புதன், 22 செப்டம்பர், 2010

கமலஹாசன் என்றொரு கலைஞன் இருந்தான்.



கமலின் திரைப்படங்கள் பல உலக திரைப்படங்களின் தழுவல் என சாடும் பதிவை பார்த்தேன் (http://www.karundhel.com/2010/09/blog-post.html). பொதுவாகவே இது தமிழில் கமல் முதற்கொண்டு நிறைய பேர் செய்து வரும் விஷயம். எந்த கதையும் ,படைப்பும் முழுக்க முழுக்க தனித்து நிற்க முடியாது. எதேனும் ஒரு கதையை நினைவு படுத்துவது மிக இயல்பு. ஆனால் தனிச்சையான ஒத்துபோதலை  மீறி கட்டமைக்கப்பட்ட தழுவலாக அது நிகழும் போது மூலம் பற்றி குறிப்பிடுவதே அடிப்படை நாகரீகம். இது குறித்த எனது சிந்தனைகளை அந்த  பதிவில் கருத்துரை இட்டேன். கருத்துரை தனி பதிவாகக் கூடிய சாத்தியம் கொண்டிருந்ததால் இங்கு பதிவிடிகிறேன்.

---------------------------------------

நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.

உதாரணமாக ‘planes automobiles..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம்.  ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்)  இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை  மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.

 ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு  அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை  ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.

தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை.   இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு  தெரிந்தது  சாகெத் ராம் அல்ல  பெரும்பாலும் கமல் மட்டுமே )
கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல்.  உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.

நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும்  கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.


------------------------------------------

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தமிழ் எண்கள் வழக்கொழிந்து விட்டதா?

இன்று தமிழ் எண்கள் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. மும்பையில் எல்லா பஸ்களிலும்  மராத்திய எண்கள் தான்  உபயோகபடுத்தப்பட்டிருக்கும். . பேருந்து எண்களை பார்க்கும் போதெல்லாம் இதே போல தமிழில் எண்கள் உபயோகபடுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என யோசிப்பேன்.  யாருக்கும்மே அது புரியப் போவதில்லை. பேருந்து எண்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ் பாடபுத்தகங்கள் கூட தமிழ் எண்களை சொல்லித் தருவதாய் தெரியவில்லை. இது பற்றி பேசிய போது என் நண்பன் தமிழில் எண்கள் உள்ளதா என கேட்டான்.
அதில் ஆச்சரியம் அடைய ஒன்றும் இல்லை. என் தாத்தா தமிழ் பேராசிரியராக இருந்ததால் எனக்கு எண்கள் குறித்து தெரிந்துள்ளது. இல்லையென்றால் எனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
நெட்டில் எதேனும் பதிவு இருக்கிறதா என பார்த்தேன்.
தமிழ் விக்கிபீடியாவில் எண்கள் குறித்த பதிவு இருப்பது சந்தோஷமாக இருந்தது.
தமிழில் எனக்கு 1-9 வரை எண்கள் இருப்பது 100, 1000 த்திற்க்கும் எண்கள் இருப்பதும்,fractions கூட தமிழில் இருப்பதை (அரைக்காணி, காணி, முந்திரி என்பதாக) அறிந்து கொண்டேன்.
இவை எல்லாம் முறையாக  ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.
ஆனால் நிச்சயம் இனி தமிழ் எண்கள் புழக்கத்தில் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை. குறைந்த பட்சம் இவ்வெண்கள் பற்றி பள்ளிகளில் சொல்லி தரவாவது செய்யலாம்.
இல்லெயேல் உலகமயமாக்காலின் அவசரத்தில் கட்டாயம் மொத்தமாய் வழக்கொழிந்து போய் விடும்.

சுட்டிகள்:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

http://tamilelibrary.org/teli/numeral.html

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கடவுளின் நகரம் (City of God)



நகரங்கள் என்பவை என்ன? அவை வெறும் வாழ்விடங்கள் மட்டும் அல்ல. அவை மனித நாகரிகத்தின் சாட்சி. அவனது ஆசையின் சாட்சியாய் உருக்கொண்டு அவனது தேவைகளை தாண்டிய இச்சைகள் இயங்கும் இடம் தான் நகரம். இச்சைகளுக்கு விதிகள் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் விதிகளே இச்சைகளால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. நியாயங்கள் உருவாக்கி அழித்துக்கொள்ளப் படுகின்றன.

இந்த விதிகள் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும் . அது சென்னை ஆனாலும் சரி, அல்லது ரியோ டி ஜெனிரோ வாக இருந்தாலும் சரி.
'City of God' ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் கதை. இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் கதை. உண்மை கதை அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். முகத்தில் அறைவதை போல பட ஆரம்பம் முதலே அப்படி ஒரு வேகம்.

கதையில் நிறைய கதைகள். நிறைய கதை மாந்தர். ஒரு கதை சொல்லி. இவர்களை இணைப்பது அவர்களின் சேரி. மற்றும் அவர்களது இச்சைகள். முக்கியமான கதைகள்


1) ஷேகி (Shaggy), கூஸ் (Goose),கிளிப்பர் (Clipper) மூவரும் சிறு திருடர்கள். லில் -சே எனும் சிறுவன் ஒரு ஹோட்டலை கொள்ளை அடிக்க செல்லும் போது அவர்களுடன் செல்கிறான். அவர்கள் கொள்ளை அடிக்கும் போது வெளியில் நிற்கும் லில் சே அவர்கள் போன பின் சும்மா தன் சந்தோஷத்திற்க்காக ஹோட்டலில் உள்ள எல்லோரயும் கொன்று குவிக்கிறான். இதனால் மற்ற மூவரும் போலிசால் தேடப்படுகின்றனர். இதில் க்ளிப்பர் சர்ச்சில் சேர்ந்து விடுகிறான். ஷேகி தன் காதலியுடன் அமைதியாய் வாழ செல்லும் போது போலிசால் சுடப்பட்டு சாகிறான். கூஸ் லில் சேயால் கொல்லப்படுகிறான்.



2) வன்முறை மீது தீராத ஆசை கொண்ட லில்-சே, அவனது நண்பன் பென்னி. பென்னி மனிதர்களின் மீது அக்கறை கொண்டவன். அதனாலேயே அவன் எல்லாருக்கும் பிடித்தவன் ஆகிறான். ஒரு கட்டத்திற்க்கு மேல் அவனால் லில்லுடன் கூட்டாய் இருக்க முடியாமல் கிளம்ப யத்தனிக்கிறான். ஆனால் லில்லை கொல்ல வந்த ஒருவன் தவறி பென்னியை கொன்று விடுகிறான். நண்பனின் சாவால் மேலும் வெறி கொள்கிறான். கொலை கற்பழிப்பு,கொள்ளை என தொடர்கிறான்.
3) நாக் ஒட் நெட்- லில்லின் வெறியில் குடும்பத்தை இழக்கும் இந்த பஸ் கண்டக்டர் அவனை பழி வாங்க மனமில்லாமல் எதிர் கும்பலுடன் சேர்கிறான்.  (கேரட் என்ற போதை வியாபாரி)  . அப்பாவிகளை கொல்லக் கூடாது என்ற ஒப்பந்ததுடன் கேரட்டுடன் சேரும் அவன், பின் அவனே அப்பாவிகளை கொல்லும் சூழலுக்கு செல்கிறான்.வெறும் பழி வாங்கும் போட்டியாக ஆரம்பிக்கும் சண்டை பெரும் கோஷ்டி மோதல் ஆகிறது. அந்த குப்பமே பிணங்களாகின்றன.

4) ராக்கெட் - இவன் தான் படத்தின் கதை சொல்லி , கதாநாயகனும் கூட. இவன் கொள்ளை அடிக்க முடியாமல், காதல் செய்ய முடியாமல் பெரும் பாலும் தோல்வி  மட்டுமே சந்திப்பவன். சட்டென ஒரு நாள் அவன் லில்லை  எடுக்கும் புகைப்படங்கள் பேப்பரில் வர அவன் புகைப்படக் கலைஞன் ஆகிறான். லில்லை அவனது சேரி சிறுவர்கள் அவன் கொடுத்த துப்பாக்கிகளால் கொல்வது, நாக் அவுட் நெட் அவன் கும்பல் சிறுவனை காப்பாற்ற போகும் போது அந்த சிறுவனே கொல்வது (நாக் அவுட் நெட் அந்த சிறுவனின் அப்பவை கொன்றதால் பழி வாங்கல்)  இந்த சம்பவங்கள் எல்லாமே உடனுடனெ ஒரு மணி நேரத்திற்க்குள் நடந்து முடிகிறது. இதை எல்லாம் ராக்கெட் புகைப்படம் எடுக்கிறான். இதோடு படம் முடிகிறது. 


படம் முழுதும் மள மள எனக் கதைகள் சொல்லப்படுகின்றன. சிறு திருட்டுக்களாக ஆரம்பித்து அடுத்தடுத்து  தனி மனிதர்களின் ஆசைகளாலும், வெறிகளாலும்  கொள்ளை, போதை வியாபரம், கொலை, பழி வாங்கல் அழித்தொழிப்பு என படிப்படியாக உச்சம் கொள்கிறது  கதை.

வன்முறையின் அகல ஆழங்களை சம்பவங்களின் தடையற்ற நகர்வினால் நம் முன் நிறுத்தும் இந்த படம், அதே சமயம் அந்த வேகத்திலேயே  மனிதர்களின் உளவியல் கூறுகள் எவ்வாறு அந்த சம்பவங்களின் போக்கை தீர்மானிக்கின்றன என சொல்லி கொண்டே வருகிறது.

உளவியல் ஒரு பக்கம் இருந்தாலும், எந்த  தொடர்புகளும் காரணங்களும் இல்லாமல் வாழ்க்கை போக்கு விதியே என  நிர்ணயிக்கபடுவது நிறைய இடங்களில் உணர்த்தப்படுகிறது.

உதாரணமாக கதை சொல்லி ராகெட்டின் மீது பாயவிருக்கும் தோட்டா வேறேங்கோ யதேச்சயாக சென்று விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் ராக்கெட் கடைசி வரை தன் குருட்டு அதிர்ஷ்டத்தினாலேயே சாகாமல் இருக்கிறான்.


கதையின் ஆரம்பத்தில்  இறைச்சிக்காக ஒரு கோழியை துரத்துகிறார்கள். கதை முடிவில் அதே காட்சி மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. கோழி இறுதி வரை பிடிக்கப்படுவதில்லை. அந்த கோழியின் விதி சாகாமல் போவது தான் போல.
கதையில் வரும் கதை மாந்தர்கள் எல்லாருமே எந்த நொடியில் வேண்டுமானாலும் சாவை தொடக்கூடியவர்கள். சிலர் சாகிறார்கள். சிலர் வாழ்கிறார்கள். சிலர் படம்  முடிந்த பின் கூட சாகலாம். ( உலகின் கதைகள் எல்லாம்  முடிவுக்கு வந்த பிறகும்   கதை மாந்தர்கள் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்குமோ? )
City of God ஒரு சேரியின் தெருக்களில் மூச்சிறைக்க பயந்து ஓடும் ஒரு தெரு நாய் போல அங்கும் இங்குமாய் அலைகிறது. மீண்டும் மீண்டும் அதே தெருக்களின் முக்கிற்கே வந்து நின்று பின் மீண்டும் சுற்றுகிறது. வாழ்க்கை எனும் முடிவில்லா வட்டத்தை ஒரு ரங்க ராட்டினம் போல சுற்றி விட்டு வேடிக்கை காட்டுகிறது.
City of God இன் மற்றுமொர் முக்கியமான விஷயம் வன்முறை.  வன்முறை நம்மை சுற்றி பிணைந்து நெளிகிறது.  பொதுவாய் வன்முறையை ஒரு style , status போல காண்பிக்கும் படங்கள் எனக்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த படம் ஒரு விதிவிலக்கு. என்னையும் தாண்டி அதன் அழகியல் எனக்கு பிடித்திருந்தது. படம் மானுடத்தின் எண்ணிலடங்கா மனக்கூறுகளை, வாழ்வின் அபத்தத்தை, இச்சைகளின் நடனத்தை, வன்முறையின் வழியில் முன்வைக்கிறது.


இந்த எல்லாவற்றையும் விட ‘city of gods' மற்ற எந்த படைப்பையும் விட வேறுபடும் இடம் என்று நான் உணர்வது. குழந்தைகளை அது காண்பித்த முறை. வன்முறைக்காக ஏங்கும் குழந்தைகள் கொலை கொள்ளை,போதை என தங்களையும் தங்கள் பெரியவர்களை போல வார்த்து கொள்கிறார்கள்.  ஆம், பெரும் படைப்புகள் எல்லாம் ஒரு நம்பிக்கையுடன் முடியும். அடுத்த தலைமுறையின் மேல் உள்ள நம்பிக்கையை கோடிடும். ஆனால் ‘city of gods' அதை அழிக்கிறது. அவநம்பிக்கையை முன் வைக்கிறது. இனி குழந்தைகளிடம் பொம்மைகளோ ரோஜாக்களோ கொடுத்து போரடிக்காமல் துப்பாக்கி கொடுத்து ஜாலியாய் கொலை செய்ய பழக்கி விடும் இந்த உலகம் என ரத்தசிவப்பாய் கொடிட்டு அடையாளப்படுத்துகிறது.

திங்கள், 6 செப்டம்பர், 2010

யூத் விகடனில் எனது வலைப்பூ கட்டுரை குட் பிளாக்

என் அடூரின் எலிப்பத்தாயம் குறித்த கட்டுரை யூத் விகடனில் குட் பிளாக் எனும் வகையில் சுட்டியாக (link)  வந்துள்ளது.  மகிழ்ச்சியாய் இருந்தது.
நன்றி விகடன்.

சுட்டி:

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

சனி, 4 செப்டம்பர், 2010

மருது சகோதரர்கள் - ஒரு ஆவணம் (காலச்சுவடு)

மருது சகோதரர்கள் குறித்த ஆவணம் ஒன்றை ஆகஸ்டு காலச்சுவடு இதழில் பி.ஏ.கிருஷ்ணன் (புலி நகக் கொன்றை ஆசிரியர்) முன்வைத்துள்ளார். இதில் மருதுவின் வீர்ம், அவர் மற்றும் அவரது உறவினர் (ஆண் குழந்தைகள் முதற்கொண்டு)எல்லாரும் தூக்கில் இடப்பட்டது, அவரது விதவைகள் சிவகங்கை ஜமீந்தாருக்கு அடிமைகள் ஆக்கப்பட்டது  எல்லாம் குறிப்பிடப்படுள்ளது. அவரே குறிப்பிட்டது போல ஆவணத்தின் நம்பகத்தன்மை சரித்திர ஆதாரமாக கொள்ள தடையாக இருக்கிறது. எழுதிய ஆசிரியருக்கு இந்த புத்தகத்தால் பெரிய லாபம் ஏதும் இல்லாததால் இதில்  நிச்சயம் உண்மைகள் கணிசமான சதவிகிதம் இருக்கும் எனவே நம்புகிறேன். வரலாறு என்பதே இப்படி துண்டுகளாக தொகுப்பாவது தானே.

சுட்டி :
http://kalachuvadu.com/issue-128/page52.asp

http://books.google.co.in/books?id=Z3QIAAAAQAAJ&pg=PA1&lpg=PA1&dq=Mahradu+%E2%80%93+An+Indian+Story+of+the+Beginning+of+the+Nineteenth+Century&source=bl&ots=LdDm9thNnS&sig=B3NQ9YTZkyj0g7nUCiHiAal3Wc8&hl=en&ei=mryBTJ6hL4vRcYiEnagL&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CCwQ6AEwBTgK#v=onepage&q&f=false

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...