செவ்வாய், 19 நவம்பர், 2013

எனக்கும் நிவேதாவுக்குமான உரையாடல்கள்.



எனக்கும் நிவேதாவுக்குமான உரையாடல்கள்.
1
காலவரிசை - 2

மனம் முழுதும் பதட்டம். என் கையில் உள்ள காகிதம் படபடத்துக் கொண்டே இருந்தது.  அதில் பதியப்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான கோடுகள் அர்த்தமற்று முன்னும் பின்னுமாய் அலைகின்றன.
இது என்னடா புரியாம வரைய try பண்ற modern artists யாரோட ஒர்க்கா?” என்றாள் கலை. எங்கள் மரபணு ஆய்வுக் கூடத்தின் மிகச் சிறந்த விஞ்ஞானி அவள்.
”interesting work of art. Hand paint பண்ணி systemல அந்த matte finish வந்திருக்காங்க .. right?” இது கணினித் தொழில்நுட்பத்தில் வல்லவனான என் நண்பன் ப்ரேம்.
ஹ்ம்ம்.. நம்பிக்கை இழந்தவனாய் நான் என் அலுவலக கட்டிடத்தின் பெரிய கண்ணாடி சன்னல்களில் பட்டுச் சிதறும் சூரிய ஒளியை வெறித்தேன்.

2
காலவரிசை – 1
அப்பா, என் fb profile ல நீ எதுக்கு கமெண்ட் பன்ன? உன் சர்க்கிள் வேற என்னோட சர்க்கிள் வேற..உன்னை unfriend பண்றேன் பா. ஓகே?”
அகிலனின் கேள்வி எனக்கு புரியவில்லை ‘what?” என்றேன்.
உன்னை facebook unfriend  பண்றேன்என்றான்  எத்தனை முறை சொல்வது என்ற தொனியில்.
ஏன்? அப்படி ஒன்னும் தப்பா கமெண்ட் பண்ணலயேடா.. இப்போ என்ன ப்ரச்னை?”
உனக்கு புரியலைப்பா.. I mean its like eavesdropping my talk with friends. அது என்னோட privacy”  என்று அழுத்தமாக சொன்னான்.
இது என்னை எரிச்சலடைய வைத்தது.’come on உனக்கும் எனக்கும் என்ன privacy? அதுவும் cricket game பத்தி நீ சொன்னதுல நான் கமெண்ட் பண்ணினேன். அதுல என்ன இப்போ?”
கமெண்ட் தப்புன்னு சொன்னேனா? You are watching me. அது தப்பு. Whatever unfriend தான் நல்லது. சாரி ப்பாஎன் மறு மொழிக்குக் காத்திராமல் அவனது அறைக்குச் சென்றான்.
Privacy என்ற  அவனது வார்த்தை எதற்க்காக சொல்லப்பட்டது என்றே எனக்குப் புரியவில்லை.
அவன் பெரியவனாகிவிட்டேனா அல்லது எனக்கு வயதாகிவிட்டதா.. இரண்டுமே தான்.. சின்ன சலிப்புடன் என் முன் விரிந்திருந்த கணைனி திரையைப் பார்த்தேன். என் Facebook பக்கத்தை அலட்சியத்துடன்  மேலிருந்து கீழ் நகர்த்தினேன்.
ஒரு நண்பர் வேண்டுகோள் வந்திருந்த்தை கவனித்தேன். லேசான ஆர்வம் மேலிட யாரெனப் பார்த்தேன். ‘நிவேதாஎன்ற பெண் வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவளது  home பக்கத்துக்கு போன போது அவள் 8 வயது சிறுமி எனத் தெரிந்து கொண்டேன். அவளது ஆர்வங்களின் பட்டியலில் கார்ட்டூன், சிறுவர் புத்தகங்கள் தவிர மரபியலும் இருந்தது.  ஆச்சரியமும், ஆர்வமுமாய் அவளைத் தோழியாக அனுமதி கொடுத்தேன்.
அனுமதி தந்த அடுத்த நொடி அவளிடமிருந்து அரட்டை அழைப்பு வந்தது.  சுவாரஸ்யத்துடன் ஹெட் செட்டை தலையில் மாட்டிக் கொண்டு அழைப்பை ஏற்றேன்.
ஹலோ அங்கிள்என்றது மறுமுனையில் ஒரு சிறுமியின் குரல். குரலைக் கேட்டவுடன் என் மனதில் ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது.
அந்தக் குரல் அத்தனை இனிமை. கேட்டாலே மனதை உடனே தொற்றிக் கொள்ளும் மகிழ்ச்சியைத் தரக் கூடிய குரல். எல்லாவற்றையும் விட கலப்படமற்ற பரிபூரண மழலைத்தன்மை இழையும் குரல்.
ஹலோ நிவேதா..நீங்க யாரு? எதுக்கு எனக்கு request கொடுத்திங்க?”  என்று கனிவுடன் கேட்டேன்.
நிவேதா மெல்லச் சிரித்தாள். “அங்கிள், எனக்கு genetics ல ரொம்ப interest. நிங்க பெரிய genetics scientist இல்ல. அதான் உங்க கிட்ட நெறைய doubts  எல்லாம் கேட்கலாம். அதான்”.
நான் பெரிதாய் சிரித்தேன். ”நிவேதாவுக்கு அவ்ளோ நெறைய doubts இருக்கா? எப்படி genetics எல்லாம் தெரியுது இந்த சின்ன வயசுல?  என்ன  standard படிக்கிறீங்க?”
“4th standard படிக்கிறேன். சும்மா genetics பிடிக்கும். நானே தான் எனக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டேன்என்றாள்.
நான் சிரித்தேன். சோம்பலும் சலிப்பும் நிறைந்த ஒரு மந்தமான மதிய வேளை ஒரு குழந்தையால் எவ்வளவு அழகானதாய் சுவாரஸ்யமானதாய் மாறுகிறது.
நான் அவளுடன் மேலும் பேசினேன்.
நீங்களே கத்துக்கிடீங்களா? Genetics தவிர வேற என்ன கத்துட்டீங்க? வேற என்னவெல்லாம் பிடிக்கும்?” என்று நான் கேட்டதற்கு அவள் சிறிது நேரம் மௌனமாய் இருந்தாள். பின்நீங்க genetics scientist தானே? மத்த்து பத்தி எல்லாம் எதுக்குஎன்றாள். நான் மீண்டும் சத்தமாய் சிரித்தேன்.
அது ஒன்னும் இல்லம்மா. Genetics ரொம்ப simple.  English ல மொத்தம் 26 எழுத்துக்கள் இருக்கு. ஆனா இந்த genetics 4 எழுத்து தான். A,T,G,C அவ்ளோ தான்  என்றேன்.
அவ்ளோதானா?”
அவ்ளோ தான். உங்க English teacher என்னை விட திறமைசாலிஎன்றேன். அவளிடம் மீண்டும் மௌனம். இந்த முறை நெடிய மௌனம்.
ஹலோ.. நிவேதா?”  மீண்டும் பெரிய மௌனம்.அவள் தொடர்பு துண்டிக்கப்பட்டதோ என யோசித்தேன். சிறிது நேரத்திற்க்கு பிறகும்ம்என்றாள் ஏதோ பெரிய யோசனையுடன். “ என்னம்மா யோசிக்கறீங்க? அவளிடம் பதிலில்லை. “ஹலோஎன்றேன்.
ம்ம்.. A,T,G,C மட்டும் தான். ஆனா நாம எல்லாம் எப்படி இவ்ளோ பெரிய ஆட்களா இவ்ளோ யோசனைகளோட இவ்ளோ திறமைகளோட இருக்கோம்? இந்த நாலு எழுத்தும் மாறி மாறி வந்து நம்மள எப்படி உருவாக்குது?” என்று அவள் கேட்டவுடன் நான் ஒரு நிமிடம் அதிர்ந்தேன்.  மழலை மாறாத எட்டு வயது குழந்தையிடம்  இப்படிப்பட்ட கேள்விகளை நான் எதிர்பார்க்கவில்லை.
அவள் குரலில் இருந்த மழலைத்தன்மை அவளது பேச்சில் இல்லை. மரபியலை அவளுக்கு எளிய மொழியில் விளக்க ஆரம்பித்தேன்



உங்க வயசுக்கு இவ்வளவு கேள்வி கேக்குறீங்க நிவேதா..very good. சரி எனக்கு தெரிஞ்சத சொல்றேன். Aவும் Tயும் Gயும் Cயும் மாறி மாறி வரும் போது வேற வேற அர்த்தம் தரும் இதை genes னு சொல்றோம்அவள் இடைமறித்துமாறி மாறி வரும் போது எது வரைக்கும் ஒரு gene னு சொல்றீங்க? Gene1 gene2 overlap ஆகுமா?".


 

எனக்கு பேச்சே வரவில்லை. அவள் இன்னும் ஏதேதோ கேட்டாள். பதில் சொல்ல சொல்ல அவளது கேள்விகள் அதிகமாகிக் கொண்டே சென்றன. அவளுக்கு gene தெரிந்திருந்தது.chromosome தெரிந்திருந்த்து. X,Y தெரிந்திருந்தது. மரபணு கோளாறுகள் தெரிந்திருந்தது.ஏன் சில சமயம் தத்துவ ரீதியாய் மரபியலை அவள் அணுகினாள். இவள் எட்டு வயது குழந்தையாய் இருக்க வாய்ப்பில்லை என தோன்றியது. அவளது கேள்விகளை நிறுத்திஉங்க கிட்ட cam இருக்கா? இவ்ளோ அறிவாளிக் குழந்தையை நான் பாக்கணுமே?” என்றேன். மீண்டும் மௌனம். பின் “ cam எதுக்கு அங்கிள்? கேள்விக்கு பதில் சொல்லுங்கஎன்றாள். எனக்கு மேலும் சந்தேகம் வந்தது.    சற்று குழப்பமாய் இருந்தது. ”அங்கிளுக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா.. நாளைக்கு பேசலாம் சரியா? நீ நாளைக்கு cam ல வர்றியா? எனக்கு உன்னைப் பாக்கணும்என்றேன்.  அவளிடம் மீண்டும் நீண்ட நேரம் மௌனம். பின் மௌனம் கலைத்துசரி அங்கிள் .. நாளைக்கு பேசுறேன்என்றாள். அடுத்த நொடி அவள் fb யில் இருந்து வெளியேறி இருந்தாள்.
அன்று முழுதும் எனக்கு நிவேதா குறித்த சிந்தனை தான். அவள் எட்டு வயது குழந்தையா? இல்லை என்றால் அவள் யார்? ஏன் என்னிடம் குழந்தை போல பேச வேண்டும்? என் மரபணு ஆராய்ச்சியின் ரகசியங்களை களாவாடும் முயற்சியா?இல்லை ஏதும் சீண்டிப்பார்க்கும் நண்பர்கள் விளையாட்டா? ஒருவேளை child prodigy யா?
அடுத்த நாள் அலுவலகத்தில் ப்ரேமிடம் இது குறித்து கேட்கலாம் என நினைத்தேன். அவன் கணினியின் தொழில்நுட்பங்களை நிறைய அறிந்தவன். அதன் இன்றைய சாத்தியங்கள் நாளைய எதிர்பார்ப்புகளை பற்றி அவனுக்கு தெரிந்த அளவு எங்கள் அலுவலகத்தில் வேறு யாருக்கும் தெரியாது. அவனிடம் கேட்டு விடலாம் என்று அவன் இட்த்திற்க்கு சென்று பின் ஏனோ கேட்காமல் திரும்பி வந்து விட்டேன்.
அன்று மாலை வீட்டுக்கு சென்றவுடன் நான் செய்த முதல் காரியம் என் மடிக்கணிணியில் FB யில் நுழைந்தது தான்.
நான் நுழைந்த அதே கணம் நிவேதவிடமிருந்து வீடியோ அழைப்பு வந்தது. ஆர்வத்துடன் அழைப்பை ஏற்றேன்.

வீடியோ திரையில் நிவேதா தெரிந்தாள். நீல நிற ஃப்ராக்கில் ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்து  இருந்தாள். அவளது குரலைப் போலவே அழகு நிரம்பிய குழந்தை அவள். வட்ட முகத்தில் திருத்தமாய் மையிட்ட நீள விழிகள். இரட்டை சடைப்பின்னலிட்டு ஃப்ராக்கிற்கு ஏற்றாற் போல நெற்றியில் நீல நிற பொட்டும், கைகளில் நீல நிற கண்ணாடி வளையல்கள் அணிந்து இருந்தாள். அவள் ஃப்ராக் முழுதும் வெளிர் நீலப் பூக்கள் பூத்திருந்தன.அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். உயிரற்ற ஜடத்தைக் கூட அவளது புன்னகை வசீகரித்து விடும். அத்தனை அழகு, கன்னியாகுமரிக் கடலில் இருந்து தேவி வந்து மழலையாய் கணினி முன் அமர்ந்து இருக்கிறாளோ என என் மனம் ஏதேதோ எண்ணப் பிதற்றல்களில் அலைந்தது.



அங்கிள், இது தன் என் ரூம்..எப்படி இருக்கு?” என்று கேட்டாள். நான் என் சுய நினைவுக்கு வந்தவனாய் அவளது அறையைப் பார்த்தேன். அறை முழுதும் பொம்மைகள் இருந்தன, அவளது சிறிய கட்டில் அறையின் பாதியை அடைத்திருந்தது. மூலையில் மர அலமாரியில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.



அங்கிள், இது தான் என் favaourite teddy”. ஒரு டெடி பேர் பொம்மையை எடுத்து வந்து காண்பித்தாள் கேமராவுக்கு மிக அருகில் அந்த பொம்மையைக் கொண்டு வந்து ஆட்டினாள். நான் சிரித்தேன். “டெடியோட பேர் என்ன?” என்று கேட்ட்தற்குபாலூ….” என்று சத்தமாய் சொன்னாள். “பாலுவுக்கு nail polish போட்டேன் இன்னிக்குஎன அதன் கைகளைக் காண்பித்தாள். அதன் பிரவுன் நிற ரோமங்களில் நீலச் சாயமிட்டிருந்தாள். நான் சிரித்தேன். அவளை அள்ளி அணைத்து முத்த்மிட தோன்றியது. அகிலனுக்கு அடுத்ததாய் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று இருந்தோம். ஆனால் பிரசவத்திலேயே அவள் தாயைக் கூட்டிக் கொண்டு இறைவனிடம் சென்று விட்டாள். அவள் இருந்திருந்தால் நிவேதா வயது தான் இருக்கும். ஹ்ம்ம்நினைவுகளிலிருந்து மீண்டு நிவேதாவைப் பார்த்துநிவேதா குட்டிக்கு ஸ்கூல் ல யார ரொம்ப பிடிக்கும்: என்று கேட்டேன்பயாலஜி மிஸ் தான்என்றாள். அவளது மரபியல் ஆர்வத்திற்கு அவளது ஆசிரியை தான் காரணமாக இருக்கக் கூடும் என யூகித்தேன். அவளது பள்ளி, பெற்றோர் பற்றி பிடித்த சினிமா பற்றி எல்லாம் ஆர்வமாய் கேட்டேன். எல்லாவற்றிற்கும் ஆர்வமாய் பதில் சொன்னாள். அவளது பேச்சில் நேற்றிருந்த இறுக்கம் இல்லை. மௌன இடைவெளிகளும் இல்லை. அவள் ஸ்கூல் பற்றி பிடித்த தோழி பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தாள். பின் சட்டென பேச்சை நிறுத்தினாள்.. ஏதோ யோசனை செய்தாள். அல்லது அது போல பாவனை செய்தாள். யோசனைக்கு பிறகுஅங்கிள் நேத்து பேசினோம். இல்ல அதுல இன்னும் நெறய doubts  இருக்கு. கேக்கவா?” என்று கேட்டாள். “கேளு நிவேதா .. என்ன  doubts இன்னும்? நேத்தே நிறைய கேட்டியேஎன்றேன்.


இல்ல.. 90% வரைக்கும் நமக்கும் ஒரு எலிக்கும் genes ஒன்னா இருக்குஆனா நம்மளும் எலியும் ஏன் இவ்ளோ வித்தியாசமா இருக்கோம்? என்று கேட்டாள். அவளது கேள்விகள் என்னை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை. எப்படி இவ்வளவு யோசித்திருக்கிறாள் என வியந்தேன். ஆனால் இம்முறை வியப்பை கட்டுபடுத்தினேன். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களைக் கூற முனைந்தேன். அவளால் எந்தளவு மரபணு குறித்து புரிந்து கொள்ள முடியும் எவ்வள்வு தூரம் செல்ல முடியும் என கணிக்க யத்தனித்தேன்.


நான் விளக்கம் கொடுக்கக் கொடுக்க அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். மரபணுவியலில் இன்னும் விடை தெரியாத கேள்விகளை எல்லாம் அவள் சுயமாக யோசித்து வைத்திருந்தாள். யோசித்த்து மட்டுமல்ல, அவற்றிற்கு விடையாய் இருக்கக் கூடியவற்றின் சாத்தியங்களைக் கூட பேசினாள். சுற்றி சுற்றி அவளது கேள்விகள் மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள மரபணு வித்தியாசங்களையே சாரமாய்க் கொண்டிருந்தன.




அப்போ நம்ம கிட்ட இருக்கிற எலி கிட்ட இல்லாத ஜீன்ஸ எலிக்கு கொடுத்தா எலி மனுஷன் மாதிரி நடந்துக்குமா?” இப்போது அவளது கேள்விகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. நிவேதாவின் மரபணு அறிவை ஒரு 8 வயதுக் குழந்தையின் புரிதலாக ஏற்றுக் கொள்ள முடியாது எனபதை நான் உணர்ந்து கொண்டிருந்தேன். அவளது கேள்விக்கு என்னிடம் நிறைய பதில்கள் இருந்தன. ஆனால் அவள் இப்போதைய அறிவியலின் போதாமைகள் குறித்து நிறைய ஐயங்கள் கொண்டிருந்தாள். உதாரணம் எலிக்கு நமது ஜீன்ஸை செலுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை அவள் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. ஏன்? ஏன்? என்று மேலும் கேள்விகள். ஜீன் வடிவம், ligase, endonuclease குறித்து எல்லாம் அவள் முழுமையாக அறிந்து இருந்தாள். ஒரு கட்டத்தில் நான் அவளுக்கு நான் விளக்கம் தருகிறேனா அவள் எனக்கு விளக்கம் தருகிறாளா எனத் தெரியாத அளவு அவளது வாதங்கள் இருந்தன.

அன்றிரவு பத்து மணி வரை அவள் விவாதம் செய்து கொண்டு இருந்தாள். அதற்கு மேலும் கூட அவள் களைத்துப் போனதாய் தெரியவில்லை. நான் தான் களைத்திருந்தேன். ஒரு கட்ட்த்தில் அவளை நிறுத்தினேன். “ நிவேதா 8 வயசு பொண்ணு மாதிரியில்ல நீ. என்னளவுக்கு உனக்கு genetics தெரிஞ்சு இருக்கு.. ரொம்ப ஆச்சரியிமா இருக்கு. நீ தமிழ் நாட்டோட சொத்தும்மா.” என்றேன். அவள் கலகலவெனச் சிரித்தாள். ‘போங்க அங்கிள்.. சும்மா விளையாடிதீங்கஎன்றாள் மழலையாய்.

இப்படி அடுத்தடுத்த நாட்கள் அவளுடன் பேசி கொண்டிருந்தேன். நாளாக நாளாக அவளது கேள்விகளின் சிக்கல்தன்மை கூடிக் கொண்டே போனது. எங்கள் பேச்சு இப்போது கேள்வி பதில்களாய் இல்லை. விவாதங்களாய் இருந்தது. மனித மரபணுவின் சாரம் ஜீன்களின் எண்ணிக்கையில் இல்லை. மாறாக அது குரோமோசோம் மடிப்புகளில் புதைக்கப் பட்டிருக்கிறது என நிவேதா நிச்சயம் நம்பினாள். அது ஒரு சாத்தியம் மட்டுமே என்பதை அவள் ஏற்கவில்லை.



மனிதனுக்கும் எலிக்கும் உயிரியல் ரீதியாய் மிகப் பெரிய வித்தியாசங்கள் இல்லை , இருவரும் பாலூட்டிகள், இருவரது உடலும் கிட்டத்தட்ட ஒன்றாய் இயங்குபவையே என்ற என் வாதத்தை அவள் கடுமையாக மறுத்தாள். அப்படியெனில் மனிதன் எப்படி தன் நோய்களை வென்றான், எப்படி தன்னைக் காப்பாற்றி தடையின்றி உற்பத்தி பெருக்கம் செய்து இந்த உலகின் பெரும் சக்தியாய் உருவாகி உள்ளான். வெறும் உடற்கூறுகளுக்கு மட்டுமல்ல, உணர்வுகள்,அறிவு,தனி மனித வேறுபாடுகள்,மனம், ஞானம் ஆன்மா எல்லாமே மரபணு தான் என்று விவாதித்தாள். இதெல்லாம் தாண்டி வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் கூட மரபணூவால் தான் தீர்மானிக்கப் படுகிறது என்றாள். எப்படி என்றதற்கு கூட்டு மரபணு செயல்பாட்டின் விளைவால் நிகழ்வுகளின் சாத்தியங்கள் தீர்மானிக்கப்படுகிறது என்றாள். இந்த வாதத்திற்கு நான் கடுமையாய் ஆட்சேபம் தெரிவித்தேன். என் ஆய்வு முடிவுகளையும் சூழல் சமூக கட்டமைப்பு கலாச்சாரப் பிண்ணனி இவற்றின் தாக்கங்களையும் முன் வைத்து விவாதித்தேன். மரபணு சூழலிடமிருந்தும் சூழல் மரபணுவிடமிருந்தும் கொடுத்தும் வாங்கியும் நிகழுந்து கொண்டிருக்கின்றன என்றேன். அவளோ சூழல் வெறும் கருத்துருவாக்கமே. மரபணு பருப் பொருளாய் உயிரை இயக்குகிறது. உயிர் சூழலை உருவாக்குகிறது என்றாள். இல்லை  என நான் அவளைக் கோபமாய்த் தடுத்தேன். “சூழல் அரூபமானது அல்ல. பருப்பொருள் அதன் இயல்புகள் மற்றும் விளைவுகளால் ஏற்படுகிறது. பூமி என்பதே உயிர் வாழ சாதகமான சூழல்.அது தான் உண்மை.. அதனால்….” நான் கோபமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே என் பேச்சைத் தடுத்து என் முன்னால் தன் பிரிய டெடி பொம்மையை எடுத்துக் கேமரா முன்னால் நீட்டினாள் .

நன்றி.. உங்களிடமிருந்து இனி நான் பெற வேண்டியது ஒன்றுமில்லை.” என்றாள். நான் குழப்பத்துடன் அவளது டெடியை நோக்கினாள். டெடியால் தன் முகத்தை மறைத்திருந்தாள்.

என்ன சொல்றே நிவேதாஎன்றேன். அவளிடமிருந்து பதிலில்லை. டெடியை முகத்துக்கு முன்னால் வைத்து இடவலமாய் அசைத்துக் கொண்டே இருந்தாள். ஏன் என்று புரியவில்லை.
நிவேதா ?” என்றேன். பொம்மை ஆடிக் கொண்டே இருந்தது.
நிவேதா.. பொம்மையை முதல்ல எடுஅதட்டலாய் சொன்னேன்.
இன்னும் உங்கள் நேரப்படி எனக்கும் உங்களுக்குமான தொடர்பு 30 நிமிடங்கள் மட்டும் தான்என்றாள்.
அவள் குரல் மாறவில்லை என்றாலும் அதில் வித்தியாசம் இருந்தது.வயதுக்கு மீறிய தத்துவ விவாதங்கள் செய்த போது கூட அவளது குரலில் மழலையின் குழைவும் இனிமையும் இருக்கும்.
இப்போது அது இல்லை. வரண்ட உணர்ச்சியற்ற தன்மையுடன் பேசினாள். “ஏன் என்ன 30 நிமிஷம். எனக்கு புரியலைம்மாஎன்றேன்.
அவளிடம் பதிலில்லை. புதிரான மௌனமும் எரிச்சலூட்டும் டெடியின் அசைவும் தான்.
நிவேதா பேசு எதாச்சும்..” என்றேன்.
என்ன பேச வேண்டும்?”
ஏன் செந்தமிழ் திடீர்ன்னு.. குழப்பமா இருக்குஎன்றேன்.
 


மழலைத் தமிழுக்கான  தேவை முடிந்தது. எனக்கு அதை விட இந்த பேச்சு முறை சுலபமாக இருக்கிறதுஎன்றாள். ஒரு வேளை நிவேதா மறுமுனையில் இல்லையோ.. டெடியை வைத்துக் மறைத்துக் கொண்டு ஏதேனும் பின்னால் நடந்து கொண்டு இருக்கிறதோ என்று தோன்றியது.
ஏன் மழலைத் தமிழ் தேவை இல்லைஎன்று நான் கேட்டவுடன் பதில் வந்தது.
ஆம்.. நான் மழலை இல்லை. நான் மனிதனும் இல்லை. நான் facebook வலைப் பக்கத்திலும் இல்லை. நான் உன்னிடமிருந்து 100 ஒளியாண்டுகள் தாண்டி வாழ்கிறேன். எனது வசிப்பிடம் பூமிக்கோள் அல்ல.”
நான் அதிர்ந்து நிமிர்ந்தேன்.
என்ன சொல்றே நீ.. அப்போ நீ நிஜமாவே குழந்தை இல்லையா? “ என்று கேட்டேன். எனக்குள் இந்த கேள்வியின் அபத்தத்தை விட அவளை எப்படி குழந்தை என்று இத்தனை நாள் நம்பினேன் ,அவள் இப்போது சொல்லும் உளறல்களை எப்படி எப்படி நம்புவேன் என்பதன் அபத்தம் பன்மடங்காய் என் முன் வந்து என்னைக் கேலி செய்தது.
என் சேரில் நிமிரிந்து உட்கார்ந்தேன்.
நீ யார்? என் ஆய்வு முடிவுகளை திருட வந்த ப்ரோக்ராமா நீ? யார் உன்னை எழுதியது? அதை சொல்றதுக்கு உனக்கு உரிமை தந்து இருக்க மாட்டாங்க.. ஆனா இப்படி அபத்தமா பொய் சொல்ல உன்னோட smart programmers எப்படி முடிவு செஞ்சாங்க?” நான் என்ன பேசுகிறேன் என்று புரியாமல் பேசிக் கொண்டு இருந்தேன். நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “ நீ நிஜமாவே குழந்தை இல்லையா?” ஏதோ ஒரு நம்பிக்கையில் இதைக் கேட்டேன்.
மன்னிக்கவும், இல்லை
நீ யாரு?”
நான் உன்னிடமிருந்து நூறு ஒளியாண்டுகள் தாண்டி வாழும் உயிர்எனக்கு கோபம் வந்தது.”திரும்பத் திரும்ப அதே பொய்யை உளறாதே .. யார் நீ சொல்லு?”
நான் உன்னிடமிருந்து..”
“Stop it… “ என்று கத்தினேன்.
அவளிடம் பேசிப் பயனில்லை எனப் புரிந்து கொண்டு என் நண்பனுக்கு ஃபோன் செய்தேன். அவனை இந்த வீடியோ சாட்டின் IP address trace செய்ய சொன்னேன். திரை முன்னால் இன்னும் டெடி ஆடிக் கொண்டு இருந்தது. என் நண்பன் ஐந்து நிமிடங்கள் என் கணினிக்குள் நுழைந்தான். ஏதேதோ செய்து விட்டு பின் மீண்டும் என் கைப்பேசிக்கு அழைத்தான்.
மச்சான், அதை ட்ரேஸ் பண்ணா உன்னோட home IP  தான் டா வருது. ரிமோட்ல உன் லேப்டாப்பை எடுத்தப்போ அந்த cam ல கூட உன் முகம் தான் டா தெரியுது.. strange..  நீ நல்லாதாண்டா இருக்கே?”
டேய் மூடு.. நானே கடுப்புல இருக்கேன். சரி அந்த cam ல நீ பாத்தப்போ டெடி பொம்மை எதும் தெரிலயா?”
ஹ்ம்ம்.. இல்லடா நீ தாண்டா தெரிஞ்சே நிஜமா.. “
எதும் வைரஸா
எனக்கு தெரிஞ்சு இப்படி எல்லாம் ப்ரோக்ராம் இருக்கற மாதிரி தெரிலடா
எனக்கு எரிச்சலாய் வந்தது.
சரி ஃபோனை வைநான் பாத்துக்குறேன்என்றேன்.
ஃபோனை கட் செய்து விட்டு என் திரையைப் பார்த்தேன்.
டெடி பொம்மை ஆடிக்கொண்டு இருந்தது  .





நிவேதா?”
சொல். உன்னுடன் எனக்கு உங்கள் கால அளவில் இன்னும் 15 நிமிடங்கள் தான் இருக்கிறது
நீ ஏன் பொய் சொல்றே?”
எனக்குப் பொய் சொல்லத் தெரியாது,உண்மை பொய் இருநிலை எனக்கு இல்லை
ஹஹ்ஹா..8 வயது பொண்ணா 5 நாள் என்கிட்ட ரொம்ப உண்மையா இருந்தயே
அதுவும் உண்மையோ பொய்யோ இல்லை.அது உத்தி
போதும் உன் வாய் சாமர்த்தியம்
கோபத்தில் என் கணினியைத் தட்டினேன். அது அதிர்ந்து பின் அடங்கியது.
திரையில் இன்னும் டெடி ஆடிக் கொண்டே இருந்தது.

3
காலவரிசையின் ஏதோ ஒரு புள்ளியில்
நிவேதாவிற்கும் எனக்குமான உரையாடல்கள்.

ஏன் குழந்தையா வந்தே..  நீ கேட்ட அத்தனை மரபணு கேள்விகளுக்கும் குழந்தைக்கும் எப்படி ஒத்துப் போகும்?”
மனித மூளை தர்க்க ஒத்துப் போதலை விட உணர்வுகளுக்கு அதிகம் வளைந்து கொடுக்கிறது. குழந்தையை இழந்த நீ என் உருவத்தில் தகப்பன் உணர்வுகள் தூண்டப்பட்டவன் ஆனாய். ஒரு குழந்தையிடம் உன் தன்முனைப்பு குறைவாய் இருந்த்து. அதனால் உன் ஆராய்ச்சி முடிவுகளை என்னிடம் சுலபமாக சொன்னாய்
இது நடிப்பு.. பொய்யில்லைனு எப்படி சொல்றே?”
பொய்.. உண்மை என எதுவுமே கிடையாது. உயிருக்கு தகவல்கள்,  உத்திகள் மட்டுமே உள்ளது. உண்மை பொய் என்ற இருநிலை மனித உயிரின் வாழ்வியல் உத்தி. எங்கள் உயிருக்கு அத்தகைய விளக்கங்கள் இல்லை.”
அப்போ உங்களுக்கு நியாய அநியாயங்கள் கூட இல்லையா?”
இல்லை
பின்னே என்ன தான் இருக்கு
உயிர், தகவல்,உத்தி
அப்போ உங்களை நீங்களே கொன்னாலும் அடிச்சு சாப்பிட்டாலும் அது உத்தி தானா?”
உத்திகள் எங்களை மேம்படுத்திக்கொள்ள. எங்களுக்கு மரணம் இல்லை
என்ன? உயிர் என்றால் பிறக்கும், அழியும்.. அப்போ நீ உயிரே கிடையாது
உயிரின் உங்கள் விளக்கம் இது. எங்கள் தகவல்படி நீங்கள் தான் உயிரே கிடையாது. நீங்கள் உயிர் கடத்தி மட்டுமே..உங்கள் மரபணுச் சரடின் உயிர் கடத்தி நீங்கள். ஆனால் நாங்கள் உயிர்கடத்தி அல்ல. உயிர். அதனால் எங்களுக்கு ஆரம்பம் இல்லை. அழிவும் இல்லை.”
.. அப்போ நீங்க எத்தனை பேர் இருக்கீங்க?” உங்களுக்கு இனப்பெருக்கமாவது இருக்கா?”
எங்களுக்கு எண்ணிக்கை இல்லை. நானே என் உயிரினத்தின் தொகுப்பாகவும் இருக்குறேன். நானே என் ஒற்றை ஆளாகவும் இருக்கிறேன். மனிதர்கள் இந்த்த் தொகுப்பும் தனிமனிதனும் ஒரே கூற்றின் வெளிப்பாடு என்பதை உணர மறுக்கிறார்கள்
நீ சொல்வது அத்வைதம்
உங்கள் தத்துவங்கள் முழுமையற்றவை. உங்கள் மூளையின் குறை நிறையின் வெளிப்பாடுகள்
.. அப்போ நீங்க பரிபூரணமான்வர்களா?”
ஆம்.. நான் அல்லது நாங்களே பரிபூரணம்
அப்போ கடவுளா??”
பரிபூரணம் தான் கடவுள் என்றால் ஆம்..”
அப்போ மனிதனை நீ தான் படைச்சயா?”
இல்லை. யாரும் யாரையும் படைக்கவில்லை. எல்ல்லோரும் இருந்து கொண்டு இருக்கிறோம். அவ்வளவே.. உயிர் தன்னை வெவ்வேறு முறைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறது.”


அப்போ மனுஷன் ஏன் கலை அறிவியல்,அரசியல்,சமூகம்னு இத்தனை விஷயங்களோட இருக்கான்.சும்மா  இருந்துட்டு மட்டும் போலாமே
எல்லாம் உத்திகள்
எதற்கு
உயிரின் வெளிப்பாட்டிற்கு
ஆன்மீகம் கூட உத்தியா?”
ஆம்.. உயிர் பரிபூரணத்தில் முழுமையாய் வெளிப்படுகிறது. அதனால் நீங்கள் ஏதோ ஒரு வகையில்  அந்நிலையை அடைய முயன்று கொண்டே இருக்கிறீர்கள்.”
ஆன்மீகம் அந்நிலையை அடைந்து விட்டதா?”
இல்லை ஆன்மீகம் அந்நிலையை சரணடைகிறது
அப்போ அறிவியல்?”
அறிவியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பதை மட்டுமே கண்டடைகிறது. உங்கள் அறிவியலின் இலக்கு பரிபூரணம் அல்ல. உங்களை சுற்றி இருப்பதை அறிவது மட்டுமே
அப்போ நீ ஏன் எங்க மரபணுவைத் தேடி வந்திருக்கே, ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து என்கிட்ட வந்தே? உனக்கே எல்லம் தெரியுமே
நீ உணர்வுகளுக்கு சுலபமாய் இலக்காகுபவன். அதனால் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் மரபணுத் தொகுப்பு மொத்தமும் நான் அறிவேன். ஆனால்  மனிதனின் மரபணு குறித்த அறிவும்  எனக்கு அவசியம்
ஏன் அவசியம்?”
அது உனக்குத் தேவையில்லை
ஏன் சொல்லமாட்டியா? பரிபூரணத்திற்க்கு நிறைய சுயநலங்கள் இருக்கும் போல இருக்கே?”
உயிர் சுயநலமானது
அதனால் சொல்லமாட்டியா?”
சொல்லத் தடையில்லை.. கேட்டால் நீ உணர்ச்சிவசப்படக் கூடும்
பரவாயில்ல சொல்லு
உன்னிடம் விவாதம் செய்யும் போது உயிரின் முழுமை முழுமையின்மை குறித்து அளவிட முடியும்:
புரியல
தகவல்களில் விவாதம் இல்லை. விவாதம் அறிதல் அறியாமையின் நடுவில் நிகழ்வது. என்னிடம் தகவல்கள் மட்டுமே உள்ளது.நான் முழுமையானவன். உன்னிடம் விவாதம் உள்ளது. நீ முழுமையற்றவன். உன்  மரபணுவின் முழுமையின்மையை அறிய இந்த விவாதம் எனக்கு தேவை
தெரிஞ்சுடுச்சா?”
இல்லை.. ஓரளவு தன் தெரிந்தது. பரிபூரணமின்மைக்கு பரிபூரணத்தை அறிவதில் உள்ள குழப்பம் , பரிபூரணம்  பரிபூரணமின்மையை அறிய முற்படும் போதும் ஏற்படும்
சரி.. இப்போ இதையெல்லாம் ஏன் தெரிஞ்சுக்கணும்
ஒரு உயிரினம் அழியாமல் இருக்க அது தேங்கி இருக்கக் கூடாது.முழுமை என்பது தேங்கிய நிலை. முழுமைக்கு மேல் செல்ல ஒன்றும் இல்லை. அதனால் தேக்கம் தான் ஒரே வழி. நாங்கள் அதனால் தேங்கி இருக்கிறோம். இது எங்களுக்கு ஆபத்தானது. தேக்கத்தை சரிகட்ட எங்களுக்குள் வேறுபாடு தேவை. முன்-பின் மேல் கீழ் என்ற வேறுபாடு தான் உயிர் வாழ ஊக்கம். இந்த ஊக்கம் உங்களிடம் நிறைய உள்ளது. அதனால் தான் நீங்கள் கலை இலக்கியம் ஆன்மீகம் அறிவியல் அரசியல் விளையாட்டு சமூகம் எனப் பன்முகம் கொண்டுள்ளீர்கள். அதனால் உங்களை அறிவது அவசியம்
தெரிஞ்சு எங்களைப் போல ஆகப் போறிங்களா
இல்ல.. உங்கள் கூறுகளை எங்களுக்குள் செலுத்தப் போகிறோம்
என்ன? எங்க மரபணுக் கூறுகளையா?”
ஆம்.. நீங்கள்  என நான் குறிப்பிடுவது எல்லாமே மனித மரபணுவைத்தான்”.



இது அபத்தம்.. மரபணு எங்களுடையது. உங்ளுக்கு அதை செலுத்தினா என்ன விளைவுகள் வரும்னு தெரியாது



ஆம்.. சரி. இது குறித்து முழுமையாய் அறிந்து கொள்ளும் வரை அதுவும் செய்ய மாட்டோம்
முழுசா தெரிஞ்ச பிறகு
மனித மரபணுவை எங்களுக்கு செலுத்தி அதன் விளைவுகளை ஏற்றுக் கொள்வோம்
 



அப்போ மனித மரபணுவை இரண்டு உயிரினங்கள் பங்கு போடப் போறோமா?”
அது குறித்து முடிவெடுக்கவில்லை
என்ன முடிவு.. புரியல
ஒரு மரபணுவை இரு உயிரினங்கள் பகிர்ந்து கொள்ளும் போது பல சிக்கல்கள் வரக் கூடும்
அதனால
அதனால மனித குலத்தை நாங்கள் அழிக்க நேரிடலாம்
என்ன???”
இது தவிர்க்க முடியாதது
நீங்க அழிக்கற வரைக்கும் நாங்க சும்ம விட்டு வேடிக்கை பாப்போம்னு நினைக்கிறியா?”
நீங்கள் மிக எளிய உயிரின்  வடிவம். அழிப்பது உங்கள் கால அளவில் ஒரு நொடிக்குள் முடியும் வேலை
இல்லை இது என்னால நம்ப முடியாது
உன் நம்பிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை
அப்போ.. அப்போ இப்பொவே அழிக்க வேண்டியது தானே
மனிதனைப் போல எந்த்த் தேவையும் இன்றி எதுவும் செய்ய மாட்டோம். காரணமில்லாமல் எந்தக் காரியமும் நிகழ முடியாது
இதெல்லாம் நடக்க நான் தானே காரணம். ஐய்யோ.. எப்போ மரபணு பத்தி தெரிஞ்சாலும் எங்களை அழிச்சுருவீங்களா?? ”
மனித குல அழிவு ஒரு சாத்தியமே..மரபணு குறித்து நாங்கள் தெளிவடைய கால அவகாசம் தேவை. இதோ உங்களுடைய அடுத்த நொடியிலும் நிகழலாம். அல்லது யுகங்கள் தாண்டியும் நிகழலாம்
இது அநியாயம். என்கிட்ட எல்லம் தெரிஞ்சு எங்களை அழிக்கறன்னு சொல்றே. நீ உன் மரபணுத் தொகுப்ப்போட தகவலை என்கிட்ட தருவியா? இதுல பாரபட்சம் காட்டுற இல்ல??”
உன்னிடமிருந்து எந்த தகவலும் தெரிந்து கொள்ளவில்லை. உன் விவாதப் ப்போக்கு என் குழப்பங்களை ஓரளவு தெளியத் தேவையாய் இருந்தது.  
உன் இரண்டாம் கேள்விக்கான எனது பதில். எங்கள் மரபணு மிக சிக்கலானது. மனித நீயூரான்களின் அறிதல் முறைக்குள் அகப்படாத வரைவு எங்களுடையது.”
அப்போ தர மாட்டே
தருகிறேன். உனக்கு அதில் பிரயோஜனம் இல்லை. ஆனாலும் நான் முதலில் சொன்னது போல மனிதன் வேறுபாடுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பவன். இன்று உங்கள் நியூரான் எளிமையானது. ஆனால் எங்கோ ஒரு மனிதனின் நியூரான் முடிச்சு எங்களுக்கு புலப்படாத அறிதல் திறனைக் கொண்டு இருக்கலாம். சாத்தியங்கள் மிகக் குறைவுதான் என்றாலும் பூஜ்யமில்லை.
கணினி அருகே இருந்த ப்ரிண்ட்டர் தானாக இயங்கத் தொடங்கியது. பல வண்ணக் கோடுகள் ஒன்றன் மீது ஒன்றாக காகித்த்தில் தோன்றின. ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வரைந்து கொண்டிருந்தது. பின் காகிதத்தை முன் தட்டில் தள்ளிவிட்டு அணைந்தது.
உன்னுடன் எனக்கான நேரம் முடிந்து விட்டது. நன்றி

4
காலவரிசை 3
அகிலன் ஆழ்ந்த தூக்கம் கலைந்த்தால் மிகுந்த எரிச்சலுற்றான்.
டேய் கவின். எதுக்கு இப்போ இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கே? நிம்மதியா தூங்க விட மாட்டியா?”
கவின் தந்தையின் சலிப்பை பொருட்படுத்தாமல்அப்பா.. அப்பாஎன்று அவனைத் தட்டினான்.
போர்வையை இழுத்தான். அகிலன் அவனைத் தூக்கி கட்டில் மேலேற்றி அவன் வயிற்றில் உட்கார வைத்துக் கொண்டான்.
டேய் ..என்ன வேணும் உனக்கு
அப்பா குதிர பொம்ம
அது என்னடா.. இருக்குற பொம்மை பத்தாதா உனக்கு
குதிர பொம்மசொல்லிக்கொண்டே அவன் வயிற்றில் குதித்தான்.
ஓஓ.. எங்க இருக்கு.. குதிக்காம சொல்லு டா
பெட்டி உள்ள





எங்க .. எந்த பெட்டி

கவின் அவமை கட்டிலில் இருந்து இழுத்தான்.
இருடா.. வரேன் இரு இரு
அகிலனின் உடையை சரி செய்யக் கூட நேரம் தரவில்லை. இழுத்துக்கொண்டே சென்றான்.
சமையலறையின் பின் புறம் மூலையில் ஒரு பெட்டி இருந்தது. அது அகிலனுடைய அப்பவின் பழைய பெட்டி.
இது தாத்தாவோடது. இத எப்படி திறந்து பாத்த? இதுல தான் இருக்கா?”
ஆமா.. எடு
அகிலன் அந்த பெரிய மரப்பெட்டியை திறந்தான். உள்ளே ஒரு மூலையில் துணியில் செய்த குதிரை பொம்மை இருந்தது. அதை எடுத்து கவினுக்குத் தந்தான். அப்பா பெட்டியில் இருந்த்தால் இது அநேகமாக தன் பொம்மையாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெட்டியை மூடப் போனான். மூடும் போது தான் அந்த காகிதம் பெட்டியின் இன்னொரு மூலையில் இருப்பதைப் பார்த்தான். காகிதம் முழுதும் அழுத்தமான வண்ணக் கோடுகள்.
அதை எடுத்து பார்த்தான். சில நிமிடங்கள் அந்தக் கோடுகளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
கண்களில் ஆச்சரியம். சன்னலருகே சென்று சூரிய வெளிச்சம் படும்படி காகித்த்தை உயர்த்திப் பிடித்தான். ஒளிபட்ட வண்ணங்கள் மின்னின.
வேகமாக அந்தத் தாளோடு அப்பாவின் அறைக்குச் சென்றான்.
அப்பாவின் கட்டிலருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
அப்பா இது உன்னோட பழைய பெட்டியில இருந்து எடுத்தேன். இது என்னப்பா? ஞாபகம் இருக்கா?”
அகிலனின் அப்பா அதை பார்த்தவுடன் கண்கள் விரிந்தன. பதட்டத்துடன்இது.. இதை எதுக்குடா எடுத்தேஎன்றார்.
ச்ப்.. என்ன இது.எதுக்கு இதை பத்திரப்படுத்தி வெச்சிருக்கே
அது எதுக்கு இப்போ
சொல்லுப்பா
ஒண்ணும்மில்ல.. எதோ டிசைன் பேப்பர். பெட்டில அப்படியே கெடந்து இருக்கும்
இது டிசைனாகாகிதத்தை அவன் கண் முன் கொண்டு சென்று ஆட்டிக் கேட்டான்.
வேற என்ன. எதும் art மதிரி இருக்கா
“bullshit.. உனக்கு தெரியல? இது ஏதோ pattern. ரொம்ப சிக்கலான pattern. I think ஒரு வகை code. இதுல இருக்க ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு கோடும் எதையோ குறிக்குது.. interesting”
நிஜமா உனக்கு இது code மதிரியா தெரியுது.. இது ஒரு ஆர்ட் டா
அகிலன் அப்பாவை இடைமறித்து தலையசைத்தான்.
“no no .. நீ ஒரு genetic scientist. நீ இதை எப்படி art னு சொல்றே. உனக்கு வேணா தெரியாம போகலாம். என்னோட maths மூளை தெரிஞ்சுக்கும்
தெரிஞ்சு என்ன ஆகப் போகுதுமூப்பின் சலிப்புடன் பேசினார் அகிலனின் அப்பா.
அகிலன் சேரை விட்டு வேகமாய் எழுந்தான்.
அப்பா.. A puzzle exists to get solved. விடை தேடினா தான் மனுஷன் முன்னேறுவான். இல்லை தேங்கிப் போயிடுவான் எனச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்

----------------------X---------------------------------------X--------------------------
 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பரிமாற்றங்கள்

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...