சனி, 24 ஏப்ரல், 2010

அருந்ததி ராய்,ஜிந்தால்,கம்ரேடுகள், இன்ன பிற சொற்கள்....

சில நாட்களாக நிறைய குழப்பங்கள்.  எது சரி எது தவறு. நான் எங்கு இருக்கிறேன்..யாருக்கு சார்பாய் நான் இருக்க வேண்டும்? என் சக மனிதன் எப்படி இருக்கிறான்? நான் அவனுக்காக கவலை பட்டு என்ன ஆகும்? படும் கவலை, என் தயக்கம் என் பயம் இவற்றை தாண்டி எங்கு செல்லும்?
அருந்ததி ராயின் மாவோயிஸ்ட்கள் பற்றிய கட்டுரையை அவுட்லுக்கில் படித்த பிறகு தெளிவற்ற சிந்தனைகள். ராயின் கட்டுரை மிகுந்த பக்க சார்பு உள்ளது. உணர்ந்தே அவர் அதை செய்துள்ளார். ஏனெனில் இரு தரப்பில் ஒரு தரப்பை மட்டுமே ஊடகமும், அரசும் முன்னிறுத்துவதால்.  அவர்களது பக்கம் நமக்கு தெரிய வேண்டும்.. ஏன் இந்த போராட்டம்.. இந்த போரட்டத்தின் வன்முறை எதன் அடிப்படையில் நியாயப்படுத்தப் படுகிறது? இவர்கள் நிஜமாகவே நம் நாட்டின் 'அதிமுக்கியமான் பாதுகாப்பபிற்க்கு ஊறு தரும் பிரச்சனை'யா?? ஏன் இவ்வளவு பெரிதாய் வளர்ந்தார்கள்? அவர்கள் பெரும் தீவிரவாத கும்பலா அல்லது எளிய  பழங்குடியினரா?. எளிமையான கிராம மக்கள். ஏன் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் குழுவாகினர்? பெண்கள், குழந்தைகள் எல்லார் கையிலும் ஏன் துப்பாக்கி? இந்த கேள்விகள் இரு தரப்பு பற்றியும் தெரிந்து கொண்ட பிறகே அலசப்பட வேண்டியவை. தரப்புகள் குறித்து எத்தனை படித்தாலும் உண்மை அதில் ரத்தமும் துப்பாக்கியுமாய் போராடுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.  உண்மை எதுவாகவே இருந்தாலும் ஒரு எளிய பழங்குடி மக்கள் துப்பாக்கி ஏந்தி இந்த அளவு பெரும் இயக்கமாய் வளர சும்மா ‘ஒரு மணி நேர மின்சாரம் போச்சே’ பிரச்னையாக இருக்க போவதில்லை. அவர்கள் வாழ்வாதார பிரச்னையாக தான் இருக்க போகிறது.  ஏன் இது அதிகம் விவாதிக்க படவில்லை. மலையின் கனிம வளம் வன வளம் பாரம்பரியம் குறித்த பற்று அந்த பழங்குடியனருக்கு இருப்பதில் ஒரு சதவிகிதமாவது நம் அரசாங்கத்திடம் இருக்கிறதா? நம் கணிமங்கள் ரெட்டி சகோதரர்களுக்கும், வேதந்தா, ஜிண்டால் போன்ற பெரு நிறுவனங்களால் பங்கு கொடுக்க பட்டு அழிக்கப்பட்டு வருகிறதா? அடித்தட்டு மக்களின் குடிசைகளும், பெண்களின் கற்பும்,  உணவும், சொத்தும் முதலாளிகளால், ஆளுவோரால், காக்கும் படையினரால், சூரையாடப்படும் போது அவர்கள் அரிவாளோடு, துப்பாக்கியும் ஏந்துவது சரியா தவறா?
ஒரு சார்பை ஹீரோவாகவும் ஒரு சார்பை வில்லனாகவும் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். உயிர் விட்ட படையினரின் சொற்ப உதவித்தொகை குறித்து கோபம் கொண்ட விகடனாரின் தலையங்கம் ஏன் சிவப்பு துணி கட்டியவர்களின் மரணத்திற்க்கு மவுனம் கொண்டு இருந்தது ஏன்? வெளிப்படையாகவே அசாம், மெகாலயா போன்ற மாநிலங்கள் பற்றி மத்திய அரசு வருடக்கணக்காக மெத்தனம் காட்டுவதும் பின் அவர்கள் கோபம் கொண்டால் தேசத்தின் பாதுகாப்பிற்க்கு ஊறாக நினைப்பது ஏன்?
பொதுவாகவே நாம் காரணங்கள் குறித்து யோசிப்பதில்லை. ஒரு கோபத்தின் நியாயத்தை அது வருடகணக்காக ஆறாமல் பொங்கி கொண்டு இருப்பதன் காரணத்தை விவாதிப்பதில்லை. வன்முறை அதற்க்கு பதிலடி பின் மேலும் வளரும் வன்முறை என ஒரு தொடர் நிகழ்வாக நீங்காத பெரும் பிரச்னையாக மாற்றிக் கொள்கிறோம்.

பாதுகாப்பு ஊறு.

இப்படி யோசனைகள் இந்த வாரம் முழுவதும் இருக்க, இதே சமயத்தில் குஜராத்தில் காந்திதாம் என்ற இடத்திற்க்கு  நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன் அங்கு இரும்பு உருக்கு ஆலை ஒன்றில் தர கட்டுப்பாடு சான்று தர சென்று இருந்தான். காலையில் அந்த ஆலை இருந்த இடம் தெரியவே இல்லை. காற்று முழுதும் கருப்பு துகள்கள். இரும்பு துகள்கள் மலை மலையாய். ஆலையின் உள்ளே உருக்கும் சூடு. இரும்பு தகதகத்து உருகி ஓடுகிறது. 5 அடி அருகில் பணியாள்ர்கள் சிரித்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்.  பல பேர் 12 மணி நேர ஷிப்டில் வேலை என நண்பன் சொன்னான். சில நாள் முன்னால் அவர்களது பதுகாப்பு குறித்தெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். சில நாள் முன்னால் கிரேனில் இருந்து இரும்பு குழாய்கள் நழுவி விழுந்ததாகவும் நல்ல வேளையாக யாரும் கீழே இல்லை எனவும் நண்பன் சொன்னான். ஜிந்தாலில்  *(அல்லது ஏதோ ஒரு பெரு நிறுவனத்தில்) எங்கோ ஒரு சுரஙத்தில் மண் சரிந்து சில பணியாளர்கள் இறந்ததாகவும்  அது வெறுமனே வட்டார செய்தித்தாளில் ஒரு சிறிய பெட்டி செய்தியாக வந்ததாகவும் சொன்னான். இரண்டு நாள் முன்னால் தினகரன் பெங்களூரு பதிப்பில் சில வருடங்கள் முன் வான்வழி தூவப்பட்ட Endosulfan  பூச்சிகொல்லிகளால் கிரமத்து மக்கள் பலரும் பக்கவாதம், ஆண்மைக்குறைவு போல் பிரச்சனைகளால் பாதிக்கபட்டு இருப்பதாக பகிரங்கமாக அரசு ஒப்புக்கொண்டதாகவும் குடும்பத்திற்க்கு நஷ்ட ஈடு தர ஒப்புகொண்டதாகவும் படித்தேன். துண்டு துண்டான இந்த செய்திகளால்  நாட்டின் பாதுகாப்பு ஊறு யார் என்ற கேள்வி மீண்டும் என்னுள் எழுந்தது.

காசர்கோட்டில் Endosulfanஆல் பாதிக்கபட்டவர்


ஆனாலும் விதர்பா தற்கொலைகள், மாவோயிஸ்ட் பிரச்சனைகள், போலி மருந்துகள் போன்றவையோடு நித்யானந்தர்-ரஞ்சிதா, ஐ.பி.எல் இறுதி போட்டிகள், விஜய் அரசியல் என எல்லாம் தாங்கி நம் ஊடகங்கள் சொற்களை மக்கள் விருப்பிற்கேற்ப உற்பத்தி செய்து சந்தையில் தள்ளுகின்றன. குவிந்து கிடக்கும் சொற்களில் நாமும் கொஞ்ச நேரம் மாவோயிஸ்டுகள், காம்ரேடுகள், நித்யா, டெண்டுல்கர், சுறா, சஷி தரூர்ர் எல்லாம் பேசி முடித்து விடுவோம். கவலை படாதீர்கள் அடுத்த சீசனிலும் கொஞ்சம் கம்ரேடுகளோ - போலிசோ இறப்பார்கள், கொஞ்சம் விவசாயிகள் தற்கொலை செய்வார்கள், அதை விட முக்கியமாய் 20-20 உலக கோப்பை நடைபெறும், ரஞ்சிதா பேட்டியை எதோ ஒரு பத்திரிக்கை வாங்கி இருக்கும், சுறா ஓடி முடிந்து எறா, எந்திரன் எல்லாம் வரும். அதனாலே மக்களே நாட்டில்  நெல்லுக்கு பஞ்சம் வந்தாலும் சொல்லுக்கு பஞ்சம் வராது.. பேசினோம்.. பேசுகிறோம், இன்னும் பேசுவோம்.....

சுட்டிகள்:
அருந்ததி ராய் அவுட்லுக் கட்டுரை

Endosulfan பிரச்னைகள்

.

திங்கள், 12 ஏப்ரல், 2010

கேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes தமிழில்)



 
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்.

மூலம்  இங்கே  (மூலம் தமிழுக்கு ஏற்றவாறு  மாற்றப்பட்டுள்ளது)

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ் சினிமா சில அயோக்கியத்தனங்கள்..

கீழுள்ள பத்தி  ’டூரிங் டாக்கீஸ்’ என்ற ஓர்குட் குழுமத்தில் 3/10/08 அன்று நான் செய்த பதிவின் மீள்பிரசுரம்.

தமிழ் சமூகத்தில் சினிமாவின் இடம் எல்லாருக்கும் தெரிந்தது.. சினிமா செல்லாத இடம் இல்லை. ஆனால் நம் சினிமா சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது? சமூகத்தின் எண்ணங்களை வாழ்வியல் நெறிகளை பெருமளவு மாற்ற கூடிய ஆயுதமாக சினிமா உள்ளது.. ஆனால் வணிக ரீதியான வெற்றிக்காக கீழ் நிலை சமரசங்களை எடுத்தாளும் சில இயக்குனர்களை நினைக்கும் போது கோபத்தை விட வருத்தமே எனக்கு அதிகம். இவைகளை சமரசங்கள் என்று சொல்வதை விட அவர்களது மன நிலையே அப்படி தான் இருக்கிறது.. அதையே அவர்களது படைப்புகளும் பிரதிபலிக்கிறது என்றே தோன்றுகிறது.
நகைச்சுவை என்பது நம் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய பகுதி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை எந்த நிலையில் உள்ளது? நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி எழுத தோன்றியது.. காரணம் நெடு நாளாகவே இது என் மனதை சங்கடப்படுத்திய ஒன்று.

ஹாலிவுடின் ஒரு படம் "shallow hal" வணிக பார்முலா நகைச்சுவை படம். ஆனால் வணிக யுக்திகள் அனைத்தும் இருந்தும் நாகரிகமான நகைச்சுவை படம். அழகான பெண் காதலியாய் கிடைக்க எண்ணும் ஒரு சராசரி இளைஞன், ஒரு மனோதத்துவ டாக்டரால் அக அழகு உள்ளவர்களையே புற அழகு உள்ளவர்களாகவும் காணும் மன நிலை அடைகிறான். ஒரு குண்டுப் பெண்ணை அழகான பெண்ணாக எண்ணி காதலிக்கிறான். அழகான குழந்தைகளை பார்க்கிறான்.. அந்த குண்டுப் பெண்ணோடு பழகும் ஒரு அழகான வாலிபனை பார்கிறான்.. இறுதியில் எல்லாம் சரியான பிறகு அந்த அழகான குழந்தைகள் தீயில் கருகிய குழந்தைகள், அழகான வாலிபன் அவ்வளவு அழகு இல்லாதவன் என்றும் தெரிகிறது, இறுதியில் அந்த குண்டுப் பெண்ணை தன் காதலோடு முழுமையாக ஏற்கிறான் (பரிதாபத்தினால் அல்ல) என படம் அழகு குறித்த நம் மனப்பான்மையை பற்றி யோசிக்க வைக்கிறது. இது ஒரு முழு நீள நகைச்சுவை வணிக படம்.. நுணுக்கமாக பார்த்தால் 'shallow hal' நிறைய குறைகள் உள்ள படம் தான், ஆனால் ஒட்டுமொத்தமாக மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மனநிலை கோளாறு பற்றி யோசிக்கும் படம்.
தமிழில் இது போன்ற படம் எதிர்பார்க்க முடியுமா? தெரியவில்லை. (நெடு நாள் முன்பு நானும் ஒரு பெண் வந்தது.. ஆனால் அதிலும் பச்சாதாபமே அதிகம் கையாளப்பட்ட உணர்வு) இது போல் வர வேண்டாம். இதற்க்கு எதிர் மறையான படங்களாவது வராமல் இருக்கலாம். 
நமது நகைச்சுவை பெரும்பாலும் சமூகத்தின் மாறுபட்ட உடல், வாழ்க்கை முறை உள்ள சிறுபான்மையினர் பற்றிய கிண்டலாகவே அமைந்து உள்ளது.. அழகு, மாறுபாடு, குறை பாடு இவற்றை ஏற்க முடியாத தன்மை இயல்பானது. ஆனால் மட்டுப் படவேண்டிய ஒரு உணர்வு.. சக மனிதனை அவனது மாறுபாடுகள் நீங்க ஏற்பது அடிப்படை மனித நெறி. இதை கிண்டல் செய்வது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன??

கவுண்டமணி செந்தில் எப்போதும் மாறு கண் உள்ள பெண்கள், கறுப்பு பெண்கள் இவர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்கள். அடுத்து உயரம் குறைவானவர்கள் இவர்கள் எப்போதும் நகைச்சுவை பகுதிக்கு தான்.. 
பேரழகன் படத்தில் சூர்யா காதலுக்கு ஜோதிகா தான். ஒரு உயரம் குறைந்த பெண்ணை அவர் அவமதிக்கிறார். அந்த பெண்ணும் ஒரு நகைச்சுவை பாத்திரமாக கோமாளி போல வந்து போகிறார்.. . இந்த நியாய தர்மங்கள் எனக்கு புரிவதே இல்லை. காது கேளாதவர்களும் கிண்டலுக்கு பாத்திரமானவர்களே.... முன்பு இத்தகைய பல நகைச்சுவை காட்சிகளை ரசித்து உள்ளேன்.. இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறேன். இவற்றை எல்லாம் வெறும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்து கொள்ளும் பரந்த மனப்பான்மை இப்போது எனக்கு போய் விட்டது.. சமிபத்தில் ஒரு திருமங்கையின் blog படித்த போது இந்த கேலியும் கிண்டலும் அவர்களை எந்த அளவு வேதனை படுத்தும் என உணர முடிந்தது. அரவாணிகளை நாம் எதோ கிண்டல் செய்ய மட்டுமே பிறந்தவர்களை போல் கையாளும் கையவாளித்தனம் என்று ஒழியும்? எத்தனை படங்கள் எத்தனை பாடல்கள் ?

அரசியல் கன்றாவிகளை அம்பலமாகும் காட்சிகளை நறுக்க தவறாத சென்சார் போர்ட் இதையெல்லாம் ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.. எல்லாவற்றையும் ஏற்று கொண்டு செல்லும் மனபோக்கு நம்மிடம் தாராளமாக உள்ளது.. just ஜோக் தானே, சினிமா தானே... இதெல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது .. ரொம்ப யோசிக்க கூடாது.. இது தான் நம் மனநிலை.. மாறுபாட்டை கிண்டல் செய்வது நமக்கு ஜோக் அவர்களுக்கு உயிர் வேதனை என்று எப்போது உணரப் போகிறோம்??

இது போன்ற காட்சிகளை உதாரணம் சொல்ல எத்தனையோ படங்கள் உள்ளன. எடுத்துக்காட்ட நினைத்தால் ஏகப்பட்ட காட்சிகள் மனதில் வருகின்றன.. சமிபத்தில் ஓர் பால் விழைவு உள்ளவர்கள் பற்றி கிண்டல் ஆரம்பித்து உள்ளது.. மொழி போன்ற தரமான படமாக கருதப்படும் படங்களும் இதில் விதி விலக்கல்ல. இவை நகைச்சுவையா ? 

சமூகத்தின் அங்கிகாரம் அற்ற சாராரை, சற்று மாறுபட்ட புற லட்சணங்கள் உள்ளவர்களை கிண்டல் செய்ய மட்டும் தான் தோன்றுமா?

23 ஆம் புலிகேசி போன்ற பொறுப்புள்ள சில நகைச்சுவை படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் எந்த உணர்வுகளை தூண்ட வேண்டும் தூண்ட கூடாது என்ற பொறுப்பு கடமை படைப்பாளிக்கு உள்ளது. (23 ஆம் புலிகேசியில் கூட அரவாணி ஒருவர் அந்தப்புர அழகிகளின் மேற்பார்வையாளராக காட்ட படுகிறார். யதார்த்தத்தில் எப்படி இருக்கிறது /இருந்தது என்பது முக்கியம் அல்ல. ஒரு சமூகத்தின் மன நிலை மாற வேண்டி இருக்கும் போது இப்படி காண்பிப்பது தேவையா? வடிவேலு அவருக்கு பணம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பும் போது ஒரு கீழ் நிலை ஆளாகவே அவரை நடத்துகிறார்.. இதை சிம்பு தேவன் போன்ற படைப்பாளி வேறு விதமாக கையாண்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்து இருக்கும்!)

காது கேளாதோர், வாய் பேசாதோர், மாறு கண் உள்ளோர், கறுப்பான பெண்கள், மாறுகண் உள்ளவர்கள், குண்டானவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், தொழு நோய் உள்ளவர்கள், உயரம் குறைந்தவர்கள்,வயதானவர்கள்,அரவாணிகள்,ஓர் பால் விழைவு உள்ளவர்கள், எல்லாரையும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள், மக்களும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்!!
நமது ஹீரோக்கள் ஆனால் பெண்களின் பாகங்கள் பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள், அவர்கள் கற்பு பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசுபவர்கள், ரவுடிகள்,கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள்,இரு தாரம் கட்டியவர்கள், புகை பிடிப்பவர்கள், சோகம் வந்தால் தண்ணி அடிப்பவர்கள்.. உண்மையில் இந்த பண்புகளே கிண்டல் செய்ய படவேண்டிய பண்புகள். ஆனால் இவை இன்றைய heroism..

ஒரு பொறுப்பான சமூகம் யாரே எல்லாம் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.. யாரை எல்லாம் மறுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் கதாநாயகர்களாக வரித்து கொண்டு உள்ளோம்.
இந்த அநியாயம் ஓயும் வரை நமது கலை ஒரு நோயாளிக் கலையே. நமது சமூகம் இதை பார்த்து சிரித்து மகிழும் வரை ஒரு நோயாளி சமூகமே..

நகைச்சுவை செய்ய தெரியவில்லை என்றால் "shallow hal" பார்க்க வேண்டாம் .. நமது nsk, தங்கவேலு, சந்திரபாபு இவர்களது நகைச்சுவையை பாருங்கள்.. போதும் போதும் எனும் அளவு அவர்களிடம் கற்று கொள்ளலாம் சிரிக்க வைக்க..

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

நான் வித்யா - வாழும் புன்னகை




”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு எந்த தொந்தரவும் இருக்காதே?”

சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன் ‘ ஒன்னும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானது தான். இப்பக் கூட வர்ற வழியிலே ஆட்டோ ஸ்டாண்ட்லேர்ந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேர அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாய்த்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கிற விதத்துல தான் சார் இருக்கு. அதயும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சுத்தான் ஆகணும்.’ என்ற என் ப்தில் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.
‘என்னைக்கும்மா ஜாயின் பண்றீங்க?’ என்று கேட்டார்.
அந்த கணத்தை என்னால் மறக்கமுடியாது. எத்தனை காலப் போராட்டம்! ஒரு வேள்வி மாதிரி தான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். இதோ பலனளிக்கிற நேரம். ‘நாளைக்கே சேர்ந்துடறேன் சார்!’ என்று சந்தோஷமாகச் சொன்னேன்.... காலம்காலமாக அடிமையாக இருந்து விட்டு திடீரென்று விடுதலை பெற்றவளைப் போல் என்னை நான் உணர்ந்தேன். 

நான் சரவணன்  வித்யா - புத்தகத்திலிருந்து..

யார் நிஜமான போராளி? நிறைய உணர்ச்சிகளோடு பேசுபவனா? வன்மையோடு எழுதுபவனா? தன் மக்களை ஒரு சாராருக்கு எதிராய் தூண்டி விடுபவனா? நிறைய தத்துவச் சிக்கல்களை ஆராய்பவனா? என்னளவில் இதில் யாரும் எத்தனை உச்சத்தில் இருந்தாலும் போராளி அல்ல. எவன் தன் சுய அடையாளத்திற்காகவும் தன் இனத்தின் அடையாளதிற்காகவும்   நம்பிக்கையுடன் போராடுகின்றானோ அவன் தான் போராளி.
வித்யா ஒரு போராளி. ஆண் உடலில் தன் பெண்மையை  சுமந்து கொண்டிருக்கும் அவள் கேட்பதெல்லாம் மிக எளிய கேள்விகள். நான் ஒடுங்கி வாழ நான் செய்த தவறு என்ன? நான் ஏன் பிச்சை எடுக்க தள்ளப்படேன்? எனக்கு ஏன் குறைந்த பட்ச அங்கீகாரம் கூட இந்த அரசும் சமுதாயமும் செய்ய மறுக்கிறது?
இவளின் குரல் காலம் காலமாய் ஒடுக்கபட்ட இனத்தவரின் குரலில் இருந்து மாறுபட்டதில்லை. நீ ‘ச்சீ’ என்று ஒதுக்க, நீ வசை பாட, நீ கீழே போட்டு மிதிக்க நான்  ஒன்றும் ஒன்றுக்கும் ஆகாதவள் அல்ல.  நான் தவறு செய்யவில்லை. சமரசம் செய்யவில்லை. நான் என் சுயத்தை கழுவியவள் இல்லை. உன்னிடம் யாசகம் கேட்கவில்லை. நான் வாழ்வேன். உன் முன்னால். என் இனம் வாழும் என துணிந்து நிற்பவள் வித்யா.
அவள் வாழ்க்கை புத்தகத்தை படித்தேன்.
இலக்கியங்கள் தரும் ஒரு சங்கடத்தை வாழ்க்கையின் நிலையின்மை குறித்த பயத்தை , அதே சமயம் வாழ்க்கை ஒரு கொண்டாடப்பட வேண்டிய மகானுபவம் என்ற நம்பிக்கையை அந்த புத்தகம் தந்தது.
அது இலக்கியமா? இல்லை
பிரச்சாரமா? கிட்டத்த்ட்ட
அழகியல்? ம்ஹ்ம்ம்..
தொடக்க நிலை எழுத்தா? ஆமாம்.
ஆனால் எழுத்து இதை எல்லாம் மீறி நம்மை அசைக்கும். வடிவம், அழகு, கட்டமைப்பு, பொருள் என எல்லாம் புறவயமானவை. ஒரு படைப்பின் அகம் அதன் நேர்மையில் இருக்கிறது. அறச்சீற்றத்தில் இருக்கிறது. அது நம் மேல் எழுப்பும் அனுபவத்தில் இருக்கிறது. இந்த புத்தகத்தில் இவை எல்லாமும் உள்ளதா தெரியவில்லை. ஆனால் என்னுள் இதன் அகம் சுத்தமானது என்ற உணர்வு. அவன் (சரவணன்) அவளாய் (வித்யா) மாறி தன்னை மீட்டெடுக்கும் நாட்கள் நம் முன் விவரிக்க படும் போது இது யாரோ ஒருவரின் வாழ்க்கை அல்ல. நம் சமூகத்தின் வேறொரு முகத்தை காட்டும் கண்ணாடி என புரிகிறது.
 கூன் ,குருடு என உடல் மாறுபாடு உள்ளவர்கள் மேல் காட்டப்படும் கரிசனம் ஏன் சுயம் மாறியவர்கள் மேல் எற்படுவதில்லை. கிண்டலும் முகச்சுளிப்பும் வீசப்படுவது ஏன்? நம் கரிசனமும் பச்சாதாபமும் எத்தனை போலியானது. எத்தனை பாரபட்சமானது .
ஆனால் வித்யா சமூகம் குறித்தும் அதன் போலி முகம் குறித்தும் புலம்பவில்லை. அவளின் மூலதனம் சமூகத்தின் அழுகிய பகுதி குறித்த பயம் அல்ல. அதன் பசிய இலைகள் மேல் அவளுக்கு அபார நம்பிக்கை. ஆம். மானுடம் குறித்த நம்பிக்கை குறைந்தால், இருந்து என்ன ஆகப் போகிறது.
அவளோடு வந்தவர்கள் கிண்டல் செய்தவர்கள் அல்ல. பச்சாதாப கேஸ்கள் அல்ல. சக மனிதனை சக மனிதனாக மட்டுமே பார்க்கும் யதார்த்தவாதிகள்.
ஆம் வாழ்க்கை எத்தனை எளிமையானது தெரியுமா? உன்னோடு கூட வருபவனுக்கு அவனுக்குரிய மரியாதை, கொஞ்சமாய் அன்பு இது மட்டும் போதும் . யாரும் ஒடுங்கி வாழப்போவதில்லை.

வித்யா இன்று வாழும் புன்னகையாக மலர்ந்து இருக்கிறாள். ஒரு புன்னகை மலர எத்தனை வலி என்று நான் சங்கடப்படுவதா அல்லது அவள் மலர்த்திய புன்னகை மானுடம் தோற்பதில்லை என்பதற்க்கான சான்றென நம்பிக்கை கொள்வதா? இல்லை இன்னும் ஒரு லட்சம் புன்னகைகள் ஒடுங்கி வெறும் உதட்டு சுளிப்பாக பம்பாயில் யாசகம் பெற்று வாழ்வதை நினைத்து பொருமுவதா? தெரியவில்லை.
அவள் செய்யும் புன்னகை வெறும் குறியீடு மட்டுமே. அடையாளம் அல்ல. அவள் புத்தகத்தின் கடைசி பக்க்கங்கள் இரஞ்சுவது ’வாழ விரும்புகிறேன் தன்மானத்துடன்’ என்பதே.
புத்தகத்திலிருந்து மேலும் ஒரு பகுதி.
ஒரு முறை பீல்ட் ஒர்க்கிற்க்காகச் சென்றுகொண்டிருந்த போது சில சிறுவர்கள் என்னை பார்த்து ‘ ஊரோரம் புளிய மரம்.. ‘ என்று பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அதிகபட்சம் இருந்தால் பத்து பதினோரு வயதுக்குள் தான் இருக்கும். யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது? என்னைப் பார்த்ததுமே கிண்டல் செய்யும் எண்ணம் எப்படி உதிக்கிறது? பிறவியிலேயே அது வருமா? ரத்தத்திலேயே இருக்குமா? இதுவும் ஒருவித ஆதிக்க மனோபாவம் இல்லையா? சாதி மத இன மொழி வித்தியாசங்களே இதில் கிடையாது. திருநங்கையா? கிண்டல் செய். சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குதல் செய். அவமானப்படுத்து. அழச் செய். அலறி ஓடச் செய். 
என்ன உலகம் இது? நான் திகைப்புடன் அந்த சிறுவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக ஒரு சிறுவன் தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாக்கெட்டைச் சடாரென்று என் மீது வீசி விட்டு ஓடினான். சற்றுத் தொலைவிலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிரித்தார்கள். சில பெண்களும் கூட. 
எனக்கு புரிய வேண்டியது இது தான். நான் இவர்களுக்கு என்ன தாறு இழைத்தேன்? ... எனக்கு வாய்த்த நிறம். எனக்கு வாய்த்த உடல். எனக்கு வாய்த்த இயல்பான பெண்மை. இது ஏன் யாருக்கும் புரியவில்லை???

இத்ற்கு மேல் நான் என்ன சொல்ல?? ஒருவரின் வாழ்வின் வலி நமக்கு பரிகாசம் என்றால் அந்த அசிங்கம் பற்றி எத்தனை பக்கம் எழுதி என்ன ஆகப் போகிறது.
http://livingsmile.blogspot.com/

புத்தக விவரங்கள்:
Naan, Vidya,
'Living Smile' Vidya Copyright
216 Pages, Rs100
ISBN: 978-81-8368-578-8
Kizhakku Pathippagam.

திங்கள், 29 மார்ச், 2010

அங்காடித் தெரு -- யானையும் எறும்பும்


வசந்தபாலனின்  ’வெயில்’ கொடுத்த எதிர்பார்ப்பில் ஜெயமோகனின் பப்ளிசிட்டியில் :) நிச்சயம் ஒரு நல்ல படமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடனே ’அங்காடித் தெரு’ பார்க்க சென்றேன். நல்ல படமா? நிச்சயமாக.  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கண்டிப்பாக.  ஆனால் ‘ஆனால்’ என்ற ஒரு  இழுவை  படம் முழுதும் என்னை தொற்றிக் கொண்டே தான் இருந்தது.  காரணங்களை போகிற போக்கில் சொல்கிறேன். தமிழ் சினிமா மேல் நம்பிக்கை தரும் மற்றுமொரு படமாக அங்காடித் தெருவை நான் மட்டும் இன்னும் நிறைய பேர் சொல்லத் தான் போகிறார்கள். களம், கதை மாந்தர் ,திரைக்கதை எல்லாமே முதிர்ச்சியுடன் மிகுந்த குவிப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மேல் நிஜமான கரிசனத்துடன் வந்த சில தமிழ்ப்படங்களில் ‘அங்காடித் தெரு’ வும் ஒன்று. நாம் கடை வீதியில் மிக வேகமாக கடக்கும் போது   நம்மை  நிறுத்தி இதோ பார் இந்த மனிதர்களை இவர்கள் வாழ்க்கை எத்தனை நெருக்கடியானது, அவர்கள் வாழும் இந்த கடைத் தெரு போலவே என்று ஒவ்வொருவர் பற்றியும் கதை சொல்கிறது.  நீ ப்ளு கலர் சுரிதார் கேட்ட்யே அந்த பொண்ணு காசுல தான் அவ அப்பா மருந்து வாங்குராரு. ஸ்டோன் ஜீன்ஸ் கேட்ட பையன் காலைல இருந்து  50-60 கிலோ மூட்டைகளை குடோன்ல எறக்கிட்டு ஷிஃப்டுல வந்தான். நீ ஷிஃபான் சாரி கேட்ட பொண்ணு இந்தா பத்து நிமிஷம் முன்னாடி தான் அவ மார அவ முதலாளி தடவுனான்  இந்த ப்ளாட்பார்ம்ல  கர்ச்சீப் விக்குற பெரியவரு 15 வருஷமா இங்க தான் பொழப்பு நடத்துராரு. அவுரு பொஞ்சாதி கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில ஊசி மாத்தி போட்டு செத்து போச்சு. கிளிப்பு விக்குற பொண்ணுக்கு போன ஜனவரில ரோட்டோரமா படுத்து இருக்கும் போது லாரி அடிச்சு ரெண்டு காலும் போயிடுச்சு என எல்லாம் நமக்கு தெரிந்த கதைகள் ஆனால் நாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவை. காசு இல்லை என்றாலும் கலர் கலராய் கனவுகள் வராமலா போய்விடும்? வ்ந்த கனவுகளுக்கு என்ன விலை தர? கனவுகளின் நிழலாய் யதார்த்தம் பயமுறுத்தும் போது எவ்வளவு சமரசங்கள் மனசாட்சியை உறுத்தாமல் நிகழும்?  என கேள்விகளை நம் முன் இறைக்கிறது இந்தப் படம்.  ரங்கனாதன் தெருவில் இறைந்து கிடக்கும் பொருட்கள் போலவே படம் நெடுகிலும் கேள்விகள். யதார்த்ததை தொலைக்காத முகங்கள் படத்தின் பெரும் பலம். அதிலும் அந்த கதாநாயகி அத்தனை உயிர்ப்பு அவளிடம்.


ஆனால்..
படம் முடியும் போது ஒரு முதிர்ந்த அழுத்தமான படம் பார்த்து விட்டு வரும் போது கிடைக்கும் அனுபவம் என்னிடம் இல்லை. காரணம் நிறைய. மிக முக்கிய காரணம்  மிகை உணர்ச்சியும் நாடகத்தனமும் படம் முழுதும் விரவியிருக்கின்றன. ‘இங்க பாத்தியா இவன் எவ்ளோ பாவம்னு இங்க பாத்தியா இவன் எவ்வளவு கஷ்டத்துலயும் நம்பிக்கயோட இருக்கானு’ என்பது போல ஒரு வித சொல்லிச் சொல்லி காண்பிக்கும் அணுகுமுறை நம்மை படத்திலிருந்து விலக்குகின்றன.  போகிற போக்கில் சொல்லப் படவேண்டிய வாழ்க்கை துணுக்குகள் கூட அத்தனை அதி உணர்ச்சியுடன் அரங்கேறுகின்றன. உ.ம் - உயரம் குறைந்த மனிதரும் அவர் மனைவியும். இதில் அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் குறைபாட்டுடன் பிறக்கிறது. அதற்க்கு அந்த பெண் தரும் விளக்கம் வேறு. குறையுடைய மனிதனுக்கு குறையுடன் குழந்தை பிறக்கும் என்ற தேவையற்ற ஒரு செய்தி தான் இந்த அதி உணர்ச்சி கதையால் கிடைக்கும் ஒரே நன்மை.  பிண்ணனி இசை பெரும் பலவீனமாக நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் இசை பின்னால். நாடகத்தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்குடன். ஹ்ம்ம்.. ரொம்பவே இளையராஜாவை மிஸ் பண்றேன் :(


குறைகளை மீறி அங்காடித் தெரு என்னை கவர்ந்த படம். காரணம் அது துணிவுடன் முன் வைக்கும் முதலாளித்துவ பிரச்சினைகள் மட்டுமல்ல. அது காட்டும் சராசரிகளின் கனவுகளால் அவர்கள் சமரசஙகளால்.  இவை எல்லாவற்றையும் விட அதன் அடி நாதமாய் இருக்கும் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. அந்த பிளாட்பார பாய் சொல்வது போல  ‘ மனுசன  நம்பி கடை போட்டு இருக்கேன், பத்து வருஷமாச்சு. இன்னும் நம்பிக்கை குறையல’ இந்த நம்பிக்கையுடன் தான் மானுடம் இயங்குகிறது. யானை வாழும் காட்டில் தான் எறும்புகளும் வாழும் ஒன்றுக்கு ஒன்று துணையாய், நம்பிக்கையுடன். இதே செய்தியுடன் படம் முடிகிறது. மிக அழகாய்.
பி.கு: அட இப்போ எல்லா படத்துலயும் நம்ம விக்கிரமாதித்தியன பாக்க முடியுது நம்ம கவிஞர் கொஞ்ச நாள்ல ஸ்டார் நடிகர் ஆகிடுவார் போல :-)

வியாழன், 25 மார்ச், 2010

பகத் சிங்கின் இறுதி முறையீடு (தமிழில்)


 கீழ்வரும் பத்தி, தூக்கிலிடும் முன் பகத் சிங் பஞ்சாப் ஆளுநருக்கு எழுதிய மனு.  எழுதப்பட்ட தேதி சரிவர நிறுவப்படவில்லை. 
 

பெறுநர்,
பஞ்சாப்  ஆளுநர்.

ஐயா,
 பெரு மதிப்புடன் கீழ்வருவனவற்றை உஙள் கவனத்திற்க்கு எடுத்துக் கொள்ளுமாறு இறைஞ்சிகிறோம்.

நாங்கள் அக்டோபர் 7,1930 அன்று ஒரு பிரிட்டிஷ் நீதி மன்றம் ,LCC தீர்ப்பாயத்தால்  (LCC Tribunal) மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இத்தண்டனை லாகூர் சதிவழக்காக இந்திய பிரிட்டிஷ் அரசின் தலைவர் மாண்புமிகு வைஸ்ராய் அவர்களால் தொடுக்கப்பட்டது. எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம்,மாண்புமிகு இங்கிலாந்து மன்னர் மேன்மைதகு ஜார்ஜ் அவர்கள் மீது போர் தொடுத்தது என்பதாகும்.  இந்த குற்றம் இரண்டு முன் அனுமானங்களின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளது.
முதலாவதாக பிரிட்டிஷ் தேசத்திற்க்கும் இந்திய தேசத்திற்க்கும் இடையே ஒரு போர் நடப்பது. இரண்டாவது நாங்கள் அதில் பங்கெடுத்து இருப்பதும் அதனாலேயே போர்க்கைதிகளாவோம் என்பதுமாகும்.

இந்த இரண்டாவது அனுமானம் சற்றூக் கவர்ச்சியானது போலுள்ளது. ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஈர்ப்பைக் கட்டுப்ப்படுத்த முடியவில்லை.
முதல் அனுமானத்தை பொறுத்தமட்டில், நாங்கள் அதற்கான சில விளக்கங்கள் தர வேண்டிய நிலையில் உள்ளோம். மேல் குறிப்பிட்டது போல் அப்படி எந்தப் போரும் நடப்பது போல தெரியவில்லை.
இருந்தாலும் அந்த அனுமானத்தை, அது முன்னிறுத்தும் முக்கியத்துவத்தை கொண்டு, அதன் மதிப்பை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள்.  ஆனாலும் அது குறித்து மேலும் புரிந்து கொள்ள நாங்கள், அதனை மேலும் விளக்க வேண்டியுள்ளது.  இங்கு போர்ச்சூழல் நிலவுவதையும் , சில ஒட்டுண்ணிகள் இந்திய அடித்தட்டு மக்களையும்,இயற்கை வளத்தையும் சூறையாடும் வரை அது தொடரும் என்பதையும் பிரகடனம் செய்கிறோம்.
இந்த ஒட்டுண்ணிகள், பிரிட்டிஷ் முதலாளியோ அல்லது இந்திய பிரிட்டிஷ் கலப்போ, அல்லது சுத்த இந்தியராகவோ கூட இருக்கலாம். அவர்கள் இந்த முறையற்ற சூறையாடலை  ஒருங்கிணைந்த இந்திய-பிரிட்டிஷ் அல்லது முழுமையான இந்திய அதிகார முறைகளின் படி நடத்தக்கூடும். இவை எதுவும் ஒரு பொருட்டேயில்லை. உங்கள் அரசாங்கம், எங்கள் மேல் தட்டு வர்க்க தலைவர்களை, அற்ப சலுகைகள் மற்றும் சமரசங்கள் மூலம் வெல்ல முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்து, அதன் மூலம் எங்கள் முக்கிய சக்திகளின் ஒழுங்கை தற்காலிகமாய் சிதறடித்தாலும் பொருட்டில்லை. மேலும் இந்திய இயக்கத்தின் முதன்மையான புரட்சிக் கட்சியினர், போரின் தீவிரத்தில் தனித்து விடப்பட்டவர்களானாலும் ஒரு பொருட்டில்லை. எஙகள் மேல் காட்டிய பரிவிற்க்கும், அக்கறைக்கும் நாங்கள் மிகவும் கடன்பட்டிருக்கும் எங்கள் தலைவர்கள்....சுரணையற்றவர்களாகி , முதன்மையானவர்களாக கருதப்படும்  வீடற்ற, காசற்ற,  நட்பற்ற பெண் பணியாளர்களுக்காய் தங்கள் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் புறக்கணித்து , காலாவதியான தங்கள் புனித (உட்டோப்பிய) அஹிம்சை மார்க்கத்திற்க்கு எதிரிகளாக அவ்ர்களை பாவிக்கிறார்கள் - எந்த உள்நோக்கமும் இன்றி தியாகங்கள் செய்து அல்லது தங்கள் கணவர்களையும் அண்ணன்மார்களையும் தங்கள் நெருக்கமான அன்பிற்க்குரியவர்களையும், தங்களையும் சேர்த்து தியாகங்கள் செய்ய தாரை வார்த்த , உங்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டவர்களாய் பிரகடனப்படுத்தப்பட்ட, வணக்கத்திற்க்குரிய நாயகிகள் அவர்கள். உங்கள் தரகர்கள் , மிகக் கீழிறங்கி ,மாசற்ற அவர்கள் நடத்தையையும் அவர்கள் கட்சியின் மதிப்பையும் சீர்குலைக்க ஆதாரமற்ற இழிவுகளை ஜோடிக்கலாம். ஆனால் இவை எதுவுமே ஒரு பொருட்டே இல்லை. போர் தொடர்ந்தே தீரும்.

அது வெவ்வேறு காலகட்டத்தில வெவ்வேறு வடிவம் கொள்ளலாம். சிலசமயம் வெளிப்பபடையாக, சில சமயம் மறைமுகமாக சில சமயம் கலவரமாக சில சமயம் வாழ்வா சாவா போராட்டமாக ,எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். அது ரத்தமூறிய வன்முறையாக நிகழ்வதோ அல்லது அமைதியாக நிகழ்வதோ உஙள் கையில் தான் உள்ளது. எது வேண்டுமென உங்கள் விருப்பத்திற்க்கேற்ப முடிவு செய்யுங்கள்.  ஆனால் முக்கியத்துவமில்லாத, அர்த்தமற்ற சமூக நீதிகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்த போர் முடிவின்றி தொடரும். சோஷலிச குடியரசு நிறுவப்பட்டு இப்போதைய சமூக ஒழுங்கிற்க்கு பதிலாய், சமூகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட, எல்லா வகை சுரண்டல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்ற , உண்மயான, நிலையான சமாதானம் நோக்கி மானுடத்தை முன்னகர்த்தும் புதிய சமூக ஒழுங்கு ஏற்படும் வரை இந்த போர் புதிய எழுச்சியுடன், இன்னும் அதிக தீவிரத்துடன், தணியாத உக்கிரத்துடன் நிகழும்.வெகு சீக்கிரத்தில் இறுதிப்போர் நடந்து இறுதி கணக்கு முடித்துக் கொள்ளப்படும்.

உங்கள் முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த  போர் எங்களால் ஆரம்பிக்கப்படவுமில்லை. எங்களோடு முடியப் போவதுமில்லை. இப்போது நிலவும் சூழ்நிலைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத பின்விளைவுகள் இவை. எங்களின் தியாகங்கள் ,திரு தாஸ் அவர்களின் இணையற்ற தியாகம், தோழர் பகவத் சரண் அவர்களின் மேன்மை பொருந்திய தியாகம் மற்றும் எங்கள் பாசத்திற்குரிய போராளி ஆசாத் அவர்களின் உன்னத மரணம் இவற்றால் துல்லியமாக அழகுபடுத்தப்பட்ட சங்கிலித் தொடரில் ஒரு இணைப்பு மட்டுமே.

எங்கள் விதியின் படி நீங்கள் குறித்த நாளில் எங்களுக்கு மரணமளிப்பீர்கள் என்பது நிச்சயம். உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதிகாரமே இவ்வுலகின் மாபெரும் நீதி. உஙகளை வழிநடத்தும் அதிகபட்ச குறிக்கோள் ‘வலியவன் வைப்பதே நீதி’ என்பதே என்று எங்களுக்குத் தெரியும். எஙகளது வழக்கின் விசாரணை மொத்தமுமே அதற்கு சாட்சி. உஙகளுக்கு நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், உங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் படி, நாங்கள் போரில் ஈடுபட்ட போர்க்கைதிகள். அதனால் எஙகளைப் போர்க்கைதிகளாகவே பாவியுங்கள். அதாவது எங்களைத் தூக்கிலிடாதீர்கள். சுட்டுக் கொல்லுங்கள். உங்கள் நீதிமன்றம் சொன்னதை நீரூபிப்பது இனி உங்கள் கையில் உள்ளது.
உங்கள் ராணுவத்திடம், எங்களுக்குக் கொலை தண்டனை வழங்க ஒரு குழுவை அனுப்பச் சொல்லி ஆணையிடுமாறு உஙகளிடம் பணிவுடன் வேண்டிக்  கொள்கிறோம்.


உங்கள்,
பகத் சிங்.


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இது ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பு.
மூலம்: Words of Freedom  - Ideas Of a Nation Series  -- Bhagat Singh Penguin Books
ISBN:9780143068884

நான் ஒரு மொழி வல்லுனன் அல்ல. கையில் கிடைத்ததை ஆவணப்படுத்தும் ஆர்வத்தில் தான் இந்த மொழிபெயர்ப்பு. சறுக்கலான சில இடங்களை என்னால் உணர முடிந்தது. (குறிப்பாக பெண்கள் சார்ந்த கருத்துக்கள் உள்ள இடத்தில் அதன் வரலாற்றுப் பின்ணனி சரிவர பிடிபடாததால் சறுக்கியதோ என நினைக்கிறேன்)
புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்ததால்  ஆங்கில மூலத்தின் சுட்டி இல்லை.

செவ்வாய், 23 மார்ச், 2010

என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

என் சுவர்களுக்கு எப்போதோ  கண்கள் முளைத்து விட்டன.  ஆமாம். இப்போதெல்லாம் எங்கும் தனிமைக்கான வெளி இருக்கிறதா என்ற சந்தேகம் முளைக்கிறது. நான் கவனிக்கபடுகிறேன் என்ற சின்ன பயம் எல்லோருக்கும் கொஞ்சமாய் இருக்கத் தான் செய்கிறது.
மற்றவர்கள் வாழ்க்கை மேல் நம் எல்லோருக்கும் அத்தனை  ஆசை. அவன் என்ன செய்கிறான்?  இவனுக்கு என்னை விட அதிக சம்பளமா? இவளது கணவன் யார்? இன்னும் இன்னும். தோண்டி தோண்டி பேசிக் கொண்டே இருக்கிறோம்.


இந்த கிசு கிசு மனப்பான்மையை ஊடகங்கள் அருமையாக ஊதி ஒரு மாபெரும் வ்ண்ண பலூனாக பறக்க விட்டுள்ளன. உள்ளே காற்றுக்கு பதில் சேறு. ஊடகம் என்பதே காமம் வன்முறை ஆசை இவற்றின் பிரதிநித்துவமோ என்று சில சமய்ம் எனக்கு தோன்றுவதுண்டு.  ஆனால் அது அப்படி மட்டும் அல்ல. ஊடகங்கள் மக்கள் பிரதிநிதியும் கூடத்தான். மக்களின் பிம்பம் அவை.

 பிரபு தேவா - நயனோடு உள்ள உறவு குறித்து நமக்கு தான் எத்தனை அக்கறை.
டைகர் வுட்ஸ் காதலிகளின் எண்ணிக்கை குறித்து எத்தனை பெரிய விசாரனை எத்தனை பேர் இரவு பகல் பாராமல் செய்தி திரட்டினர். அவர் இனி நிம்மதியாய் சிறுநீர் கழிப்பாரா என்பதே சந்தேகம் தான்.

ஒரு செய்திக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஒரு மனிதனுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் அவனது அந்தரங்கத்திற்க்குள் எந்த அளவு நாம் நுழைய வேண்டும் இவை குறித்த எந்த முதிர்வும் நம்மிடம் இல்லை.

நம் நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்கிறோம்.
கோடி கோடியாய் பணம் தருகிறோம்
அவர்கள் படுக்கையை யாரோடு எல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று விவாதம் செய்கிறோம்.
வேசி முத்திரை குத்த அல்லது அவரது படுக்கையறை காட்சிகளை வலையில் தேட துடிக்கிறோம்.
கோயில் கட்டுகிறோம்.
கற்பு பற்றி பேசினால் செருப்பு மாலை போடுகிறோம்.
முதல்வர் ஆக்கி விடுகிறோம்.
( ஹ்ம்ம்.. அவர்கள் நடிப்பு பற்றி மட்டும்  இதே அளவு அக்கறை கொண்டு இருந்தோமானால் உலக சினிமா நம்மை தேடி இருக்கும். )

 பிரபலமானவர்கள் சொந்த வாழ்கையில் இத்தனை அதிகாரம் நமக்கு யார்  தந்தது?

ஒரு நித்தியானந்தர் கதவை திற எழுதினால், காவி தரித்து பின்னால் ஒளியுடன் புன்னகை செய்து அருள் பாலித்தால் அவர் பெரும் ஞானி . காவி கட்டி முடி வளர்த்து மந்திரம் சொன்னால் அவர்  சந்தேகம் இல்லாமல்  ஞானி தானே. இப்போதைய மார்கெட் ட்ரெண்டில் ஞானிகள் கொஞசம் குண்டலினி,பிராணயாமம் எல்லாம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பணம் கொட்டும் .தெய்வமாய் வழிபடுவோம்; பூஜிப்போம்
பின் அவர் படுக்கையறையில் திருட்டு காமிராவில் பதிவான அந்தரஙகம் காண ஆலாய் பறப்போம். "நித்தியானந்தருக்கு அடுத்தபடியாய் மற்றுமொரு   சாமியாரின்  காம லீலை - படங்களுடன்" -- எத்தனை கவர்ச்சியான டைட்டில்... சும்மா கொடுத்து பாருங்கள் ! உங்கள் வலைப்பூ ஹிட்டுக்கள் லட்சத்தை தொடும். நித்தியானந்தர் படங்களோடு நம் படங்களையும் சேர்த்து கொளுத்தினால் கணக்கு சரியாய்  இருக்கும்.

சரி விடுஙகள் கண்ணாடியில் நிறைய  அழுக்கு இருந்தால் முகம் எப்படி தெரியும். ஆனால் இந்த விளையாட்டு கொஞ்சம் சலிக்கத்தான் செய்கிறது. ஆகையால்  இதோ  காமிராக்கள் இனி உங்கள் வீடுகளிலும். பிரபலமானவர்கள் பற்றி மட்டும் பேசி பேசி அலுக்காதா என்ன?



இனி ஆளப் போவது Reality Shows தான். பின் என்ன நாம் ராஜ ராஜ சோழன் எப்படி பெரிய கோவில் கட்டினான் என்றோ தமிழக காட்டு பகுதியின் நிலை பற்றியோவா பார்க்கப் போகிறோம்? எத்தனை சுவாரஸ்யம் குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கி பாட விட்டு ஆட விட்டு பின் அழ விட்டு விடுவதில்.  அவர்களும் போட்டி நிறைந்த உலகிற்கு தயாராக வேண்டாமா? இன்னும் இன்னும் சுவாரஸ்யமாக பெரியவர்களுக்கு காதல் போட்டிகள்,தனித் தீவில் அவர்கள் மட்டுமே இருந்தால் வாழுதலுக்கு என்ன செய்வார்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டினால் தாங்கும் மனம் அவர்களுக்கு உள்ளதா, அவர்கள் சொந்த வாழ்க்கை சோகங்கள் பற்றிய முழுமையான ஆவணம் என சமூக தத்துவ உளவியல் ரீதியான அர்த்த புஷ்டியான நிகழ்ச்சிகள் தான் நம் தொலைக்காட்சியின் முகம். எல்லாம் சம்மந்தப்படவர்களின் சம்மதத்துடன் தான். பிரபலங்களுக்கு என்றால் சம்மதம் தேவை இல்லை. ஆனால் சாமனியனுக்கு தேவை.
நம் சமூகத்தின் அடுத்த பரிணாம முன்னேற்றம் ஏன் சாமனியனின் சம்மதமும் தேவை இல்லை என்று நிகழ கூடாது? நமக்கு பேச எத்தனை கிடைக்கும்?  Truman Show போல.. என் பக்கத்து வீடுக்காரன் இன்று என்ன சோப் போட்டான் என்பது எனக்கு  குட்டி சுவாரஸ்யம் என்றால் அவனுக்கு என் படுக்கையறை காமிரா பற்றி தெரியாமலா போய் விடும்?

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...