கமலின் திரைப்படங்கள் பல உலக திரைப்படங்களின் தழுவல் என சாடும் பதிவை பார்த்தேன் (http://www.karundhel.com/2010/09/blog-post.html). பொதுவாகவே இது தமிழில் கமல் முதற்கொண்டு நிறைய பேர் செய்து வரும் விஷயம். எந்த கதையும் ,படைப்பும் முழுக்க முழுக்க தனித்து நிற்க முடியாது. எதேனும் ஒரு கதையை நினைவு படுத்துவது மிக இயல்பு. ஆனால் தனிச்சையான ஒத்துபோதலை மீறி கட்டமைக்கப்பட்ட தழுவலாக அது நிகழும் போது மூலம் பற்றி குறிப்பிடுவதே அடிப்படை நாகரீகம். இது குறித்த எனது சிந்தனைகளை அந்த பதிவில் கருத்துரை இட்டேன். கருத்துரை தனி பதிவாகக் கூடிய சாத்தியம் கொண்டிருந்ததால் இங்கு பதிவிடிகிறேன்.
---------------------------------------
நீங்கள் சொல்லும் எல்லா தமிழ் படங்களையும் பார்த்த நான் அதன் மூலமாகக் குறிப்பிடும் எதையும் பார்க்கவில்லை. அதனல் அழுத்தமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சில சிந்தனைகள்:
கமலின் எல்லாப் படங்களிலுமே ஹாலிவுட் பாணி structure இருப்பது மிக சுலபமாக யூகிக்கக் கூடிய ஒன்று. அதே போல கதைக் களம், கதை சொல்லும் யுத்தி, வெரைட்யான முயற்சிகள் இவை கமல் தொடர்சியாக முயன்று வந்து கொண்டு இருப்பது.மிக குறைவாகவே அத்தகு முயற்சிகள் நிகழும் தமிழ் திரை துறையில் இவை முக்கியத்துவம் பெறவே செய்கின்றன.
உதாரணமாக ‘planes automobiles..’- ‘அன்பே சிவம்’ .என்னளவில் அன்பே சிவம் பல நல்ல தருணங்களை கொண்ட படம். ப்ளேன்ஸ் மெல்லிய நகைச்சுவை படம் என்றால் அன்பே சிவம் அந்த கதை சொல்லும் யுத்தியை கையாண்ட முற்றிலும் வேறு ஒரு நோக்கத்தை கொண்ட படம். ஒரு படைப்பின் தனித்த்வம் அதன் கலாச்சரப் பிண்ணனி, அதன் நோக்கம், மூலத்தை மீறிய ஆன்மா இவற்றால் தான் நிர்ணயிக்கப் படுகிறது என்பது என் எண்ணம்) இப்படியாக ஒவ்வொரு படத்திற்க்கும் அதிலுள்ள ஒற்றுமை-வித்தியாசங்களை ஆராய முடியும். இந்த ஆராய்ச்சிகளை மீறி தமிழ் சினிமாவிற்க்கு ஏற்கனவே சொன்ன படி மாற்று சினிமா கொடுத்ததில் அவரது பங்கு மறுக்க முடியாதது. அவரது சினிமாக்கள் தமிழில் எப்போதும் தனித்து நிற்பவை. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்திற்க்கு இட்டு செல்ல ஓயாமல் முயல்பவை.
ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டதட்ட எல்லா படங்களுமே எதோ ஒன்றின் சாயலில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இதனால் முக்கியமாய் அடிபடுவது அவரது தனி ஆளுமை. தமிழ் போன்ற மாற்று களம் குறைவாக இருக்கும் சினிமாத்துறையில் இவர் பிற மொழி சினிமாவில் இருந்து நிறைய கடன் வாங்கி தன் பெரும் மேதாவி ஆளுமையை கட்டமைத்து இருக்கிறார். இந்த தவறு அவரை கொண்டாடும் அவரது ரசிகர்களை ,தமிழ் சமூகத்தை அவர்களது ignorance ஐ உபயோகபடுத்தியது ஆகிறது. இந்த தவறை செய்யும் எந்த கலைஞனும் அவன் கலைக்கு அவன் சமூகத்திற்க்கு குற்றவாளி ஆகிறான்.
தனது எந்த படைப்பிற்க்கும் அதன் மூலம் பற்றி குறைந்த பட்சம் பேட்டிகளிலாவது குறிப்பிடாமல் இருப்பது சுத்தமான நேர்மையின்மை. இந்த நேர்மையின்மை வெறும் அவரது inspirations பற்றி குறிப்பிடாதது மட்டிலும் அல்ல. பொதுவாகவே ஒருவித ‘அவார்ட் படம் எடுக்கிறேன் பார்’ தன்மை அவரது படங்களில் இருப்பது போல் எனக்கு தோன்றுவது உண்டு. தன்னை அதிகம் முன்னிறுத்துவது மற்றுமொரு பலவீனம். படைப்பை மீறி படைப்பாளி தெரிகிறான் என்றால் அவனுக்கு ‘அவன்’ தான் முக்கியம் ஆகிறான். (ஹே ராமில் எனக்கு தெரிந்தது சாகெத் ராம் அல்ல பெரும்பாலும் கமல் மட்டுமே )
கமல் ஒரு உதாரணம் மட்டுமே. நிறைய பேர் பிற மொழி நாவல்(சிலர் தமிழ் நாவல்களே கூட) இவற்றை தழுவி எடுக்கும் போது ஏன் அவற்றை குறீப்பிடுவதே இல்லை?? மூலத்தை மீறி அவர்களது படைப்பு தனித்து நின்றால் நிச்சயம் தமிழ்சமூகம் அவர்களை கொண்டாடும். இன்றும் கூட கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஏமாற்றுதலை உணராமல். உணர்ந்தால் இந்த கலைஞர்கள், இவர்களது படைப்புகள் எல்லாம் சுவடில்லாமல் காலத்தில் அடித்து செல்லப்படும்.
நேர்மையின்மையால் அதற்கு கிடைத்திருக்கும் கலை மதிப்பு, அதன் ஆன்மா அதன் அங்கீகாரம் எல்லாமே போலியாகிப் போய்விடும் அபாயம் குறித்து கமல் கவலைப்படுகிறாரோ என்னவோ நான் நிஜமாகவே கவலைப்படுகிறேன்.