சனி, 24 ஏப்ரல், 2010

அருந்ததி ராய்,ஜிந்தால்,கம்ரேடுகள், இன்ன பிற சொற்கள்....

சில நாட்களாக நிறைய குழப்பங்கள்.  எது சரி எது தவறு. நான் எங்கு இருக்கிறேன்..யாருக்கு சார்பாய் நான் இருக்க வேண்டும்? என் சக மனிதன் எப்படி இருக்கிறான்? நான் அவனுக்காக கவலை பட்டு என்ன ஆகும்? படும் கவலை, என் தயக்கம் என் பயம் இவற்றை தாண்டி எங்கு செல்லும்?
அருந்ததி ராயின் மாவோயிஸ்ட்கள் பற்றிய கட்டுரையை அவுட்லுக்கில் படித்த பிறகு தெளிவற்ற சிந்தனைகள். ராயின் கட்டுரை மிகுந்த பக்க சார்பு உள்ளது. உணர்ந்தே அவர் அதை செய்துள்ளார். ஏனெனில் இரு தரப்பில் ஒரு தரப்பை மட்டுமே ஊடகமும், அரசும் முன்னிறுத்துவதால்.  அவர்களது பக்கம் நமக்கு தெரிய வேண்டும்.. ஏன் இந்த போராட்டம்.. இந்த போரட்டத்தின் வன்முறை எதன் அடிப்படையில் நியாயப்படுத்தப் படுகிறது? இவர்கள் நிஜமாகவே நம் நாட்டின் 'அதிமுக்கியமான் பாதுகாப்பபிற்க்கு ஊறு தரும் பிரச்சனை'யா?? ஏன் இவ்வளவு பெரிதாய் வளர்ந்தார்கள்? அவர்கள் பெரும் தீவிரவாத கும்பலா அல்லது எளிய  பழங்குடியினரா?. எளிமையான கிராம மக்கள். ஏன் ஒரு அரசாங்கத்தை எதிர்க்கும் குழுவாகினர்? பெண்கள், குழந்தைகள் எல்லார் கையிலும் ஏன் துப்பாக்கி? இந்த கேள்விகள் இரு தரப்பு பற்றியும் தெரிந்து கொண்ட பிறகே அலசப்பட வேண்டியவை. தரப்புகள் குறித்து எத்தனை படித்தாலும் உண்மை அதில் ரத்தமும் துப்பாக்கியுமாய் போராடுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.  உண்மை எதுவாகவே இருந்தாலும் ஒரு எளிய பழங்குடி மக்கள் துப்பாக்கி ஏந்தி இந்த அளவு பெரும் இயக்கமாய் வளர சும்மா ‘ஒரு மணி நேர மின்சாரம் போச்சே’ பிரச்னையாக இருக்க போவதில்லை. அவர்கள் வாழ்வாதார பிரச்னையாக தான் இருக்க போகிறது.  ஏன் இது அதிகம் விவாதிக்க படவில்லை. மலையின் கனிம வளம் வன வளம் பாரம்பரியம் குறித்த பற்று அந்த பழங்குடியனருக்கு இருப்பதில் ஒரு சதவிகிதமாவது நம் அரசாங்கத்திடம் இருக்கிறதா? நம் கணிமங்கள் ரெட்டி சகோதரர்களுக்கும், வேதந்தா, ஜிண்டால் போன்ற பெரு நிறுவனங்களால் பங்கு கொடுக்க பட்டு அழிக்கப்பட்டு வருகிறதா? அடித்தட்டு மக்களின் குடிசைகளும், பெண்களின் கற்பும்,  உணவும், சொத்தும் முதலாளிகளால், ஆளுவோரால், காக்கும் படையினரால், சூரையாடப்படும் போது அவர்கள் அரிவாளோடு, துப்பாக்கியும் ஏந்துவது சரியா தவறா?
ஒரு சார்பை ஹீரோவாகவும் ஒரு சார்பை வில்லனாகவும் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். உயிர் விட்ட படையினரின் சொற்ப உதவித்தொகை குறித்து கோபம் கொண்ட விகடனாரின் தலையங்கம் ஏன் சிவப்பு துணி கட்டியவர்களின் மரணத்திற்க்கு மவுனம் கொண்டு இருந்தது ஏன்? வெளிப்படையாகவே அசாம், மெகாலயா போன்ற மாநிலங்கள் பற்றி மத்திய அரசு வருடக்கணக்காக மெத்தனம் காட்டுவதும் பின் அவர்கள் கோபம் கொண்டால் தேசத்தின் பாதுகாப்பிற்க்கு ஊறாக நினைப்பது ஏன்?
பொதுவாகவே நாம் காரணங்கள் குறித்து யோசிப்பதில்லை. ஒரு கோபத்தின் நியாயத்தை அது வருடகணக்காக ஆறாமல் பொங்கி கொண்டு இருப்பதன் காரணத்தை விவாதிப்பதில்லை. வன்முறை அதற்க்கு பதிலடி பின் மேலும் வளரும் வன்முறை என ஒரு தொடர் நிகழ்வாக நீங்காத பெரும் பிரச்னையாக மாற்றிக் கொள்கிறோம்.

பாதுகாப்பு ஊறு.

இப்படி யோசனைகள் இந்த வாரம் முழுவதும் இருக்க, இதே சமயத்தில் குஜராத்தில் காந்திதாம் என்ற இடத்திற்க்கு  நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன் அங்கு இரும்பு உருக்கு ஆலை ஒன்றில் தர கட்டுப்பாடு சான்று தர சென்று இருந்தான். காலையில் அந்த ஆலை இருந்த இடம் தெரியவே இல்லை. காற்று முழுதும் கருப்பு துகள்கள். இரும்பு துகள்கள் மலை மலையாய். ஆலையின் உள்ளே உருக்கும் சூடு. இரும்பு தகதகத்து உருகி ஓடுகிறது. 5 அடி அருகில் பணியாள்ர்கள் சிரித்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்.  பல பேர் 12 மணி நேர ஷிப்டில் வேலை என நண்பன் சொன்னான். சில நாள் முன்னால் அவர்களது பதுகாப்பு குறித்தெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். சில நாள் முன்னால் கிரேனில் இருந்து இரும்பு குழாய்கள் நழுவி விழுந்ததாகவும் நல்ல வேளையாக யாரும் கீழே இல்லை எனவும் நண்பன் சொன்னான். ஜிந்தாலில்  *(அல்லது ஏதோ ஒரு பெரு நிறுவனத்தில்) எங்கோ ஒரு சுரஙத்தில் மண் சரிந்து சில பணியாளர்கள் இறந்ததாகவும்  அது வெறுமனே வட்டார செய்தித்தாளில் ஒரு சிறிய பெட்டி செய்தியாக வந்ததாகவும் சொன்னான். இரண்டு நாள் முன்னால் தினகரன் பெங்களூரு பதிப்பில் சில வருடங்கள் முன் வான்வழி தூவப்பட்ட Endosulfan  பூச்சிகொல்லிகளால் கிரமத்து மக்கள் பலரும் பக்கவாதம், ஆண்மைக்குறைவு போல் பிரச்சனைகளால் பாதிக்கபட்டு இருப்பதாக பகிரங்கமாக அரசு ஒப்புக்கொண்டதாகவும் குடும்பத்திற்க்கு நஷ்ட ஈடு தர ஒப்புகொண்டதாகவும் படித்தேன். துண்டு துண்டான இந்த செய்திகளால்  நாட்டின் பாதுகாப்பு ஊறு யார் என்ற கேள்வி மீண்டும் என்னுள் எழுந்தது.

காசர்கோட்டில் Endosulfanஆல் பாதிக்கபட்டவர்


ஆனாலும் விதர்பா தற்கொலைகள், மாவோயிஸ்ட் பிரச்சனைகள், போலி மருந்துகள் போன்றவையோடு நித்யானந்தர்-ரஞ்சிதா, ஐ.பி.எல் இறுதி போட்டிகள், விஜய் அரசியல் என எல்லாம் தாங்கி நம் ஊடகங்கள் சொற்களை மக்கள் விருப்பிற்கேற்ப உற்பத்தி செய்து சந்தையில் தள்ளுகின்றன. குவிந்து கிடக்கும் சொற்களில் நாமும் கொஞ்ச நேரம் மாவோயிஸ்டுகள், காம்ரேடுகள், நித்யா, டெண்டுல்கர், சுறா, சஷி தரூர்ர் எல்லாம் பேசி முடித்து விடுவோம். கவலை படாதீர்கள் அடுத்த சீசனிலும் கொஞ்சம் கம்ரேடுகளோ - போலிசோ இறப்பார்கள், கொஞ்சம் விவசாயிகள் தற்கொலை செய்வார்கள், அதை விட முக்கியமாய் 20-20 உலக கோப்பை நடைபெறும், ரஞ்சிதா பேட்டியை எதோ ஒரு பத்திரிக்கை வாங்கி இருக்கும், சுறா ஓடி முடிந்து எறா, எந்திரன் எல்லாம் வரும். அதனாலே மக்களே நாட்டில்  நெல்லுக்கு பஞ்சம் வந்தாலும் சொல்லுக்கு பஞ்சம் வராது.. பேசினோம்.. பேசுகிறோம், இன்னும் பேசுவோம்.....

சுட்டிகள்:
அருந்ததி ராய் அவுட்லுக் கட்டுரை

Endosulfan பிரச்னைகள்

.

திங்கள், 12 ஏப்ரல், 2010

கேல்வினும் ஹாப்ஸும் (calvin and hobbes தமிழில்)



 
பெரிதாக்க படத்தின் மேல் சொடுக்கவும்.

மூலம்  இங்கே  (மூலம் தமிழுக்கு ஏற்றவாறு  மாற்றப்பட்டுள்ளது)

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தமிழ் சினிமா சில அயோக்கியத்தனங்கள்..

கீழுள்ள பத்தி  ’டூரிங் டாக்கீஸ்’ என்ற ஓர்குட் குழுமத்தில் 3/10/08 அன்று நான் செய்த பதிவின் மீள்பிரசுரம்.

தமிழ் சமூகத்தில் சினிமாவின் இடம் எல்லாருக்கும் தெரிந்தது.. சினிமா செல்லாத இடம் இல்லை. ஆனால் நம் சினிமா சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது? சமூகத்தின் எண்ணங்களை வாழ்வியல் நெறிகளை பெருமளவு மாற்ற கூடிய ஆயுதமாக சினிமா உள்ளது.. ஆனால் வணிக ரீதியான வெற்றிக்காக கீழ் நிலை சமரசங்களை எடுத்தாளும் சில இயக்குனர்களை நினைக்கும் போது கோபத்தை விட வருத்தமே எனக்கு அதிகம். இவைகளை சமரசங்கள் என்று சொல்வதை விட அவர்களது மன நிலையே அப்படி தான் இருக்கிறது.. அதையே அவர்களது படைப்புகளும் பிரதிபலிக்கிறது என்றே தோன்றுகிறது.
நகைச்சுவை என்பது நம் அனைத்து திரைப்படங்களிலும் முக்கிய பகுதி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை எந்த நிலையில் உள்ளது? நகைச்சுவை என்ற பெயரில் நடக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றி எழுத தோன்றியது.. காரணம் நெடு நாளாகவே இது என் மனதை சங்கடப்படுத்திய ஒன்று.

ஹாலிவுடின் ஒரு படம் "shallow hal" வணிக பார்முலா நகைச்சுவை படம். ஆனால் வணிக யுக்திகள் அனைத்தும் இருந்தும் நாகரிகமான நகைச்சுவை படம். அழகான பெண் காதலியாய் கிடைக்க எண்ணும் ஒரு சராசரி இளைஞன், ஒரு மனோதத்துவ டாக்டரால் அக அழகு உள்ளவர்களையே புற அழகு உள்ளவர்களாகவும் காணும் மன நிலை அடைகிறான். ஒரு குண்டுப் பெண்ணை அழகான பெண்ணாக எண்ணி காதலிக்கிறான். அழகான குழந்தைகளை பார்க்கிறான்.. அந்த குண்டுப் பெண்ணோடு பழகும் ஒரு அழகான வாலிபனை பார்கிறான்.. இறுதியில் எல்லாம் சரியான பிறகு அந்த அழகான குழந்தைகள் தீயில் கருகிய குழந்தைகள், அழகான வாலிபன் அவ்வளவு அழகு இல்லாதவன் என்றும் தெரிகிறது, இறுதியில் அந்த குண்டுப் பெண்ணை தன் காதலோடு முழுமையாக ஏற்கிறான் (பரிதாபத்தினால் அல்ல) என படம் அழகு குறித்த நம் மனப்பான்மையை பற்றி யோசிக்க வைக்கிறது. இது ஒரு முழு நீள நகைச்சுவை வணிக படம்.. நுணுக்கமாக பார்த்தால் 'shallow hal' நிறைய குறைகள் உள்ள படம் தான், ஆனால் ஒட்டுமொத்தமாக மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மனநிலை கோளாறு பற்றி யோசிக்கும் படம்.
தமிழில் இது போன்ற படம் எதிர்பார்க்க முடியுமா? தெரியவில்லை. (நெடு நாள் முன்பு நானும் ஒரு பெண் வந்தது.. ஆனால் அதிலும் பச்சாதாபமே அதிகம் கையாளப்பட்ட உணர்வு) இது போல் வர வேண்டாம். இதற்க்கு எதிர் மறையான படங்களாவது வராமல் இருக்கலாம். 
நமது நகைச்சுவை பெரும்பாலும் சமூகத்தின் மாறுபட்ட உடல், வாழ்க்கை முறை உள்ள சிறுபான்மையினர் பற்றிய கிண்டலாகவே அமைந்து உள்ளது.. அழகு, மாறுபாடு, குறை பாடு இவற்றை ஏற்க முடியாத தன்மை இயல்பானது. ஆனால் மட்டுப் படவேண்டிய ஒரு உணர்வு.. சக மனிதனை அவனது மாறுபாடுகள் நீங்க ஏற்பது அடிப்படை மனித நெறி. இதை கிண்டல் செய்வது அயோக்கியத்தனம் அன்றி வேறென்ன??

கவுண்டமணி செந்தில் எப்போதும் மாறு கண் உள்ள பெண்கள், கறுப்பு பெண்கள் இவர்களை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்கள். அடுத்து உயரம் குறைவானவர்கள் இவர்கள் எப்போதும் நகைச்சுவை பகுதிக்கு தான்.. 
பேரழகன் படத்தில் சூர்யா காதலுக்கு ஜோதிகா தான். ஒரு உயரம் குறைந்த பெண்ணை அவர் அவமதிக்கிறார். அந்த பெண்ணும் ஒரு நகைச்சுவை பாத்திரமாக கோமாளி போல வந்து போகிறார்.. . இந்த நியாய தர்மங்கள் எனக்கு புரிவதே இல்லை. காது கேளாதவர்களும் கிண்டலுக்கு பாத்திரமானவர்களே.... முன்பு இத்தகைய பல நகைச்சுவை காட்சிகளை ரசித்து உள்ளேன்.. இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறேன். இவற்றை எல்லாம் வெறும் நகைச்சுவையாக மட்டுமே எடுத்து கொள்ளும் பரந்த மனப்பான்மை இப்போது எனக்கு போய் விட்டது.. சமிபத்தில் ஒரு திருமங்கையின் blog படித்த போது இந்த கேலியும் கிண்டலும் அவர்களை எந்த அளவு வேதனை படுத்தும் என உணர முடிந்தது. அரவாணிகளை நாம் எதோ கிண்டல் செய்ய மட்டுமே பிறந்தவர்களை போல் கையாளும் கையவாளித்தனம் என்று ஒழியும்? எத்தனை படங்கள் எத்தனை பாடல்கள் ?

அரசியல் கன்றாவிகளை அம்பலமாகும் காட்சிகளை நறுக்க தவறாத சென்சார் போர்ட் இதையெல்லாம் ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.. எல்லாவற்றையும் ஏற்று கொண்டு செல்லும் மனபோக்கு நம்மிடம் தாராளமாக உள்ளது.. just ஜோக் தானே, சினிமா தானே... இதெல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது .. ரொம்ப யோசிக்க கூடாது.. இது தான் நம் மனநிலை.. மாறுபாட்டை கிண்டல் செய்வது நமக்கு ஜோக் அவர்களுக்கு உயிர் வேதனை என்று எப்போது உணரப் போகிறோம்??

இது போன்ற காட்சிகளை உதாரணம் சொல்ல எத்தனையோ படங்கள் உள்ளன. எடுத்துக்காட்ட நினைத்தால் ஏகப்பட்ட காட்சிகள் மனதில் வருகின்றன.. சமிபத்தில் ஓர் பால் விழைவு உள்ளவர்கள் பற்றி கிண்டல் ஆரம்பித்து உள்ளது.. மொழி போன்ற தரமான படமாக கருதப்படும் படங்களும் இதில் விதி விலக்கல்ல. இவை நகைச்சுவையா ? 

சமூகத்தின் அங்கிகாரம் அற்ற சாராரை, சற்று மாறுபட்ட புற லட்சணங்கள் உள்ளவர்களை கிண்டல் செய்ய மட்டும் தான் தோன்றுமா?

23 ஆம் புலிகேசி போன்ற பொறுப்புள்ள சில நகைச்சுவை படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களின் எந்த உணர்வுகளை தூண்ட வேண்டும் தூண்ட கூடாது என்ற பொறுப்பு கடமை படைப்பாளிக்கு உள்ளது. (23 ஆம் புலிகேசியில் கூட அரவாணி ஒருவர் அந்தப்புர அழகிகளின் மேற்பார்வையாளராக காட்ட படுகிறார். யதார்த்தத்தில் எப்படி இருக்கிறது /இருந்தது என்பது முக்கியம் அல்ல. ஒரு சமூகத்தின் மன நிலை மாற வேண்டி இருக்கும் போது இப்படி காண்பிப்பது தேவையா? வடிவேலு அவருக்கு பணம் கொடுத்து வேலையை விட்டு அனுப்பும் போது ஒரு கீழ் நிலை ஆளாகவே அவரை நடத்துகிறார்.. இதை சிம்பு தேவன் போன்ற படைப்பாளி வேறு விதமாக கையாண்டிருந்தால் எத்தனை நன்றாக இருந்து இருக்கும்!)

காது கேளாதோர், வாய் பேசாதோர், மாறு கண் உள்ளோர், கறுப்பான பெண்கள், மாறுகண் உள்ளவர்கள், குண்டானவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், தொழு நோய் உள்ளவர்கள், உயரம் குறைந்தவர்கள்,வயதானவர்கள்,அரவாணிகள்,ஓர் பால் விழைவு உள்ளவர்கள், எல்லாரையும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள், மக்களும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள்!!
நமது ஹீரோக்கள் ஆனால் பெண்களின் பாகங்கள் பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்கள், அவர்கள் கற்பு பற்றி பக்கம் பக்கமாய் வசனம் பேசுபவர்கள், ரவுடிகள்,கொலை செய்பவர்கள், கொள்ளை அடிப்பவர்கள்,இரு தாரம் கட்டியவர்கள், புகை பிடிப்பவர்கள், சோகம் வந்தால் தண்ணி அடிப்பவர்கள்.. உண்மையில் இந்த பண்புகளே கிண்டல் செய்ய படவேண்டிய பண்புகள். ஆனால் இவை இன்றைய heroism..

ஒரு பொறுப்பான சமூகம் யாரே எல்லாம் அக்கறையுடன் அணுக வேண்டுமோ அவர்களை எல்லாம் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.. யாரை எல்லாம் மறுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் கதாநாயகர்களாக வரித்து கொண்டு உள்ளோம்.
இந்த அநியாயம் ஓயும் வரை நமது கலை ஒரு நோயாளிக் கலையே. நமது சமூகம் இதை பார்த்து சிரித்து மகிழும் வரை ஒரு நோயாளி சமூகமே..

நகைச்சுவை செய்ய தெரியவில்லை என்றால் "shallow hal" பார்க்க வேண்டாம் .. நமது nsk, தங்கவேலு, சந்திரபாபு இவர்களது நகைச்சுவையை பாருங்கள்.. போதும் போதும் எனும் அளவு அவர்களிடம் கற்று கொள்ளலாம் சிரிக்க வைக்க..

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

நான் வித்யா - வாழும் புன்னகை




”நீங்க ஒரு திருநங்கை ..நமக்கு அதுல பிரச்னை இல்லை. ஆனா போற வர்ற வழியில யாரவது உங்கள கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க? இதனால ஆபீசுக்கு எந்த தொந்தரவும் இருக்காதே?”

சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன் ‘ ஒன்னும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானது தான். இப்பக் கூட வர்ற வழியிலே ஆட்டோ ஸ்டாண்ட்லேர்ந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேர அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாய்த்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டு வந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கிற விதத்துல தான் சார் இருக்கு. அதயும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சுத்தான் ஆகணும்.’ என்ற என் ப்தில் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.
‘என்னைக்கும்மா ஜாயின் பண்றீங்க?’ என்று கேட்டார்.
அந்த கணத்தை என்னால் மறக்கமுடியாது. எத்தனை காலப் போராட்டம்! ஒரு வேள்வி மாதிரி தான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். இதோ பலனளிக்கிற நேரம். ‘நாளைக்கே சேர்ந்துடறேன் சார்!’ என்று சந்தோஷமாகச் சொன்னேன்.... காலம்காலமாக அடிமையாக இருந்து விட்டு திடீரென்று விடுதலை பெற்றவளைப் போல் என்னை நான் உணர்ந்தேன். 

நான் சரவணன்  வித்யா - புத்தகத்திலிருந்து..

யார் நிஜமான போராளி? நிறைய உணர்ச்சிகளோடு பேசுபவனா? வன்மையோடு எழுதுபவனா? தன் மக்களை ஒரு சாராருக்கு எதிராய் தூண்டி விடுபவனா? நிறைய தத்துவச் சிக்கல்களை ஆராய்பவனா? என்னளவில் இதில் யாரும் எத்தனை உச்சத்தில் இருந்தாலும் போராளி அல்ல. எவன் தன் சுய அடையாளத்திற்காகவும் தன் இனத்தின் அடையாளதிற்காகவும்   நம்பிக்கையுடன் போராடுகின்றானோ அவன் தான் போராளி.
வித்யா ஒரு போராளி. ஆண் உடலில் தன் பெண்மையை  சுமந்து கொண்டிருக்கும் அவள் கேட்பதெல்லாம் மிக எளிய கேள்விகள். நான் ஒடுங்கி வாழ நான் செய்த தவறு என்ன? நான் ஏன் பிச்சை எடுக்க தள்ளப்படேன்? எனக்கு ஏன் குறைந்த பட்ச அங்கீகாரம் கூட இந்த அரசும் சமுதாயமும் செய்ய மறுக்கிறது?
இவளின் குரல் காலம் காலமாய் ஒடுக்கபட்ட இனத்தவரின் குரலில் இருந்து மாறுபட்டதில்லை. நீ ‘ச்சீ’ என்று ஒதுக்க, நீ வசை பாட, நீ கீழே போட்டு மிதிக்க நான்  ஒன்றும் ஒன்றுக்கும் ஆகாதவள் அல்ல.  நான் தவறு செய்யவில்லை. சமரசம் செய்யவில்லை. நான் என் சுயத்தை கழுவியவள் இல்லை. உன்னிடம் யாசகம் கேட்கவில்லை. நான் வாழ்வேன். உன் முன்னால். என் இனம் வாழும் என துணிந்து நிற்பவள் வித்யா.
அவள் வாழ்க்கை புத்தகத்தை படித்தேன்.
இலக்கியங்கள் தரும் ஒரு சங்கடத்தை வாழ்க்கையின் நிலையின்மை குறித்த பயத்தை , அதே சமயம் வாழ்க்கை ஒரு கொண்டாடப்பட வேண்டிய மகானுபவம் என்ற நம்பிக்கையை அந்த புத்தகம் தந்தது.
அது இலக்கியமா? இல்லை
பிரச்சாரமா? கிட்டத்த்ட்ட
அழகியல்? ம்ஹ்ம்ம்..
தொடக்க நிலை எழுத்தா? ஆமாம்.
ஆனால் எழுத்து இதை எல்லாம் மீறி நம்மை அசைக்கும். வடிவம், அழகு, கட்டமைப்பு, பொருள் என எல்லாம் புறவயமானவை. ஒரு படைப்பின் அகம் அதன் நேர்மையில் இருக்கிறது. அறச்சீற்றத்தில் இருக்கிறது. அது நம் மேல் எழுப்பும் அனுபவத்தில் இருக்கிறது. இந்த புத்தகத்தில் இவை எல்லாமும் உள்ளதா தெரியவில்லை. ஆனால் என்னுள் இதன் அகம் சுத்தமானது என்ற உணர்வு. அவன் (சரவணன்) அவளாய் (வித்யா) மாறி தன்னை மீட்டெடுக்கும் நாட்கள் நம் முன் விவரிக்க படும் போது இது யாரோ ஒருவரின் வாழ்க்கை அல்ல. நம் சமூகத்தின் வேறொரு முகத்தை காட்டும் கண்ணாடி என புரிகிறது.
 கூன் ,குருடு என உடல் மாறுபாடு உள்ளவர்கள் மேல் காட்டப்படும் கரிசனம் ஏன் சுயம் மாறியவர்கள் மேல் எற்படுவதில்லை. கிண்டலும் முகச்சுளிப்பும் வீசப்படுவது ஏன்? நம் கரிசனமும் பச்சாதாபமும் எத்தனை போலியானது. எத்தனை பாரபட்சமானது .
ஆனால் வித்யா சமூகம் குறித்தும் அதன் போலி முகம் குறித்தும் புலம்பவில்லை. அவளின் மூலதனம் சமூகத்தின் அழுகிய பகுதி குறித்த பயம் அல்ல. அதன் பசிய இலைகள் மேல் அவளுக்கு அபார நம்பிக்கை. ஆம். மானுடம் குறித்த நம்பிக்கை குறைந்தால், இருந்து என்ன ஆகப் போகிறது.
அவளோடு வந்தவர்கள் கிண்டல் செய்தவர்கள் அல்ல. பச்சாதாப கேஸ்கள் அல்ல. சக மனிதனை சக மனிதனாக மட்டுமே பார்க்கும் யதார்த்தவாதிகள்.
ஆம் வாழ்க்கை எத்தனை எளிமையானது தெரியுமா? உன்னோடு கூட வருபவனுக்கு அவனுக்குரிய மரியாதை, கொஞ்சமாய் அன்பு இது மட்டும் போதும் . யாரும் ஒடுங்கி வாழப்போவதில்லை.

வித்யா இன்று வாழும் புன்னகையாக மலர்ந்து இருக்கிறாள். ஒரு புன்னகை மலர எத்தனை வலி என்று நான் சங்கடப்படுவதா அல்லது அவள் மலர்த்திய புன்னகை மானுடம் தோற்பதில்லை என்பதற்க்கான சான்றென நம்பிக்கை கொள்வதா? இல்லை இன்னும் ஒரு லட்சம் புன்னகைகள் ஒடுங்கி வெறும் உதட்டு சுளிப்பாக பம்பாயில் யாசகம் பெற்று வாழ்வதை நினைத்து பொருமுவதா? தெரியவில்லை.
அவள் செய்யும் புன்னகை வெறும் குறியீடு மட்டுமே. அடையாளம் அல்ல. அவள் புத்தகத்தின் கடைசி பக்க்கங்கள் இரஞ்சுவது ’வாழ விரும்புகிறேன் தன்மானத்துடன்’ என்பதே.
புத்தகத்திலிருந்து மேலும் ஒரு பகுதி.
ஒரு முறை பீல்ட் ஒர்க்கிற்க்காகச் சென்றுகொண்டிருந்த போது சில சிறுவர்கள் என்னை பார்த்து ‘ ஊரோரம் புளிய மரம்.. ‘ என்று பாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு அதிகபட்சம் இருந்தால் பத்து பதினோரு வயதுக்குள் தான் இருக்கும். யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது? என்னைப் பார்த்ததுமே கிண்டல் செய்யும் எண்ணம் எப்படி உதிக்கிறது? பிறவியிலேயே அது வருமா? ரத்தத்திலேயே இருக்குமா? இதுவும் ஒருவித ஆதிக்க மனோபாவம் இல்லையா? சாதி மத இன மொழி வித்தியாசங்களே இதில் கிடையாது. திருநங்கையா? கிண்டல் செய். சந்தர்ப்பம் கிடைத்தால் தாக்குதல் செய். அவமானப்படுத்து. அழச் செய். அலறி ஓடச் செய். 
என்ன உலகம் இது? நான் திகைப்புடன் அந்த சிறுவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக ஒரு சிறுவன் தான் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாக்கெட்டைச் சடாரென்று என் மீது வீசி விட்டு ஓடினான். சற்றுத் தொலைவிலிருந்து அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிரித்தார்கள். சில பெண்களும் கூட. 
எனக்கு புரிய வேண்டியது இது தான். நான் இவர்களுக்கு என்ன தாறு இழைத்தேன்? ... எனக்கு வாய்த்த நிறம். எனக்கு வாய்த்த உடல். எனக்கு வாய்த்த இயல்பான பெண்மை. இது ஏன் யாருக்கும் புரியவில்லை???

இத்ற்கு மேல் நான் என்ன சொல்ல?? ஒருவரின் வாழ்வின் வலி நமக்கு பரிகாசம் என்றால் அந்த அசிங்கம் பற்றி எத்தனை பக்கம் எழுதி என்ன ஆகப் போகிறது.
http://livingsmile.blogspot.com/

புத்தக விவரங்கள்:
Naan, Vidya,
'Living Smile' Vidya Copyright
216 Pages, Rs100
ISBN: 978-81-8368-578-8
Kizhakku Pathippagam.

மோகமுள்-- பட்டால் போர்த்திய சீழ் ( ஒரு விமர்சனப் பார்வை)

தமிழின் மிகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாகப் பார்க்கப்படும் படைப்பு மோகமுள். பல நாட்களாக அப்புத்தகத்தை படிக்க எண்ணியிருந்தாலும் , மோகமுள் ...