ஞாயிறு, 20 ஜூன், 2010

ராவணன் - கம்பன் எங்கு போனான்?



ராவணன் பார்த்தேன் - பார்த்தேன் என்பதை தவிர்த்து எந்த பெரிய அனுபவப் பகிர்தலும் தரவில்லை.

ராமாயணம் , மகாபாரதம் இந்த இரு இந்திய காவியங்களும் இன்று வரை நம் அறம், கலாச்சாரம், வாழ்வியல் என எல்லாவற்றிலும் பங்கு கொண்டிருப்பவை.
இவை இரண்டுமே ஒட்டு மொத்த பாரதத்தின் மனசாட்சியின் ஒரு கூறு. அதனாலயே இவை மேலும் மேலும் அகழப்படுகின்றன,விவாதம், விமர்சனம், தத்துவ தரிசனம் என இவ்விரு மாபெரும் கதைக்களங்கள் முடிவில்லாமல் இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அதில் ஒரு மிக வலுவற்ற முயற்சி மணிரத்னத்தின் ராவணன். ராவணனின் நிலையை பற்றி இந்த நவீன யுகத்தில் அவனது நியாயங்களை முன்வைக்கிறது. மனிதர்கள் கருப்பு வெள்ளை இல்லை. அவர்கள் ஒற்றை தலைக்குள் பத்து தலைகள் இருக்கும் என சொல்கிறது.

இதில் நவீன அரசியலும் உள் நுழைந்து நாம் நம்பிக் கொண்டு இருப்பவை எல்லாம் நமக்கு சொல்லித்தரப்படிருப்பவை என எச்சரிக்க முயல்கிறது. நமக்கு ஹீரோக்களாகத் தெரியும் ராணுவம், போலிஸ் மாவோயிஸ்டுகளுக்கு, வீரப்பனுக்கு,பூலான் தேவிக்கு, சில சமூகப் போராளிகளுக்கு, சில ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வில்லன்களாக தெரிகிறார்கள் ஏன்? அவர்கள் பார்வை கோளாறா? நமதா? அல்லது நாம் ஒரு பகுதி உண்மைக்கு மட்டுமே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமா? ராமாயணம் மூலம் முக்கிய சமூக  கேள்விகளை எழுப்ப முயல்கிறது.

ஆனால் சொல்ல வந்த தத்துவத்தில் முழுமை அடையாமல், சொல்லும் மனிதர்களை தட்டையான  கருப்பு வெள்ளை சாயத்தோடு சொல்லி, எந்த வகையிலும் மூலக் காவியத்தை மீள் வாசிக்கும் திறன் இல்லாமல், சமூக கேள்விகளை அறச்சீற்றம் அற்ற சவசவத்தனதுடன், காதலின் தீவிரம் கைகூடாமல் என எந்த வகையிலும் தன்னை உருவாக்கி கொள்ள திராணியற்ற ஒரு திரைப்படமாக உள்ளது ’ராவணன்’.

மற்றபடி காட்டின் ஆன்மாவை காமிரா மட்டுமே உள்வாங்கி கதை தவறவிடுவதால் பயனற்றுப் போகும் அழகியல் குறித்த வருத்தம் , மிக மோசமான வசனங்கள், கேட்டுப் பழகிய இசை-- என திரையரங்கு விட்டு வெளி வந்த அடுத்த வினாடி   ‘ராத்திரிக்கு என்ன டிஃபன், ஷாப்பிங் போக ஆட்டோ பிடிக்கனும் ’ என சட்டென மறைந்து போனது ஒரு பெருங்காவியத்தின் மீள் பதிவு.
-

புதன், 9 ஜூன், 2010

பழைய பரண்-- கவிதை 2.


அலுவலக வேலையாய் இந்தப் பக்கம் வர
எட்டிப் பார்த்து விட்டு சென்றவன்
ரயில் வர தாமதமானதும் என் ஞாபகம் வந்து
காபி குடித்துக் கிளம்பியவன்
கூட்டமொன்று முடிந்து கடைசி பேருந்து விட்டதில்
என் படுக்கையருகில் அயர்ந்து தூங்குபவன்
யாரையும் அழைக்க மறந்தால் வம்பென
பத்திரிக்கை தர வந்தவன்
என யார் யாரோ எது எதற்கோ வர
எனக்காக மட்டுமே வருபவனுக்காக
காத்திருந்து சோர்ந்திருக்கும் முன் வாசல்..

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...