங்களை சகித்து, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவனை மீறி செய்ய இயல ஒன்றும் இல்லாமல்,அவன் மட்டுமே உலகம் என கொள்ளும் பெண்கள் நிறைந்த இந்திய குடும்ப சூழலின் துல்லிய ப்ரதிபலிப்புகள்  தான் உன்னி (அண்ணன்) மற்றும் ராஜம்மை.
ஒரு ஆழமான சமூக  விரிவாய்வு செய்யும் அளவு இவ்விரு கதைமாந்தரின் பாத்திரமும் நுணுக்கமான படிமங்களோடு படைக்கப்பட்டுள்ளது.


உன்னி -- உன்னியை போல நிறைய ஆண்களை என் சமூகத்தில் பார்த்துள்ளேன். அவனது இறுக்கமும் அதிகாரமும் வெளிப்படையாய் தெரியும் அவனது சோம்பலையும், கோழைத்தனத்தயும் மறைக்க இயலுவதில்லை. அதற்க்காக அவன் கவலைப்படுவதுமில்லை. சாவகாசமாக பரம்பரை சொத்தின் மூலம் பொழுதை கழிக்கும் அவன், சொகரியங்களுக்காக எந்த நிலையிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதில்லை; பிரச்சனைகளிலிருந்து நழுவி நழுவி ஓடும் அவனிடம் இருப்பது அவனுக்கான ஆண் ஈகோ மட்டும். தன்னை சார்ந்த பெண்களில் தனக்கு சாதகமான அம்சம் கொண்டவள் ராஜம்மை மட்டுமே என உள்ளூர உணர்ந்த அவன் ஆண் மனம் அவளை தன் காரியங்கள் எல்லாம் செய்யக் கூடிய ஒரு இயந்திரம் போலவே உபயோகிக்கிறான். உன்னியின் பாத்திரம் அவளை வெறும் இயந்திரமாக உபயோகித்தாலும் அவளிடம் உணர்வு சார்ந்த பெருத்த சார்பும் கொண்டதே. தன் உத்தரவுகளை அவளிடம் அலுங்காமல் வெளிப்படுத்தும் அவன், அவளிடம் எல்லா ஆண்களுமே தேடும் தாயின் அரவணைப்பு சொகுசை பெற்றுக் கொள்கிறான். அது அவனை தன் தினசரி வாழ்க்கை அமைப்புக்கு கொஞ்சம் கூட மாறுதல் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி அவளிடம் அதிகாரம் செய்வதில் தெரிகிறது. ஒரு பசுவை விரட்டுவதில் இருந்து , வெண்ணீர் போட்டு கொடுப்பது வரை அவனக்கு ‘ராஜம்மை ;ராஜம்மை’ மட்டும் தான்.
படம் முழுவதும் தன் தங்கையை தன் சௌகரியங்களுக்காக  ஏவுவதில் அவளிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு சுயநல சிறுவன் போலவே தெரிகிறான்.


ராஜம்மை -- பொறுமை,சகிப்பு, தீராத பணி, குடும்ப சுமை என தன்னை பற்றியே யோசிக்காத அல்லது யோசிக்க இடம் தரப்படாத பெண் தான் ராஜம்மை. காலையில் இருந்து இர்ரவு வரை அவள் செய்ய வேண்டியது எல்லாம் தன் அண்ணனுக்காக, தன் தங்கைக்காக. ஆனாலும் அவள் அதற்க்காக குறைப்பட்டுக்கொள்வதில்லை. ஒரு இடத்தில் கூட யாரிடமும் கடிந்தோ, குறை சொல்லியோ பேசுவதில்லை. வரிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த குறையும் சொல்லாமல் எத்தனை பெண்கள் இந்திய குடும்பங்களில் (நடுத்தர குடும்பங்களில் பொதுவாக)  தங்கள் புதிரற்ற மௌனத்தால் நாட்களை கடத்துகிறார்கள் என்பதற்கு ராஜம்மை ஒரு வகை மாதிரி. ஆனால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுதுவது அவர்களின் மௌனம் அல்ல. அவர்கள் குறையின்றி தங்கள் கடமையாகவே ஆண்களுக்கு பணி செய்கிறார்கள். தனக்கான மனதை அவர்கள் கிட்டதட்ட மறந்தே விடுகிறார்கள். ஆனால் ராஜம்மை ஒரு கட்டத்தில் தன் சகிப்புத்தன்மையை உடைக்கிறாள். ‘எத்தனை நாள் இந்த நரகம்’ என தன் அண்ணனிடம் கேட்கிறாள். இது வெற்றுக் குறீயிடு மட்டுமே. நம் இந்திய ராஜம்மைகளுக்கு  நிச்சயம் விதிக்கப்பட்டவைகளை தாண்டி கேள்வி கேட்டலும் கூட அது வெற்று மன ஆறுதலுக்காக மட்டுமே எனத் தெரியும். குடும்ப சட்டகத்திற்க்குள் அகப்பட்ட எலிகளாய் அடூர் அவர்களை உருவகப்படுத்துகிறார்.
ஆனால் கதை இதோடு முடிவதில்லை. ராஜம்மையின் சாவிற்க்கு பிறகு பயந்து வெளிறும் உன்னியும் ஒரு எலி தான். ஆணின் அடக்குதல் பெண்ணின் அடங்குதல் இரண்டுமே ஒரு வித ஒப்பந்தமே. அடக்குதல் மூலம் தன் பலவீனங்களை மறைக்கும் ஆண், அடங்குதல் மூலம் ஆணை திருப்திபடுத்தி தனக்கானவனாய் அவனை உருவாக்கிக் கொள்ளும் பெண் -  என இது ஒரு விளையாட்டோ எனத் தோன்றும். இந்த அடிப்படையில் ராஜம்மை ஒரு எலி என்றால் அவளின்றி தனித்து விடப்படும் உன்னியும் எலி தான். எலிப்பொறி ஆண் தன்முனைப்பா? பெண் சகிப்பா? அல்லது சமூகத்தின் குடும்ப அமைப்பா?
எதுவானாலும் எல்லா எலிகளும் ஆசைப்பட்டு பொறிக்குள் தானாகவே சென்று விழுகின்றன என்பது தான் உண்மை.

படம் ராஜம்மையின் மரணம் பின் உன்னி பித்தாகி ஒரு இரவில்  கள்ளர்களால் துரத்தப்படுவதோடு முடிகிறது. தப்பி வெளியே ஓடும்  மூன்றாவது தங்கை , சொத்தில் பங்கு கேட்க்கும் முதல் தங்கை இவ்விருவரும் கதையின் மையமாகிய உன்னி-ராஜம்மை பாத்திர வடிவமைப்பிற்க்கு ஒரு பங்கு மட்டுமே. பெரிதாய் எதுவும் சொல்ல அவர்களிடம் இல்லை.

அடூரின் இந்த படம் ஒரு நாவல் போலவே எனக்கு அனுபவம் தந்தது.
காட்சிகளிம் ஊடாகவோ, சம்பவங்களின் ஊடாகவோ நிகழாமல் ,கதை மாந்தரின் வகை மாதிரித் தன்மை (prototype) மூலம் முழுமையடயும் இந்த படம் நிச்சயம் உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று என என்னால் சொல்ல முடியும்.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ் சினிமா சில அயோக்கியத்தனங்கள்..

கீழுள்ள பத்தி  ’டூரிங் டாக்கீஸ்’ என்ற ஓர்குட் குழுமத்தில் 3/10/08 அன்று நான் செய்த பதிவின் மீள்பிரசுரம்.

தமிழ் சமூகத்தில் சினிமாவின் இடம் எல்லாருக்கும் தெரிந்தது.. சினிமா செல்லாத இடம் இல்லை. ஆனால் நம் சினிமா சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது? சமூகத்தின் எண்ணங்களை வாழ்வியல் நெறிகளை பெருமளவு மாற்ற கூடிய ஆயுதமாக சினிமா உள்ளது.. ஆனால் வணிக ரீதியான வெற்றிக்காக கீழ் நிலை சமரசங்களை எடுத்தாளும் சில இயக்குனர்களை நினைக்கும் போது கோபத்தை விட வருத்தமே எனக்கு அதிகம். இவைகளை சமரசங்கள் என்று சொல்வதை விட அவர்களது மன நிலையே அப்படி தான் இருக்கிறது.. அதையே அவர்களது படைப்புகளும் பிரதிபலிக்கிறது என்றே தோன்றுகிறது.
நகைச்சுவை என்பது நம் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய பகுதி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை எந்த நிலையில் உள்ளது? நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி எழுத தோன்றியது.. காரணம் நெடு நாளாகவே இது என் மனதை சங்கடப்படுத்திய ஒன்று.

ஹாலிவுடின் ஒரு படம் "shallow hal" வணிக பார்முலா நகைச்சுவை படம். ஆனால் வணிக யுக்திகள் அனைத்தும் இருந்தும் நாகரிகமான நகைச்சுவை படம். அழகான பெண் காதலியாய் கிடைக்க எண்ணும் ஒரு சராசரி இளைஞன், ஒரு மனோதத்துவ டாக்டரால் அக அழகு உள்ளவர்களையே புற அழகு உள்ளவர்களாகவும் காணும் மன நிலை அடைகிறான். ஒரு குண்டுப் பெண்ணை அழகான பெண்ணாக எண்ணி காதலிக்கிறான். அழகான குழந்தைகளை பார்க்கிறான்.. அந்த குண்டுப் பெண்ணோடு பழகும் ஒரு அழகான வாலிபனை பார்கிறான்.. இறுதியில் எல்லாம் சரியான பிறகு அந்த அழகான குழந்தைகள் தீயில் கருகிய குழந்தைகள், அழகான வாலிபன் அவ்வளவு அழகு இல்லாதவன் என்றும் தெரிகிறது, இறுதியில் அந்த குண்டுப் பெண்ணை தன் காதலோடு முழுமையாக ஏற்கிறான் (பரிதாபத்தினால் அல்ல) என படம் அழகு குறித்த நம் மனப்பான்மையை பற்றி யோசிக்க வைக்கிறது. இது ஒரு முழு நீள நகைச்சுவை வணிக படம்.. நுணுக்கமாக பார்த்தால் 'shallow hal' நிறைய குறைகள் உள்ள படம் தான், ஆனால் ஒட்டுமொத்தமாக மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மனநிலை கோளாறு பற்றி யோசிக்கும் படம்.
தமிழில் இது போன்ற படம் எதிர்பார்க்க முடியுமா? தெரியவில்லை. (நெடு நாள் முன்பு நானும் ஒரு பெண் வந்தது.. ஆனால் அதிலும் பச்சாதாபமே அதிகம் கையாளப்பட்ட உணர்வு) இது போல் வர வேண்டாம். இதற்க்கு எதிர் மறையான படங்களாவது வராமல் இருக்கலாம். 
நமது நகைச்சுவை பெரும்பாலும் சமூகத்தின் மாறுபட்ட உடல், வாழ்க்கை முறை உள்ள சிறுபான்மையினர் பற்றிய கிண்டலாகவே அமைந்து உள்ளது.. அழகு, மாறுபாடு, குறை பாடு இவற்றை ஏற்க முடியாத தன்மை இயல்பானது. ஆனால் மட்டுப் படவேண்டிய ஒரு உணர்வு.. சக மனிதனை அவனது மாறுபாடுகள் நீங்க ஏற்பது அடிப்படை மனித நெறி. இதை கிண்டல் செய்வது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன??

கவுண்டமணி செந்தில் எப்போதும் மாறு கண் உள்ள பெண்கள், கறுப்பு பெண்கள் இவர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்கள். அடுத்து உயரம் குறைவானவர்கள் இவர்கள் எப்போதும் நகைச்சுவை பகுதிக்கு தான்.. 
பேரழகன் படத்தில் சூர்யா காதலுக்கு ஜோதிகா தான். ஒரு உயரம் குறைந்த பெண்ணை அவர் அவமதிக்கிறார். அந்த பெண்ணும் ஒரு நகைச்சுவை பாத்திரமாக கோமாளி போல வந்து போகிறார்.. . இந்த நியாய தர்மங்கள் எனக்கு புரிவதே இல்லை. காது கேளாதவர்களும் கிண்டலுக்கு பாத்திரமானவர்களே.... முன்பு இத்தகைய பல நகைச்சுவை காட்சிகளை ரசித்து உள்ளேன்.. இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறேன். இவற்றை எல்லாம் வெறும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்து கொள்ளும் பரந்த மனப்பான்மை இப்போது எனக்கு போய் விட்டது.. சமிபத்தில் ஒரு திருமங்கையின் blog படித்த போது இந்த கேலியும் கிண்டலும் அவர்களை எந்த அளவு வேதனை படுத்தும் என உணர முடிந்தது. அரவாணிகளை நாம் எதோ கிண்டல் செய்ய மட்டுமே பிறந்தவர்களை போல் கையாளும் கையவாளித்தனம் என்று ஒழியும்? எத்தனை படங்கள் எத்தனை பாடல்கள் ?

அரசியல் கன்றாவிகளை அம்பலமாகும் காட்சிகளை நறுக்க தவறாத சென்சார் போர்ட் இதையெல்லாம் ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.. எல்லாவற்றையும் ஏற்று கொண்டு செல்லும் மனபோக்கு நம்மிடம் தாராளமாக உள்ளது.. just ஜோக் தானே, சினிமா தானே... இதெல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது .. ரொம்ப யோசிக்க கூடாது.. இது தான் நம் மனநிலை.. மாறுபாட்டை கிண்டல் செய்வது நமக்கு ஜோக் அவர்களுக்கு உயிர் வேதனை என்று எப்போது உணரப் போகிறோம்??

இது போன்ற காட்சிகளை உதாரணம் சொல்ல எத்தனையோ படங்கள் உள்ளன. எடுத்துக்காட்ட நினைத்தால் ஏகப்பட்ட காட்சிகள் மனதில் வருகின்றன.. சமிபத்தில் ஓர் பால் விழைவு உள்ளவர்கள் பற்றி கிண்டல் ஆரம்பித்து உள்ளது.. மொழி போன்ற தரமான படமாக கருதப்படும் படங்களும் இதில் விதி விலக்கல்ல. இவை நகைச்சுவையா ? 

சமூகத்தின் அங்கிகாரம் அற்ற சாராரை, சற்று மாறுபட்ட புற லட்சணங்கள் உள்ளவர்களை கிண்டல் செய்ய மட்டும் தான் தோன்றுமா?

23 ஆம் புலிகேசி போன்ற பொறுப்புள்ள சில நகைச்சுவை படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் எந்த உணர்வுகளை தூண்ட வேண்டும் தூண்ட கூடாது என்ற பொறுப்பு கடமை படைப்பாளிக்கு உள்ளது. (23 ஆம் புலிகேசியில் கூட அரவாணி ஒருவர் அந்தப்புர அழகிகளின் மேற்பார்வையாளராக காட்ட படுகிறார். யதார்த்தத்தில் எப்படி இருக்கிறது /இருந்தது என்பது முக்கியம் அல்ல. ஒரு சமூகத்தின் மன நிலை மாற வேண்டி இருக்கும் போது இப்படி காண்பிப்பது தேவையா? வடிவேலு அவருக்கு பணம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பும் போது ஒரு கீழ் நிலை ஆளாகவே அவரை நடத்துகிறார்.. இதை சிம்பு தேவன் போன்ற படைப்பாளி வேறு விதமாக கையாண்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்து இருக்கும்!)

காது கேளாதோர், வாய் பேசாதோர், மாறு கண் உள்ளோர், கறுப்பான பெண்கள், மாறுகண் உள்ளவர்கள், குண்டானவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், தொழு நோய் உள்ளவர்கள், உயரம் குறைந்தவர்கள்,வயதானவர்கள்,அரவாணிகள்,ஓர் பால் விழைவு உள்ளவர்கள், எல்லாரையும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள், மக்களும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்!!
நமது ஹீரோக்கள் ஆனால் பெண்களின் பாகங்கள் பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள், அவர்கள் கற்பு பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசுபவர்கள், ரவுடிகள்,கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள்,இரு தாரம் கட்டியவர்கள், புகை பிடிப்பவர்கள், சோகம் வந்தால் தண்ணி அடிப்பவர்கள்.. உண்மையில் இந்த பண்புகளே கிண்டல் செய்ய படவேண்டிய பண்புகள். ஆனால் இவை இன்றைய heroism..

ஒரு பொறுப்பான சமூகம் யாரே எல்லாம் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.. யாரை எல்லாம் மறுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் கதாநாயகர்களாக வரித்து கொண்டு உள்ளோம்.
இந்த அநியாயம் ஓயும் வரை நமது கலை ஒரு நோயாளிக் கலையே. நமது சமூகம் இதை பார்த்து சிரித்து மகிழும் வரை ஒரு நோயாளி சமூகமே..

நகைச்சுவை செய்ய தெரியவில்லை என்றால் "shallow hal" பார்க்க வேண்டாம் .. நமது nsk, தங்கவேலு, சந்திரபாபு இவர்களது நகைச்சுவையை பாருங்கள்.. போதும் போதும் எனும் அளவு அவர்களிடம் கற்று கொள்ளலாம் சிரிக்க வைக்க..

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

நான் வித்யா - வாழும் புன்னகை




”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு எந்த தொந்தரவும் இருக்காதே?”

சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன் ‘ ஒன்னும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானது தான். இப்பக் கூட வர்ற வழியிலே ஆட்டோ ஸ்டாண்ட்லேர்ந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேர அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாய்த்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கிற விதத்துல தான் சார் இருக்கு. அதயும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சுத்தான் ஆகணும்.’ என்ற என் ப்தில் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.
‘என்னைக்கும்மா ஜாயின் பண்றீங்க?’ என்று கேட்டார்.
அந்த கணத்தை என்னால் மறக்கமுடியாது. எத்தனை காலப் போராட்டம்! ஒரு வேள்வி மாதிரி தான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். இதோ பலனளிக்கிற நேரம். ‘நாளைக்கே சேர்ந்துடறேன் சார்!’ என்று சந்தோஷமாகச் சொன்னேன்.... காலம்காலமாக அடிமையாக இருந்து விட்டு திடீரென்று விடுதலை பெற்றவளைப் போல் என்னை நான் உணர்ந்தேன். 

நான் சரவணன்  வித்யா - புத்தகத்திலிருந்து..

யார் நிஜமான போராளி? நிறைய உணர்ச்சிகளோடு பேசுபவனா? வன்மையோடு எழுதுபவனா? தன் மக்களை ஒரு சாராருக்கு எதிராய் தூண்டி விடுபவனா? நிறைய தத்துவச் சிக்கல்களை ஆராய்பவனா? என்னளவில் இதில் யாரும் எத்தனை உச்சத்தில் இருந்தாலும் போராளி அல்ல. எவன் தன் சுய அடையாளத்திற்காகவும் தன் இனத்தின் அடையாளதிற்காகவும்   நம்பிக்கையுடன் போராடுகின்றானோ அவன் தான் போராளி.
வித்யா ஒரு போராளி. ஆண் உடலில் தன் பெண்மையை  சுமந்து கொண்டிருக்கும் அவள் கேட்பதெல்லாம் மிக எளிய கேள்விகள். நான் ஒடுங்கி வாழ நான் செய்த தவறு என்ன? நான் ஏன் பிச்சை எடுக்க தள்ளப்படேன்? எனக்கு ஏன் குறைந்த பட்ச அங்கீகாரம் கூட இந்த அரசும் சமுதாயமும் செய்ய மறுக்கிறது?
இவளின் குரல் காலம் காலமாய் ஒடுக்கபட்ட இனத்தவரின் குரலில் இருந்து மாறுபட்டதில்லை. நீ ‘ச்சீ’ என்று ஒதுக்க, நீ வசை பாட, நீ கீழே போட்டு மிதிக்க நான்  ஒன்றும் ஒன்றுக்கும் ஆகாதவள் அல்ல.  நான் தவறு செய்யவில்லை. சமரசம் செய்யவில்லை. நான் என் சுயத்தை கழுவியவள் இல்லை. உன்னிடம் யாசகம் கேட்கவில்லை. நான் வாழ்வேன். உன் முன்னால். என் இனம் வாழும் என துணிந்து நிற்பவள் வித்யா.
அவள் வாழ்க்கை புத்தகத்தை படித்தேன்.
இலக்கியங்கள் தரும் ஒரு சங்கடத்தை வாழ்க்கையின் நிலையின்மை குறித்த பயத்தை , அதே சமயம் வாழ்க்கை ஒரு கொண்டாடப்பட வேண்டிய மகானுபவம் என்ற நம்பிக்கையை அந்த புத்தகம் தந்தது.
அது இலக்கியமா? இல்லை
பிரச்சாரமா? கிட்டத்த்ட்ட
அழகியல்? ம்ஹ்ம்ம்..
தொடக்க நிலை எழுத்தா? ஆமாம்.
ஆனால் எழுத்து இதை எல்லாம் மீறி நம்மை அசைக்கும். வடிவம், அழகு, கட்டமைப்பு, பொருள் என எல்லாம் புறவயமானவை. ஒரு படைப்பின் அகம் அதன் நேர்மையில் இருக்கிறது. அறச்சீற்றத்தில் இருக்கிறது. அது நம் மேல் எழுப்பும் அனுபவத்தில் இருக்கிறது. இந்த புத்தகத்தில் இவை எல்லாமும் உள்ளதா தெரியவில்லை. ஆனால் என்னுள் இதன் அகம் சுத்தமானது என்ற உணர்வு. அவன் (சரவணன்) அவளாய் (வித்யா) மாறி தன்னை மீட்டெடுக்கும் நாட்கள் நம் முன் விவரிக்க படும் போது இது யாரோ ஒருவரின் வாழ்க்கை அல்ல. நம் சமூகத்தின் வேறொரு முகத்தை காட்டும் கண்ணாடி என புரிகிறது.
 கூன் ,குருடு என உடல் மாறுபாடு உள்ளவர்கள் மேல் காட்டப்படும் கரிசனம் ஏன் சுயம் மாறியவர்கள் மேல் எற்படுவதில்லை. கிண்டலும் முகச்சுளிப்பும் வீசப்படுவது ஏன்? நம் கரிசனமும் பச்சாதாபமும் எத்தனை போலியானது. எத்தனை பாரபட்சமானது .
ஆனால் வித்யா சமூகம் குறித்தும் அதன் போலி முகம் குறித்தும் புலம்பவில்லை. அவளின் மூலதனம் சமூகத்தின் அழுகிய பகுதி குறித்த பயம் அல்ல. அதன் பசிய இலைகள் மேல் அவளுக்கு அபார நம்பிக்கை. ஆம். மானுடம் குறித்த நம்பிக்கை குறைந்தால், இருந்து என்ன ஆகப் போகிறது.
அவளோடு வந்தவர்கள் கிண்டல் செய்தவர்கள் அல்ல. பச்சாதாப கேஸ்கள் அல்ல. சக மனிதனை சக மனிதனாக மட்டுமே பார்க்கும் யதார்த்தவாதிகள்.
ஆம் வாழ்க்கை எத்தனை எளிமையானது தெரியுமா? உன்னோடு கூட வருபவனுக்கு அவனுக்குரிய மரியாதை, கொஞ்சமாய் அன்பு இது மட்டும் போதும் . யாரும் ஒடுங்கி வாழப்போவதில்லை.

வித்யா இன்று வாழும் புன்னகையாக மலர்ந்து இருக்கிறாள். ஒரு புன்னகை மலர எத்தனை வலி என்று நான் சங்கடப்படுவதா அல்லது அவள் மலர்த்திய புன்னகை மானுடம் தோற்பதில்லை என்பதற்க்கான சான்றென நம்பிக்கை கொள்வதா? இல்லை இன்னும் ஒரு லட்சம் புன்னகைகள் ஒடுங்கி வெறும் உதட்டு சுளிப்பாக பம்பாயில் யாசகம் பெற்று வாழ்வதை நினைத்து பொருமுவதா? தெரியவில்லை.
அவள் செய்யும் புன்னகை வெறும் குறியீடு மட்டுமே. அடையாளம் அல்ல. அவள் புத்தகத்தின் கடைசி பக்க்கங்கள் இரஞ்சுவது ’வாழ விரும்புகிறேன் தன்மானத்துடன்’ என்பதே.
புத்தகத்திலிருந்து மேலும் ஒரு பகுதி.
ஒரு முறை பீல்ட் ஒர்க்கிற்க்காகச் சென்றுகொண்டிருந்த போது சில சிறுவர்கள் என்னை பார்த்து ‘ ஊரோரம் புளிய மரம்.. ‘ என்று பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அதிகபட்சம் இருந்தால் பத்து பதினோரு வயதுக்குள் தான் இருக்கும். யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது? என்னைப் பார்த்ததுமே கிண்டல் செய்யும் எண்ணம் எப்படி உதிக்கிறது? பிறவியிலேயே அது வருமா? ரத்தத்திலேயே இருக்குமா? இதுவும் ஒருவித ஆதிக்க மனோபாவம் இல்லையா? சாதி மத இன மொழி வித்தியாசங்களே இதில் கிடையாது. திருநங்கையா? கிண்டல் செய். சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குதல் செய். அவமானப்படுத்து. அழச் செய். அலறி ஓடச் செய். 
என்ன உலகம் இது? நான் திகைப்புடன் அந்த சிறுவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக ஒரு சிறுவன் தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாக்கெட்டைச் சடாரென்று என் மீது வீசி விட்டு ஓடினான். சற்றுத் தொலைவிலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிரித்தார்கள். சில பெண்களும் கூட. 
எனக்கு புரிய வேண்டியது இது தான். நான் இவர்களுக்கு என்ன தாறு இழைத்தேன்? ... எனக்கு வாய்த்த நிறம். எனக்கு வாய்த்த உடல். எனக்கு வாய்த்த இயல்பான பெண்மை. இது ஏன் யாருக்கும் புரியவில்லை???

இத்ற்கு மேல் நான் என்ன சொல்ல?? ஒருவரின் வாழ்வின் வலி நமக்கு பரிகாசம் என்றால் அந்த அசிங்கம் பற்றி எத்தனை பக்கம் எழுதி என்ன ஆகப் போகிறது.
http://livingsmile.blogspot.com/

புத்தக விவரங்கள்:
Naan, Vidya,
'Living Smile' Vidya Copyright
216 Pages, Rs100
ISBN: 978-81-8368-578-8
Kizhakku Pathippagam.

திங்கள், 29 மார்ச், 2010

அங்காடித் தெரு -- யானையும் எறும்பும்


வசந்தபாலனின்  ’வெயில்’ கொடுத்த எதிர்பார்ப்பில் ஜெயமோகனின் பப்ளிசிட்டியில் :) நிச்சயம் ஒரு நல்ல படமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடனே ’அங்காடித் தெரு’ பார்க்க சென்றேன். நல்ல படமா? நிச்சயமாக.  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கண்டிப்பாக.  ஆனால் ‘ஆனால்’ என்ற ஒரு  இழுவை  படம் முழுதும் என்னை தொற்றிக் கொண்டே தான் இருந்தது.  காரணங்களை போகிற போக்கில் சொல்கிறேன். தமிழ் சினிமா மேல் நம்பிக்கை தரும் மற்றுமொரு படமாக அங்காடித் தெருவை நான் மட்டும் இன்னும் நிறைய பேர் சொல்லத் தான் போகிறார்கள். களம், கதை மாந்தர் ,திரைக்கதை எல்லாமே முதிர்ச்சியுடன் மிகுந்த குவிப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் நிஜமான கரிசனத்துடன் வந்த சில தமிழ்ப்படங்களில் ‘அங்காடித் தெரு’ வும் ஒன்று. நாம் கடை வீதியில் மிக வேகமாக கடக்கும் போது   நம்மை  நிறுத்தி இதோ பார் இந்த மனிதர்களை இவர்கள் வாழ்க்கை எத்தனை நெருக்கடியானது, அவர்கள் வாழும் இந்த கடைத் தெரு போலவே என்று ஒவ்வொருவர் பற்றியும் கதை சொல்கிறது.  நீ ப்ளு கலர் சுரிதார் கேட்ட்யே அந்த பொண்ணு காசுல தான் அவ அப்பா மருந்து வாங்குராரு. ஸ்டோன் ஜீன்ஸ் கேட்ட பையன் காலைல இருந்து  50-60 கிலோ மூட்டைகளை குடோன்ல எறக்கிட்டு ஷிஃப்டுல வந்தான். நீ ஷிஃபான் சாரி கேட்ட பொண்ணு இந்தா பத்து நிமிஷம் முன்னாடி தான் அவ மார அவ முதலாளி தடவுனான்  இந்த ப்ளாட்பார்ம்ல  கர்ச்சீப் விக்குற பெரியவரு 15 வருஷமா இங்க தான் பொழப்பு நடத்துராரு. அவுரு பொஞ்சாதி கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில ஊசி மாத்தி போட்டு செத்து போச்சு. கிளிப்பு விக்குற பொண்ணுக்கு போன ஜனவரில ரோட்டோரமா படுத்து இருக்கும் போது லாரி அடிச்சு ரெண்டு காலும் போயிடுச்சு என எல்லாம் நமக்கு தெரிந்த கதைகள் ஆனால் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவை. காசு இல்லை என்றாலும் கலர் கலராய் கனவுகள் வராமலா போய்விடும்? வ்ந்த கனவுகளுக்கு என்ன விலை தர? கனவுகளின் நிழலாய் யதார்த்தம் பயமுறுத்தும் போது எவ்வளவு சமரசங்கள் மனசாட்சியை உறுத்தாமல் நிகழும்?  என கேள்விகளை நம் முன் இறைக்கிறது இந்தப் படம்.  ரங்கனாதன் தெருவில் இறைந்து கிடக்கும் பொருட்கள் போலவே படம் நெடுகிலும் கேள்விகள். யதார்த்ததை தொலைக்காத முகங்கள் படத்தின் பெரும் பலம். அதிலும் அந்த கதாநாயகி அத்தனை உயிர்ப்பு அவளிடம்.


ஆனால்..
படம் முடியும் போது ஒரு முதிர்ந்த அழுத்தமான படம் பார்த்து விட்டு வரும் போது கிடைக்கும் அனுபவம் என்னிடம் இல்லை. காரணம் நிறைய. மிக முக்கிய காரணம்  மிகை உணர்ச்சியும் நாடகத்தனமும் படம் முழுதும் விரவியிருக்கின்றன. ‘இங்க பாத்தியா இவன் எவ்ளோ பாவம்னு இங்க பாத்தியா இவன் எவ்வளவு கஷ்டத்துலயும் நம்பிக்கயோட இருக்கானு’ என்பது போல ஒரு வித சொல்லிச் சொல்லி காண்பிக்கும் அணுகுமுறை நம்மை படத்திலிருந்து விலக்குகின்றன.  போகிற போக்கில் சொல்லப் படவேண்டிய வாழ்க்கை துணுக்குகள் கூட அத்தனை அதி உணர்ச்சியுடன் அரங்கேறுகின்றன. உ.ம் - உயரம் குறைந்த மனிதரும் அவர் மனைவியும். இதில் அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் குறைபாட்டுடன் பிறக்கிறது. அதற்க்கு அந்த பெண் தரும் விளக்கம் வேறு. குறையுடைய மனிதனுக்கு குறையுடன் குழந்தை பிறக்கும் என்ற தேவையற்ற ஒரு செய்தி தான் இந்த அதி உணர்ச்சி கதையால் கிடைக்கும் ஒரே நன்மை.  பிண்ணனி இசை பெரும் பலவீனமாக நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் இசை பின்னால். நாடகத்தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்குடன். ஹ்ம்ம்.. ரொம்பவே இளையராஜாவை மிஸ் பண்றேன் :(


குறைகளை மீறி அங்காடித் தெரு என்னை கவர்ந்த படம். காரணம் அது துணிவுடன் முன் வைக்கும் முதலாளித்துவ பிரச்சினைகள் மட்டுமல்ல. அது காட்டும் சராசரிகளின் கனவுகளால் அவர்கள் சமரசஙகளால்.  இவை எல்லாவற்றையும் விட அதன் அடி நாதமாய் இருக்கும் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. அந்த பிளாட்பார பாய் சொல்வது போல  ‘ மனுசன  நம்பி கடை போட்டு இருக்கேன், பத்து வருஷமாச்சு. இன்னும் நம்பிக்கை குறையல’ இந்த நம்பிக்கையுடன் தான் மானுடம் இயங்குகிறது. யானை வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழும் ஒன்றுக்கு ஒன்று துணையாய், நம்பிக்கையுடன். இதே செய்தியுடன் படம் முடிகிறது. மிக அழகாய்.
பி.கு: அட இப்போ எல்லா படத்துலயும் நம்ம விக்கிரமாதித்தியன பாக்க முடியுது நம்ம கவிஞர் கொஞ்ச நாள்ல ஸ்டார் நடிகர் ஆகிடுவார் போல :-)

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...