ஞாயிறு, 24 ஜனவரி, 2010

அவதார்-- ஒளிரும் புல் நுனியின் அறிவியல்

இணையத்தில் எங்கு தடுக்கினாலும் 'அவதார்'   பற்றிய செய்திகள், துணுக்குகள் உண்டு. நுணுக்கங்களுக்கு காமரூன் கொடுத்துள்ள முக்கியத்துவம் படம் பார்க்கும் பொதுஹ் எல்லாருமே உணர்ந்தது. இது பற்றிய விவரங்கள் , விவாதங்கள் நிறைய தளங்களில் நிகழ்கிறது.
மீள் யதார்த்தக் (fantasy)  கதைகளில் அறிவியல் விதிகளை சுந்ததிரமை கட்டுடைக்க முடியும்  என்பது தான் அந்த படைப்பின் சுவாரஸ்யம்.அதே சமயம் புனையவு முற்றிலும் யதார்த்தத்தை புறக்கணித்தாலோ மீறினாலோ அதன் அழகு சிதறும் அபாயம் உள்ளது. காரணம் நாம் அழகை ரசிப்பதோ உள்வாங்குவதோ, நாம் இது வரை சேகரித்த அனுபவங்களை உருவ அமைப்புகளை கொண்டே. அதனால் மீள் யதார்த்தம் குறிப்பாக அறிவியல் மீள் யதார்த்தம் ஒரு பெண்டுலம் போல அறிவியல் விதிகளை மீறுவதும் அதற்குள் முடங்குவதுமாய் ஊசலாடும்.
அவதாரும் அப்படியே. கேமரூன் பண்டோராவின் நில அமைப்புகளை நாவிக்களின் மொழியை எப்படி அதீத கற்பனையாய் உருவாக்கினாரோ அதே அளவு அறிவியல் மற்றும்  பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கவும் முயன்றுள்ளார். இதன் இருக்கங்களும் தளர்வுகளும் படைப்பாளியின் சுதந்திரத்திற்கு ஏற்பவும் ஹாலிவுட் மரபிற்கு ஏற்பவும்  கூடக் குறைய நிகழ்கிறது.

ஒரு உயிரியல் மாணவனாக ஒளிரும் அந்த காடு என்னை நிச்சயம் கவர்ந்தது. அதன் பிரம்மாண்ட கொடிகள்,தொட்டாசிணுங்கி செடிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் நிற்கும் அந்த நெடிய மரம் எல்லாமே இயற்கையின் படைப்பு எனும் மாபெரும் உண்மைகள் நீரில் அலையாடும் பிம்பமாய் மிதக்கிறது.
இதற்க்கு கேமரூன் ஒரு உயிரியல் விஞ்ஞானியை கொண்டு தாவரங்களின் இயல்பு மாறாமல் அந்த காடு உருவாக முனைந்திருக்கிறார்.


ஜோடி ஹோல்ட் (Jodie Holt) என்ற தாவரவியல் விஞ்ஞானி இதற்க்காக பங்காற்றியுள்ளார்.
 காட்டின் அமைப்பு உயிரியல் விதிகளை அதிகமாய் மீறி விடாமல் இருக்க அவர் அப்படத்தின் வரைகலை நிபுணர்களுக்கு உதவியுள்ளார். முக்கியமாய்
தாவரங்களின் ஒருங்கிணைப்பு (அந்த காட்டில் உள்ள எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்ப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே) இதற்க்காக, தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இருப்பதாய் சொல்ல இயலாது. ஆனால் தாவரங்களில் இப்போது அதிகம் ஆராய்ச்சி செய்யப்படும் சமிக்ஞை பரிமாற்றம் (Signal Transduction) கூறுகளை பயன்படுத்தவது சுலபம். காரணம் இதன் கூறுகள் இன்னும் முழுவதுமாய் நிறுவப்படாதவை. ஆதலால் கற்பனையை கொண்டு நமக்கேற்ப விரித்து கொள்ளலாம். தர்க்க ரீதியில் கேள்விகள் வராது. வந்தாலும் அதன் சாத்தியங்கள் குறித்த ஈடுபாட்டை தூண்டுவதாகவே அமையும். அந்த ஈவா புனித மரம காட்டின் மூளை போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த சமிக்ஞை பரிமாற்ற கூறுகளை அடிப்படையாக கொண்டு தான். 


இது மட்டுமல்ல மேலும் ஒரு படி பொய் இந்த தாவரங்களுக்கு முறையான தாவரவியல் பெயர்களை சூடி அவற்றுக்கான  உயிரியல் தன்மைகளை ஆவணப்படுத்தியும் உள்ளனர். ஒத்த வகை தாவரங்கள் ஒரு குழுவாக தொகுக்கப்பட்டு தொகுப்பு வரைவும் (taxonomy) உருவாக்கப்பட்டுள்ளது. ப்ஸ்யூடோசைக்காஸ் அல்த்திசிம்மா (pseudocycas altisimma),ஒபிஸ்கஸ் ரோட்டண்டஸ் (obescus rottendus) என தாவரவியல் அறிஞர்களை கவரக்கூடிய பெயர்கள் தான் இந்த தாவரங்களின் பெயர்கள். 
பண்டோராவின் நிலவியல் அமைப்பின் படி தன் தாவரங்களின் உருவ அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாய் ஜோடி ஹோல்ட் கூறுகிறார். 
பண்டோராவில் புவியீர்ப்பு விசை குறைவு (பண்டோரவீர்ப்புவிசை??) ,கரியமிலம், செனான்,ஹைட்ரஜன் சல்பய்டு போன்ற வாயுக்கள் அதிகம். காந்த விசையும் அதிகம். இதனால் அதன் தாவரங்கள் அளவில் பெருத்தவையாக இருக்கும். மேலும், தண்டுகள் மேலே வேர்கள் கீழே என்ற புவியீர்ப்பு விசைக்கு உட்பட்ட விதிகளுக்கு அதன் வளர்ச்சி அடங்காது. மாறாக காந்த விசைக்கு உட்பட்டு வளரும். இவையெல்லாம் ஜோடியின் யூகங்கள். கேமரூனின் கற்பனைக்கு துணை நிற்பவை. 


என்னைஅதிகம் கவர்ந்தது அந்த காட்டின் ஒளி. உயிர் ஒளிர்வு (bio luminescence) என்பதை கொண்டு தன் கற்பனை காட்டை ஜொலிக்க விடுகிறார் கேமரூன். மின்மினிகளாய் காடே ஒளிர்வது அழகு. 
இந்த ஒளிர்வு நாவிக்களின் தோலில் கூட ஓரளவு இருப்பதை நம்மால் காண முடிகிறது. 



அனால் இதை வெறுமே அழகின அடிப்படையில் மட்டுமே ரசிக்க முடிகிறது. காரணம் உயிர் ஒளிர்வு அதிகம் நிகழ மிகுந்த இருட்டான வாழ்வியல் சூழலே காரணமாக இருக்க முடியும் 
சூரியக்கதிர்கள் எட்ட முடிய ஆழ்கடலில் உள்ள உயிர்களுக்கு (80%-90% வரையான உயிர்கள்!) இரை தேடவும் உயிர் வாழவும் ஒரு கருவி ''உயிர் ஒளிர்வு'. அனால் பண்டோரா அடர இருள் காடல்ல.
நாவிக்களின் கண்களும் இருளில் இரை தேடும் மிருங்கங்களின் (nocturnal) 
கண்கள் போல பெரிய கண்மணிகளை கொண்டவை.  ஆனாலும்  அவர்கள் இரவில் தூங்கி பகலில் வேட்டையாடும் உயிர்களே. 


ஒரு மீள் யதார்த்த கதை இத்தகு கேள்விகள் அவசியமா என்றால் இல்லை தான். ஆனால் 'Pandorapedia'என்று விக்கிபீடியா தரத்தில் ஒரு தளம் நிறுவி, பண்டோராவை ஒரு கனவை உயிர் பெற செய்ய, அதை ஒரு கலாச்சார நிகழ்வாகக, ஒரு விவாதத் தளமாக்க முயல்கிறது அவதார் படக்குழு. 
அவர்களிடம் நாம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எத்தனை அசட்டுத்தனமாய் இருந்தாலும். கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய அசட்டுத்தனம் இன்றி வேறென்ன?? 



மேலும் சுட்டிகள்:  

Inventing the plants of 'Avatar'

Shining Examples: 10 Bioluminescent Creatures that Glow in Surprising Ways



குறிப்புகள்:
இக்கட்டுரையின் பல கலைச்சொற்கள் நான் உருவாக்கியவவை. அவற்றில் பொருட்பிழையோ அல்லது அவ்வாறு விட மேலான கலைசொற்கள் புழக்கத்தில் இருந்தாலோ குறிப்பிடவும். 

2 கருத்துகள்:

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...