கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

அடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)


அடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில்  இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தேன்.
எலிப்பத்தாயம் என்னை மிகவும் கவர்ந்தது.


படம் ஒரு அண்ணன் மூன்று தங்கைகளை பற்றியது. குறிப்பாக அண்ணன் - இரண்டாம் தங்கை (ராஜம்மை) உறவு கதையில் விஸ்தாரமாக நிகழ்கிறது.
கதையின் ஒவ்வொரு நகர்விலும் இவ்விருவரது குணங்களும் கட்டமைக்கப்படுகிறது. இந்த இருவரும் ஒரே வீட்டில் வாழும்  இரு வெவ்வேறு துருவங்கள் என நமக்கு புரிய தொடங்குகிறது. ஆணை மட்டுமே மையப்படுத்திய, அவனது பலவீனங்களை சகித்து, விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, அவனை மீறி செய்ய இயல ஒன்றும் இல்லாமல்,அவன் மட்டுமே உலகம் என கொள்ளும் பெண்கள் நிறைந்த இந்திய குடும்ப சூழலின் துல்லிய ப்ரதிபலிப்புகள்  தான் உன்னி (அண்ணன்) மற்றும் ராஜம்மை.
ஒரு ஆழமான சமூக  விரிவாய்வு செய்யும் அளவு இவ்விரு கதைமாந்தரின் பாத்திரமும் நுணுக்கமான படிமங்களோடு படைக்கப்பட்டுள்ளது.


உன்னி -- உன்னியை போல நிறைய ஆண்களை என் சமூகத்தில் பார்த்துள்ளேன். அவனது இறுக்கமும் அதிகாரமும் வெளிப்படையாய் தெரியும் அவனது சோம்பலையும், கோழைத்தனத்தயும் மறைக்க இயலுவதில்லை. அதற்க்காக அவன் கவலைப்படுவதுமில்லை. சாவகாசமாக பரம்பரை சொத்தின் மூலம் பொழுதை கழிக்கும் அவன், சொகரியங்களுக்காக எந்த நிலையிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுப்பதில்லை; பிரச்சனைகளிலிருந்து நழுவி நழுவி ஓடும் அவனிடம் இருப்பது அவனுக்கான ஆண் ஈகோ மட்டும். தன்னை சார்ந்த பெண்களில் தனக்கு சாதகமான அம்சம் கொண்டவள் ராஜம்மை மட்டுமே என உள்ளூர உணர்ந்த அவன் ஆண் மனம் அவளை தன் காரியங்கள் எல்லாம் செய்யக் கூடிய ஒரு இயந்திரம் போலவே உபயோகிக்கிறான். உன்னியின் பாத்திரம் அவளை வெறும் இயந்திரமாக உபயோகித்தாலும் அவளிடம் உணர்வு சார்ந்த பெருத்த சார்பும் கொண்டதே. தன் உத்தரவுகளை அவளிடம் அலுங்காமல் வெளிப்படுத்தும் அவன், அவளிடம் எல்லா ஆண்களுமே தேடும் தாயின் அரவணைப்பு சொகுசை பெற்றுக் கொள்கிறான். அது அவனை தன் தினசரி வாழ்க்கை அமைப்புக்கு கொஞ்சம் கூட மாறுதல் வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி அவளிடம் அதிகாரம் செய்வதில் தெரிகிறது. ஒரு பசுவை விரட்டுவதில் இருந்து , வெண்ணீர் போட்டு கொடுப்பது வரை அவனக்கு ‘ராஜம்மை ;ராஜம்மை’ மட்டும் தான்.
படம் முழுவதும் தன் தங்கையை தன் சௌகரியங்களுக்காக  ஏவுவதில் அவளிடம் தன்னை ஒப்படைக்கும் ஒரு சுயநல சிறுவன் போலவே தெரிகிறான்.


ராஜம்மை -- பொறுமை,சகிப்பு, தீராத பணி, குடும்ப சுமை என தன்னை பற்றியே யோசிக்காத அல்லது யோசிக்க இடம் தரப்படாத பெண் தான் ராஜம்மை. காலையில் இருந்து இர்ரவு வரை அவள் செய்ய வேண்டியது எல்லாம் தன் அண்ணனுக்காக, தன் தங்கைக்காக. ஆனாலும் அவள் அதற்க்காக குறைப்பட்டுக்கொள்வதில்லை. ஒரு இடத்தில் கூட யாரிடமும் கடிந்தோ, குறை சொல்லியோ பேசுவதில்லை. வரிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த குறையும் சொல்லாமல் எத்தனை பெண்கள் இந்திய குடும்பங்களில் (நடுத்தர குடும்பங்களில் பொதுவாக)  தங்கள் புதிரற்ற மௌனத்தால் நாட்களை கடத்துகிறார்கள் என்பதற்கு ராஜம்மை ஒரு வகை மாதிரி. ஆனால் என்னை எப்போதும் ஆச்சரியப்படுதுவது அவர்களின் மௌனம் அல்ல. அவர்கள் குறையின்றி தங்கள் கடமையாகவே ஆண்களுக்கு பணி செய்கிறார்கள். தனக்கான மனதை அவர்கள் கிட்டதட்ட மறந்தே விடுகிறார்கள். ஆனால் ராஜம்மை ஒரு கட்டத்தில் தன் சகிப்புத்தன்மையை உடைக்கிறாள். ‘எத்தனை நாள் இந்த நரகம்’ என தன் அண்ணனிடம் கேட்கிறாள். இது வெற்றுக் குறீயிடு மட்டுமே. நம் இந்திய ராஜம்மைகளுக்கு  நிச்சயம் விதிக்கப்பட்டவைகளை தாண்டி கேள்வி கேட்டலும் கூட அது வெற்று மன ஆறுதலுக்காக மட்டுமே எனத் தெரியும். குடும்ப சட்டகத்திற்க்குள் அகப்பட்ட எலிகளாய் அடூர் அவர்களை உருவகப்படுத்துகிறார்.
ஆனால் கதை இதோடு முடிவதில்லை. ராஜம்மையின் சாவிற்க்கு பிறகு பயந்து வெளிறும் உன்னியும் ஒரு எலி தான். ஆணின் அடக்குதல் பெண்ணின் அடங்குதல் இரண்டுமே ஒரு வித ஒப்பந்தமே. அடக்குதல் மூலம் தன் பலவீனங்களை மறைக்கும் ஆண், அடங்குதல் மூலம் ஆணை திருப்திபடுத்தி தனக்கானவனாய் அவனை உருவாக்கிக் கொள்ளும் பெண் -  என இது ஒரு விளையாட்டோ எனத் தோன்றும். இந்த அடிப்படையில் ராஜம்மை ஒரு எலி என்றால் அவளின்றி தனித்து விடப்படும் உன்னியும் எலி தான். எலிப்பொறி ஆண் தன்முனைப்பா? பெண் சகிப்பா? அல்லது சமூகத்தின் குடும்ப அமைப்பா?
எதுவானாலும் எல்லா எலிகளும் ஆசைப்பட்டு பொறிக்குள் தானாகவே சென்று விழுகின்றன என்பது தான் உண்மை.

படம் ராஜம்மையின் மரணம் பின் உன்னி பித்தாகி ஒரு இரவில்  கள்ளர்களால் துரத்தப்படுவதோடு முடிகிறது. தப்பி வெளியே ஓடும்  மூன்றாவது தங்கை , சொத்தில் பங்கு கேட்க்கும் முதல் தங்கை இவ்விருவரும் கதையின் மையமாகிய உன்னி-ராஜம்மை பாத்திர வடிவமைப்பிற்க்கு ஒரு பங்கு மட்டுமே. பெரிதாய் எதுவும் சொல்ல அவர்களிடம் இல்லை.

அடூரின் இந்த படம் ஒரு நாவல் போலவே எனக்கு அனுபவம் தந்தது.
காட்சிகளிம் ஊடாகவோ, சம்பவங்களின் ஊடாகவோ நிகழாமல் ,கதை மாந்தரின் வகை மாதிரித் தன்மை (prototype) மூலம் முழுமையடயும் இந்த படம் நிச்சயம் உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று என என்னால் சொல்ல முடியும்.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

கிம் கி டுக் - இன் ’மூச்சு’ (The Breath).

கிம்  கி டுக் -  இன்  ’மூச்சு’ (The Breath).



கொரிய மொழி இயக்குநரான கிம் கி டுக் (Spring,Summer,Fall,winter.. and Spring படத்தின் இயக்குநர்) இயக்கிய ‘The Breath' படம் பார்த்தேன். அழகான படம்.
படத்தின் அழகு அதன் மௌனத்தில் இருந்த்தது. அதிகம் வசனங்கள் இல்லாமல் கிம்மின் முத்திரைகளோடு.
ஒன்றேகால் மணிநேரத்தில் மூன்று காதல் கதைகளை சொல்கிறார். கணவனின் தகாத உறவு பற்றி அறியும் பெண் மரணதண்டனை கைதி ஒருவனுடன் கொள்ளும் காதல் தான் கதையின் மையச் சரடு. கணவன் - மனைவி, கைதி- காதலி, கைதி- சக கைதி என மூன்று காதல்கள். உரசல்,பொறாமை, கோபம், வருத்தம், வன்முறை என உறவுகளின் பல பரிணாமங்களோடு ஒரு மாலை நேரக் கவிதையின் போதையோடு கதை மெள்ள நகர்கிறது.

தற்கொலைக்கு பல முறை முயலும் மரணதண்டணைக் கைதியிடம் காதல் கொள்ளும் பெண் அவனை மகிழ்ச்சி கொள்ள செய்வதற்க்காக  ஒவ்வொரு முறை அவனை சந்திக்கும் போதும்,சந்திக்கும் அறையை  ஒரு பருவகாலத்தினை அடையாளப்படுத்தும் வகையில் அலங்கரிக்கிறாள்.  அந்த பருவகாலத்திற்க்கு ஏற்றாற் போல் உடை அணிகிறாள். அந்த பருவ காலத்திற்கு ஏற்ற பாடல்களை பாடுகிறாள்.

அவனுடன் தனக்குள்ள உறவை கற்பனையான பருவ மாற்றங்களோடு கழிக்கும் அவள் அந்த உறவை வேக வேகமாக முடித்து கொண்டு,தன் குடும்ப வாழ்க்கைக்கு திரும்புகிறாள்.
எத்தனை சுயநலமானவை உறவுகள். ஆனாலும் உறவுகளின் அழகே அவற்றின் சுயநலம் தான். தன்னை விட்டு செல்லும் எங்கிருந்தோ வந்த உறவு அதன் பிரிவிக்கான நியாயங்களை அவனிடம் உணர்த்தி விட்டு செல்வதாக தான் நான் நினைக்கிறேன்.
ஆனால் பிரிவில் நியாய தர்மங்கள் இல்லை. அது தரும் வலிக்கு அவை புரிவதும் இல்லை.

தன் சக கைதியின் காதல் கலந்த நட்ப்பை தன் புதிய காதலிக்காக  ஒதுக்கும் போது  ஒரு பழைய உறவு வெறி கொள்கிறது. அவனை இறுதியில் கழுத்தை நெறித்து கொல்கிறது.
கொலை ஒருவனுக்கு ஆறுதல் என்றால் கொல்லப்படுதல் மற்றொருவனுக்கு ஆறுதல்.

என் மனதில் அதிகம் பதியாத உறவு கணவன் நாயகியிடம் கொண்டிருக்கும் அசட்டையும், பின் உணர்ந்து தன் தகாத உறவை முறித்து கொள்வதும் தான். அவனது மற்றைய  உறவு பலமற்று காட்டப் படுகிறது (கதை அந்த உறவினை காட்சிபடுத்த தேவை இல்லை என கிம் நினைத்து இருக்கலாம்). அதே போல அந்த ஜெயிலரின் சபலம் கூட ஏதோ கதையில் ஒட்டுப் போட்டு தைத்தது போல நிகழ்கிறது. கதையின் ஆத்மாவிற்கு எந்த வகையிலும் தேவை இல்லாத சேற்க்கையாகவே அதைப் பார்க்க முடிகிறது.

 ஆனாலும்குறைகள் பெரிதும் நம்மை சங்கடப்படுத்துபவையில்லை.

இறுதியில், நாயகி தன் கணவனுடன் குளிர் காலத்திற்கான பாடலை  பாடிக் கொண்டிருக்க, அவளது காதலன் சிறையில் கண்ணீருடன் தன் கொலையை ஏற்பதாக முடியும் இந்த படம், கிம்மின் மற்றுமொரு கவிதை.

வெள்ளி, 9 ஜூலை, 2010

ராவணனும் குறுந்தொகையும்

 குறுந்தொகை பாடல் ஒன்றுக்கு ஷோபனாவின் நடனம். ராவணனாக ஷோபனா சிதைக்கும் தன் காதல் உணராத சீதை பற்றி கனவு காணும் போது அதற்கு நன்கு பொருந்தி வரும் குறுந்தொகை பாடலுக்கு ஆடுகிறார். 
(சில இடங்களில் பொருளுக்கு தவறாய் அபிநயம் பிடிக்கிறாரோ என்றோரு ஐயம். உ.ம் -- கானம் என்பது காடு என பாடலில் பொருள் படும் போது அவர் காண்பது என்பது போல் அபிநயம் செய்கிறார்) மற்றபடி பாடலில் காதல் ததும்பும் மாலை பற்றிய வரிகளில் பெண்டிருடன் சிருங்காரம் செய்வதும், பின் (சீதை இல்லாவிடில்) உயிர் என்னாகும் என மருகும் வரிகளில் தனித்து சீதை பற்றி கனவுகளில் மூழ்குவதும் என அழகான தமிழ்ப்பாடலுக்கு அழகான நடனம் செய்கிறார். 




மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே.



குறுந்தொகை பாடல் - 319 திணை -- நெய்தல்  பாடியவர் --தாயங்கண்ணனார்.
--
ஆண் மான் பெண் மானைத் தழுவி மயக்கத்தோடு காடின் புதர்களிடயே ஒதுங்கவும், துதிக்கையால் தழுவிக்கொண்ட யானைகள் கருமேகம் சூழ்ந்த மலைகளைச் சேர
மாலை வந்தது பலத்த மழையும் வந்தது. 
என் பொன் மேனியை சிதைத்தவர் இன்னும் வரவில்லை; 
இனி என் உயிர் என்னவாகும் தோழி?

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...