பைத்தியக்காரன் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் ஆற்றிய
எதிர்வினை பொதுவில் என் உ குறித்த சிந்தனைகளை பிரதிபலிப்பவையாக இருந்ததால் அதை என் வலைப்போவில் பதிவிட தோன்றியது.
பைத்தியக்காரனின் பதிவு காதல் போன்ற உறவுகளின் புனிதம் வெறும் கற்பிதமே. இவற்றின் மூலம் சுயநலமே என்பதாக அமைந்த பதிவு
எனது எதிர்வினை..
நல்ல பதிவு... இது குறித்து எண்ணங்கள்.. உயிரியல் ரீதியான கட்டாயங்களை சமூக அவதானிப்புகளோடு தொடர்புபடுத்தி உறவுகள் குறித்து அணுகியுள்ளீர்கள். ஒழுக்கம் , புனிதம், சமூக நியாங்கள் எல்லாமே காலம் நிலவியல் கலாச்சாரப் பின்னணி இவற்றின் அடிப்படியில் நிகழ்ந்து தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவது. நேற்றைய தலைமுறை புனிதமாய் கருதியது இன்றைய தலைமுறை அசட்டுதனமாய் கருதுகிறது. நமது புனிதங்கள் வேறு சமூகத்திற்கு ஒன்றுமில்லாததாய் தோன்றலாம். ஆக இவை அறிவியல் விதிகள் அல்ல. இவை சமூகம் தன் பாதுகாப்பிற்காக தான் தன் கட்டமைப்புக்கு உகந்த முறைகள் நெறிகள் புனிதங்கள் இவற்றை தன் மக்களின் மேல் திணிக்கிறது..
இது ஒரு புறம் .. ஆனால் உயிரியல் ரீதியான கட்டாயங்கள் அல்லது உந்துதல்கள் எப்போதும் சுயநலம் சார்ந்தே இருக்கும்.இருக்க முடியும். இது டார்வினிய தத்துவம் அன்றி வேறொன்றும் புதிதல்ல. நம் எல்லா செயல்பாடுகளுமே நம்மை நிறுவுவதற்காக மட்டுமே நிகழ முடியும் என்பது உயிரியல் கோட்பாடு. உறவுகள் இதன் அடிப்படையில் உருவாகுபவை தான். காதலின் முக்கியமான நோக்கம் நீங்கள் சொல்வது போல் தன்னுள் உள்ள தன் எதிர்பாலினத்தை கண்டடையும் சந்தோசம் அல்ல. தன் இனத்தை பெருக்கு இயற்க்கை உந்துதலின் மேல் கட்டமைக்கபடும் உணர்வுகள். காதல் காமத்தின் கருவி என்பது தான் அதன் உயிரியல் நோக்கமாக இருக்க முடியும் . அனால் மனிதன் தன் சிந்தனைகள் உணர்வுகள் இவற்றின் மூலம் அதற்க்கு மேலும் மேலும் அர்த்தங்கள் கற்பித்து கொள்கிறான். அவ்வாறு வளர்த்து எடுத்து கொண்டும் உள்ளான். உயிரின் ஆதி இச்சைகளான வாழுதல் மற்றும் இனம் பெருக்குதலை மீறி மானுடம் தன்னை நிகழ்த்தி உள்ளது. இதற்க்கு காரணம் மானுடத்திற்கு உள்ள சௌகர்யம் - சிந்தனை- ஆதி இச்சைகளை மிக சுலபமாய் பூர்த்தி செய்துவிடும் நிலை மனிதனுக்கு இருக்கும் போது அதை மீறி அவன் சிந்தனைகளை ஏதேனும் ஒன்றுக்கு அர்த்த படுத்தி கொள்ளும் நிலை அவனுக்கு உண்டு. உறவுகளை சார்பு - தேவை என்ற ரீதியில் மட்டுமே பார்க்கும் மனநிலை சற்று அபாயகரமானது என்று அவன் உணர்ந்து இருக்க வேண்டும். ஏனெனில் அப்படி நினைக்கும் போது அதை சுலபமாய் முறித்து கொள்ளவும் முடியும். இது சமூகம் என்ற சார்பு சார்ந்த கட்டமைப்பை சிதைக்கவும் கூடும். இதே அடிப்படையில் உயிரியல் ரீதியான விளக்கமும் கொள்ள முடியும். உணர்வு ரீதியான தொடர்பு வாழ்கையின் மிக சௌகர்யமான தொடர்புகளுக்கு ஏற்ற முறை. நம் மூளை எனும் தலைமை செயலகம் அதனாலே கர்பகலத்தில் ஒருவிதமான உணர்வுகள் ,எதிர் பாலிடம் ஒருவிதமான உணர்வுகள், மூப்பில் ஒருவித உணர்வுகளை நம்முள் நிகழ்த்துகிறது. இதே உணர்வு ரீதியான தொடர்பு ஒரு நாய் மனிதனிடம் கொண்டுள்ள உணர்வோடு பெரிதும் வேறுபடுவதல்ல. எத்தனை சுயநலமான தொடர்பு அது. ஆனால் நாய்க்கு தன் வளர்ப்பரிடம் உள்ள பிரியம் நிஜமே. ஜீன்ஸ்/செல்பிஷ் ஜீன்ஸ் போன்ற புத்தகங்கள் சொல்லும் அடிப்படை உயிரியல் சுயநலம் தான் எல்லாமே.